தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் போராட்டம் – பாஜக என்ன சொல்கிறது?

தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் போராட்டம் - பாஜக என்ன சொல்கிறது?

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூர், மாண்டியா உள்ளிட்ட நகரங்களில் விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் ஒரு நாள் பந்த் நடத்துவதால், கர்நாடகா – தமிழகம் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு பாசன நீர் திறப்பதில், இருமாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. ஆண்டுதோறும் மழையில்லாத நேரங்களில், கர்நாடாகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பதால், பிரச்சினைகள் எழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இப்படியான நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, ஆகஸ்ட் முதல் கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கவில்லை. இதனால், ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கான நீர் திறப்பு குறித்து, மீண்டும் இருமாநிலத்துக்கும் இடையில் பிரச்சினை வெடித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா அரசு நீர் திறக்க வலியுறுத்தி, தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனு தாக்கல் செய்ததுடன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவில், ‘‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதத்தில் திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்,’’ எனக் கோரியிருந்தது.

இருமாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவிரி மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 18ம் தேதி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 5,000 கன அடி வீதம், 15 நாட்களுக்கு நீர் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு!

ஆனால், உத்தரவை அமல்படுத்த மறுத்த கர்நாடகா அரசு, ‘போதிய பருவமழை இல்லாததால், எங்களிடம் போதிய நீர் இல்லை, நீர் திறக்க முடியாது,’ எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும், தண்ணீர் திறக்க வேண்டும்,’ என செப்டம்பர் 21ம் தேதி உத்தரவிட்டது.

இதனையடுத்து, கர்நாடகா அரசு, செப்டம்பர் 23ம் தேதி முதல், தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட்டது. அன்று முதல் கர்நாடகா விவசாயிகள் சங்கம், கன்னட அமைப்புகள் கண்டனத்தை பதிவு செய்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது எனக்கூறி ஆங்காங்கே போராட்டத்தை துவங்கினர்.

போராட்டக்காரர்கள் கைது!

இப்படியான நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து, பெங்களூரில் 26ம் தேதி ஒரு நாள் பந்த் நடத்த, கர்நாடகா ஜல சம்ராக்‌ஷனா சமிதி சார்பில் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி இன்று பந்த் துவங்கிய நிலையில், பெங்களூரில் மட்டுமே, கர்நாடகா கரும்பு விவசாயிகள் சங்கம், பல விவசாயிகள் சங்கங்கள், கன்னட அமைப்புகள், வணிகர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் அமைப்பு என, 195 அமைப்புகள் பங்கேற்றுள்ளன.

பெங்களூரில் காலை, 7:00 மணிக்கே பந்த் துவங்கிய நிலையில், நகரின் பெரும்பாலான பகுதியில் பஸ், ஆட்டோ சேவை ரத்து, கடைகள் அடைப்பு என, நகரமே வெறிச்சோடி காணப்பட்டன. பந்த் நடத்த அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் பந்த் நடத்திய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, பெங்களூர் ஃப்ரீடம் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரைப்போல மாண்டியா, மைசூர் மற்றும் ராம்நகரா மாவட்டங்களிலும் விவசாயிகள் சங்கங்கள் பந்த் நடத்தினர்.

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு முதல்வர், கர்நாடக அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம்

பெங்களூரில் விவசாயிகள் சங்கங்கள், தமிழக அரசு மற்றும் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கர்நாடகா செல்லும் தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்கள், கர்நாடகா – தமிழக மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள அத்திபள்ளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் 430 தமிழக பஸ்கள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகா எல்லைக்குள் கர்நாடகா மாநில பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதர சரக்கு வாகனங்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பெங்களூர் செல்ல இருமாநில போலீஸாரும் அனுமதியளித்து பாதுகாப்பு வழங்கினர்.

அத்திபள்ளி மற்றும் பெங்களூர் நகரின் சில பகுதிகளில், திறக்கப்பட்டிருக்கும் கடைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற கனடா அமைப்பினர் மிரட்டல் விடுத்ததால், பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா ஜல சம்ராக்‌ஷனா சமிதி சார்பில் பந்த் நடந்திருந்தாலும், காவிரி பிரச்சினையில் வழக்கமாக போராட்டம் நடத்தும் கன்னட அமைப்பை சேர்ந்த வட்டாள் நாகராஜ் வரும் செப்டம்பர் 19ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்ததால், அவரது அமைப்பு சார்ந்தவர்கள் யாரும் இன்று பங்கேற்கவில்லை.

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

பெங்களூரு நிலைமை எப்படி?

பந்த் தொடர்பாக பெங்களூரில் நிலை எப்படியிருக்கிறது என, பெங்களூரில் உள்ள சிலரிடம் பிபிசி தமிழ் விசாரித்தது.

பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி பொறியாளரான அர்பித், ‘‘எலெக்ட்ரானிக் சிட்டி முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்டோ மற்றும் இதர போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மருந்துக்கடைகள் மட்டுமே செயல்படுகிறது. எங்கள் நிறுவனம் நேற்றே அறிக்கை ஒன்றை அனுப்பி, இன்று அலுவலகம் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது,’’ என்றார்.

பெங்களூர் மடிவாலா பகுதியில் வணிக நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ், ‘‘நகரில் பெரும்பாலான பகுதிகளில் பந்த் காரணமாக அனைத்துமே முடங்கியுள்ளது. எங்கள் அலுவலக உத்தரவுப்படி இன்று வீட்டில் இருந்து பணி செய்கிறோம். பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், பதற்றமான சூழல் நிலவுவதால் தமிழக பதிவெண் கொண்ட பைக் மற்றும் கார்களை வெளியில் எடுத்துச் செல்லவே அச்சமாக உள்ளது,’’ என்றார்.

இப்படியான நிலையில் பந்த் தொடர்பாக கர்நாடகா எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

காங்கிரஸ் தி.மு.கவின் ‘பி டீம்’!

பெங்களூர் பந்த் தொடர்பாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பக்கத்தில், ‘‘தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்ததை கண்டித்து இன்று பெங்களூரில் நடக்கும் பந்த்-க்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. நமது கட்சியினர் இந்த போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். நீதிக்கான போராட்டம் அமைதியாக இருக்கட்டும்,’’ எனத்தெரிவித்துள்ளது.

நிருபர்களிடம் பேசிய மத சார்பற்ற ஜனதா தளம் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘‘கர்நாடகா காங்கிரஸ் கட்சி, இன்று உரிமைக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்துள்ளது. போராட்டக்காரர்களை இரவோடு இரவாகவே கைது செய்துள்ளது, காங்கிரஸின் உச்சபட்ச தீங்கான ஆட்சியை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் அரசு கன்னட மக்களுக்காக செயல்படாமல், தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கர்நாடகா காங்கிரஸ் தமிழக தி.மு.கவின் ‘பி டீம்’ ஆகத்தான் செயல்படுகிறது,’’ என, காட்டமாக தெரிவித்திருந்தார்.

’தொடர் போராட்டம் நடத்துவோம்!’

பிபிசி தமிழிடம் பேசிய கர்நாடகா பா.ஜ.க மாநில செய்தித்தொடர்பாளர் மோகன் விஸ்வா, ‘‘கர்நாடகா நீர் வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகத்தான் செயல்பட்டு வருகிறார். இங்கு நீர் பற்றாக்குறையால் விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை அவர் காது கொடுத்துக்கூட கேட்பதில்லை. மாறாக டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏக்களை கவருவதிலும், அரசியல் செய்வதிலும் தான் கவனம் செலுத்துகிறார்.

அவர் நீர் வளத்துறையின் ஒரு பணியையும் செய்வதில், அவரின் இந்த ‘பெய்லியர்’ காரணமாகத்தான் இன்று விவசாயிகள் ரோட்டுக்கு வந்து போராடுகின்றனர். விவசாயிகளுடன் கர்நாடகா பா.ஜ.க துணை நிற்கிறது. இன்று நடந்த பந்த்–யில் கூட பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்று கைாதாகியுள்ளனர். நாங்கள் எங்கள் உரிமையை பெற, அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுப்போம், தொடர் போராட்டம் நடத்துவோம்,’’ என்றார்

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், X/CA Mohan Vishwa

‘காவிரி நீர் கர்நாடகத்துக்கு மட்டுமானதல்ல’

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவில் நடக்கும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பயிரைக் காப்பற்றலாம் என நம்புகிறோம். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். ஒரு கூட்டாட்சி தத்துவத்தில் உயர்ந்து நிற்பது உச்ச நீதிமன்றம், அதன் உத்தரவை ஓர் அரசாங்கத்தை நடத்துபவர்கள் புறக்கணிக்க முடியாது.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு, 5000 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக விவசாயிகள் அவர்களுக்குரிய தண்ணீரை நாம் கேட்பதாக தவறாக நினைக்கிறார்கள். காவிரி ஆற்று நீர் கர்நாடகத்துக்கு மட்டுமானதல்ல, காவிரி கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி அந்த மாநிலத்தைவிட தமிழகத்தில் தான் அதிக இடங்களில் ஓடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிக்குத்தான் அதிக உரிமை உண்டு. ஆகவே, கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை,’’ என்றார் அமைச்சர் துரைமுருகன்.

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், TWITTER

மேலும், தொடர்ந்த அவர், ‘‘தண்ணீர் மிகையாக இருக்கும் காலத்தில் இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால், சிக்கலான நேரத்தில் காவிரியில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்துக்கான பங்கை கர்நாடகம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. மொத்த நீரையும் திறந்து விட கேட்கவில்லை, எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விட கேட்கிறோம். எனவே உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் தற்போது கர்நாடக அரசு உள்ளது. காவிரி நீர்ப்பங்கீடு விகாரம் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது, பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமுமில்லை,’’ எனப்பேசியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *