
பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி கடைசி நேர பரபரப்புக்குப் பிறகு வெற்றி பெற்றது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் முழுவதுமே சரியாக ஆடாத சூர்ய குமார் யாதவ் இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணி சேஸிங்கின்போது கடைசி ஓவரில் ஆட்டம் ஒட்டுமொத்தமாகப் மாறி கையைவிட்டுச் செல்லும் நிலைக்குச் சென்றது. கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் வெற்றிக்குத் தேவை. ரிங்கு சிங் களத்தில் இருந்தார். சீன் அபாட் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரிங்கு சிங் 2-ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
இந்திய அணி வெற்றிக்கு 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்ததால், இந்தியாவின் வெற்றி உறுதியானது என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால், 3-வது பந்தில் அக்ஸர் படேல்-2 ரன்கள் சேர்த்த நிலையில் அபாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்ச்சி
அடுத்து களமிறங்கிய ரவி பிஷ்னோய் வந்தவேகத்தில் ரன் அவுட் ஆகினார், அர்ஷ் தீப் அடுத்து பேட் செய்யவந்தார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் வெற்றிக்குத் தேவை. 5-பந்தைச் சந்தித்த ரிங்கு சிங் ஒரு ரன் எடுத்து 2 ஆவது ரன் ஓட முயன்றபோது, அர்ஷ்தீப் சிங்கும் ரன் அவுட் ஆகி இந்தியாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட் காலியானது.
கடைசிப்பந்தில் இந்திய அணி வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. எளிதாக வெற்றி பெறக்கூடிய ஆட்டத்தை இப்படி ஹைபிரஷர் ஆட்டமாக இந்திய பேட்டர்கள் மாற்றிவிட்டனர்.
அபாட் வீசிய கடைசிப்பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
கேப்டன் பதவி ஏற்று முதல் ஆட்டத்திலேயே சூர்யகுமார் யாதவ் பாஸ் ஆகியுள்ளார். ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார் யாதவின் வெற்றி
ஹைதராபாத்தில் நேற்று நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்த கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.
இங்கிலிஸ் சதம் வீண்
ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்கிலிஸ் உலகக் கோப்பைக்குத் தேர்வாகி ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் வகையில் பேட் செய்யவில்லை. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்துவைத்து நேற்றைய ஆட்டத்தில் வெளுத்துவாங்கினார். 47 பந்துகளில் சதம் அடித்த இங்கிலிஸ்110 ரன்களில்(8சிக்ஸர்,11பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
ஸ்மித் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவர் அடித்ததுதான் ஆஸ்திரேலிய அணியில் பெரியஸ்கோராகும் மற்றவகையில் எந்த பேட்டரும் ஸ்கோர் பெரிதாக செய்யவில்லை.ஆனாலும், ஜோஷ் இங்கிலிஷ் அடித்த சதம் நேற்றை ஆட்டத்தில் வீணாகிப் போனது. 2வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் சேர்ந்து இங்கிலிஸ் 130 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பெருமைக்குரிய தருணம்
வெற்றிக்குப்பின் சூர்யகுமார் யாதவ் பேசுகையில் “ வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்களும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு அதன்பின் வெற்றி பெற்றோம். கேப்டனாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தியாவுக்கு பிரதிநிதியாக இருந்து விளையாடுவது மகிழ்ச்சியான தருணம். பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்த்தேன் ஆனால் இல்லை. சிறிய மைதானம் என்பதால் சிக்ஸர், பவுண்டரி அடிப்பது சுலபமாக இருந்தது. இலக்கைப்பற்றி கவலைப்படாமல் பேட் செய்ய இஷானிடம் தெரிவித்தேன். ரிங்குவின் கடைசி நேர ஆட்டம் அருமை. 3 வேகப்பந்துவீச்சாளர்களும் கடைசி டெத் ஓவர்களில் ரன்கள் ஏதும்வழங்காமல் சிறப்பாகப் பந்துவீசினர்” எனத் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் முயற்சி
இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்து வந்த சூர்யகுமார் யாதவ் 80 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் கையைவிட்டுச் சென்றுவிடும் என்று ரசிகர்கள் பதற்றப்பட்டனர். ஆனால், ஐபிஎல் நம்பிக்கை நாயகன் ரிங்கு சிங் 19-வது ஓவரில் 7 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அணியை கொண்டு சென்றார். கடைசி ஓவரிலும் வெற்றியை எளிதாக இந்தியஅணி நெருங்கினாலும், அடுத்தடுத்து விக்கெட் சரிவு சற்று பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் அதற்குள் அணியைத் தயார் செய்யும் முனைப்பில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இறங்கியுள்ளன. அதன் முன்னோட்டமாகவே 5 போட்டிகள் கொண்டடி20 தொடரில் ஆஸ்திரேலிய-இந்திய அணிகள் விளையாடுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
பேட்டர்களின் சொர்க்கபுரி
ஹைதராபாத் ஆடுகளம் தட்டையாகவும், பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாகவும் இருந்ததால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் எப்படிப் பந்துவீசினாலும் பேட்டர்களின் பேட்டை நோக்கியே வந்தது. இதனால் இங்கிலிஸ், ஸ்மித் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை வெளுத்து வாங்கி, உரித்து எடுத்தனர்.
தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 13 ரன்களி்ல் பிஸ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2வது விக்கெட்டுக்கு இங்கிலிஸ், ஸ்மித் சேர்ந்தபின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
குறிப்பாக பிஷ்னோய் வீசிய 8-வது ஓவரில் இங்கிலிஸ், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 19 ரன்கள் விளாசினார். அதேபோல பிஸ்னாய் வீசிய 12-வது ஓவரிலும்2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 18 ரன்கள் வெளுத்தார். பிஸ்னாய் வீசிய 15-வது ஓவரில் இங்கிலிஸ் 3 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து வெளுத்தார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த இங்கிலிஸ் 47 பந்துகளில் சதம் அடித்தார். அதாவது அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்தார்.
பவர்ப்ளே ஓவரில்கூட ஆஸ்திரேலிய அணி பெரிதாக ரன்களைச் சேர்க்க முடியாமல் திணறி ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இங்கிலிஸ் களமிறங்கியபின்புதான் ஆட்டம் தலைகீழானது.100 ரன்களை 11.3 ஓவர்களில் எட்டிய ஆஸ்திரேலிய அணி அடுத்த 100 ரன்களை 18.5 ஓவர்களில் எட்டியது. அதாவது, அடுத்த 41 பந்துகளில் 100 ரன்களை எட்டியது. 47 பந்துகளில் சதம் அடித்த இங்கிலிஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆரோன் பிஞ்ச் வைத்திருந்த சாதனையை சமன் செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார் யாதவுக்கு சோதனை
சூர்யகுமார் இதற்கு முன் மும்பை அணிக்கு 36 முறை கேப்டன்ஷிப் செய்திருந்தாலும் நேற்றைய ஆட்டம்தான் அவரின் திறமைக்கு உரைகல்லாக இருந்தது. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தது, பேட்டர்களின் பேட்டுக்கே பந்து செல்வதால் ரன்ரேட் எகிறுகிறது, பந்துவீச்சாளர்களை எப்படி மாற்றினாலும் இங்கிலிஸ், ஸ்மித் வெளுத்து வாங்கியதால், சூர்யகுமார் சற்று கலங்கிப்போனார்.
இதனால் பவர்ப்ளே ஓவருக்குப்பின் அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் என இருவரையும் சூர்யகுமார் பந்துவீசச் செய்யும் பலனில்லை. அதிலும் ரவி பிஸ்னாய் ஓவரை இங்கிலிஸ் கிழித்து தொங்கவிட்டார். வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவு எடுக்காததால், சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி சற்று முள்கீரிடமாக இருந்தது.
சேஸிங் ஒன்றே நம்பிக்கை
அவரின் நம்பிக்கை அனைத்தும் ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தமுடியவில்லை, சேஸிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் இருந்தது. இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அர்ஷ்தீப் மட்டும் தொடக்கத்தில் ஓரளவுக்க சிறப்பாக வீசினார் ஆனால் கடைசி நேரத்தில் டெத் ஓவர்களில் அவரின் பந்துவீச்சும் பலிகடாவானது.
ரவி பிஸ்னாய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 பேருமே ஓவருக்கு 12 ரன்களை வாரி வழங்கினர். ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிரமம் கொடுக்கும் அளவுக்கு சுழற்பந்துவீச்சில் உயிர் ஏதும் இல்லை. குறிப்பாக லைன் லென்த்தில் பெரும்பகுதியான பந்துகளை வீசவில்லை. ரவி பிஸ்னாய் பந்தை டாஸ் செய்கிறாரே தவிர லைன் லைன்த்தில் வீசாமல் ஓவர் பிட்சாக வீசுவதால் பேட்டர்களுக்கு பெரிய ஷாட்களை ஆட ஏதுவாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
திணறிய பந்துவீச்சாளர்கள்
அர்ஷ்தீப், பிரசித்கிருஷ்ணா பந்துவீச்சும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரக்கூடியதாக இல்லை. ஓவருக்கு 3 பந்துகள் மட்டுமே துல்லியமான லைன் லென்த்தில் வீசினர், இதனால் தவறான பந்துகள் வீசப்படும்போதெல்லாம் சிக்ஸர், பவுண்டரிகள் பறந்தன. உலகக் கோப்பைக்கு 6 மாதங்கள் இருக்கும்நிலையில் அதிகமான உழைப்பு அவசியம் என்பது தெரிகிறது.
இந்திய அணியில் 8-வது வரிசைவரை பேட்டர்களை வைத்திருந்தாலும் அதில் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஒருவரும் இல்லை. ஆக்ஸர் படேலை ஆல்ரவுண்டர் வரிசையில் சேர்க்கும் அளவுக்கு பெரிதாக ஏதும் விளையாடவில்லை. பேட்டர்களை நம்பியே இந்திய அணி களமிறங்கியது.
ஆமதாபாத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடுகளம் மெதுவானதால் சூர்யகுமார் யாதவால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. ஸ்லோ பால் வீசி சூர்யகுமாரை எளிதாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வெளியேற்றிவிட்டனர்.
ஆனால், ஹைதராபாத் ஆடுகளம் தட்டையான, கடினமாக இருந்ததால், சூர்யகுமார் யாதவுக்கு அல்வா சாப்பிட்டது போன்று இருந்தது. ஒவ்வொரு பந்தும் பேட்டரின் பேட்டுக்கே வேகமாக வந்ததால், பெரிய ஷாட்களை அடிக்க வசதியாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
கெய்க்வாய்டின் டயமண்ட் டக் அவுட்; கிண்டல் செய்த ஸ்டாய்னிஸ்
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், நல்ல தொடக்கத்தை அளித்தாலும், தகவல் பரிமாற்றம் புரிதல் இல்லாததால், கெய்க்வாட் தேவையின்றி ரன்அவுட் ஆகினார். கெய்க்வாட் ரன் அவுட் ஆகியபோது, ஜெய்ஸ்வாலைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ் மிகவும் கிண்டலாக சிரித்தது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையானது. ஜெய்ஸ்வாலும் 8 பந்துகளில் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
டயமண்ட் டக் அவுட் என்பது என்ன?
ஒரு பேட்ஸ்மேன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆவதை டக் அவுட் என்பார்கள். தான் சந்திக்கும் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனால் அதை கோல்டன் டக் அவுட் என்பார்கள். அதுவே இரண்டாவது பந்து என்றால் சில்வர் டக் அவுட் என்றும், மூன்றாவது பந்து என்றால் வெண்கல டக் அவுட் என்றும் கூறுவார்கள்.
எந்தப் பந்தையுமே சந்திக்காமல் அவுட் ஆவதைத்தான் டயமண்ட் டக்அவுட் என்கிறார்கள். டைம்டு அவுட் முறையிலும், எதிர்முனையில் நின்று பந்தைச் சந்திக்காமலேயே ரன் அவுட் ஆவதும் இந்த வகையில் சேரும்.

பட மூலாதாரம், Getty Images
எந்தப் பந்தையுமே சந்திக்காமல் அவுட் ஆவதைத்தான் டயமண்ட் டக்அவுட் என்கிறார்கள்.
நம்பிக்கையளித்த இஷான் கிஷன், சூர்யகுமார் கூட்டணி
இஷான் கிஷன், சூர்யகுமார் கூட்டணி 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை நிமிர்த்தியது. 3வது விக்கெட்டுக்கு இருவரும் 112 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இஷான் கிஷன் 37 பந்துகளில் அரைசதம் அடித்து 58ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்துவந்த திலக் வர்மாவும் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
சூர்யகுமார், ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி குறித்து ரசிகர்ளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. சூர்யகுமார் 29பந்துகளில் அரைசதம் அடித்து 80ரன்களுடன் வலுவாக இருந்தார். ஆனால் 18-வது ஓவரில் பெஹரன்டார்ப் பந்துவீச்சில் சூர்யகுமார் 80ரன்களில் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார், ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி குறித்து ரசிகர்ளுக்கு எந்த சந்தேகமும் இல்லை
எல்லைக் கோட்டி தாண்டி அடித்தும் சிக்ஸர் இல்லை
கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ரிங்கு சிங் 19-வது ஓவரில் பவுண்டரி உள்பட 7 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அபாட் வீசிய முதல் பந்தில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி அடித்து, 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது, 4வது, 5-வது பந்துகளில் வரிசையாக விக்கெட் சரியாக கடைசிப் பந்தில் இந்திய அணி வெற்றி்க்கு ஒரு ரன் தேவைப்பட்டது. கடைசிப்பந்தில் ரிங்கு சிங் லாங்ஆன் திசையில் சிக்ஸர் விளாச இந்திய அணி 214 ரன்கள் சேர்த்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அபாட் கடைசிப்பந்தை நோ-பாலாக வீசியதால், ரிங்கு சங் அடித்த ஷாட்டை சிக்ஸர் கணக்கில் எடுக்காமல் இந்திய அணிக்கு ஒரு ரன் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் 209 ரன்கள் சேர்த்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியிலும் பெஹரன்டார்ப் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசி 6 ரன்ரேட் வழங்கினார். மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஓவருக்கு12 ரன்கள் என்ற ரீதியில் ரன்களை வாரி வழங்கினர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்