வாரணாசி இந்து பல்கலைக்கழக மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதானவர்களுக்கு பாஜகவுடன் என்ன தொடர்பு?

வாரணாசி இந்து பல்கலைக்கழக மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதானவர்களுக்கு பாஜகவுடன் என்ன தொடர்பு?

ஐ.ஐ.டி பனாரஸ் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு

பட மூலாதாரம், ANURAG/BBC

ஐ.ஐ.டி பனாரஸ் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டின்படி, இந்த சம்பவம் நவம்பர் 1ஆம் தேதி பனாரஸ் இந்து பல்கலைக்கழக (பிஎச்யூ) வளாகத்தில் நடந்தது.

சம்பவம் நடந்து சுமார் 60 நாட்களுக்குப் பிறகு, மூன்று குற்றவாளிகளான குணால் பாண்டே, ஆனந்த் என்கிற அபிஷேக் சவுகான் மற்றும் சக்சம் படேல் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

குற்றத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காசி மண்டலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்” என்றார்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐ.ஐ.டி பனாரஸ் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு

போலீசார் கூறுவது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசியின் மூத்த போலீஸ் அதிகாரிகள் பிபிசிக்கு தகவல் அளித்தனர்.

டிசிபி ராம்சேவக் கவுதம் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட மூவரும் சனிக்கிழமை இரவு அவர்களது வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்” என்றார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது” என்றார்.

சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாமதம் குறித்து டிசிபி கெளதத்திடம் கேட்டபோது, ​​”இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்தன. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கு முன் அவர்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்து, வெளியே வர வைப்பது எங்கள் உத்தியின் ஒரு பகுதியாகும்” என்றார்.

“குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளதா என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம். தேவைப்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்படும்” என்றார்.

ஐ.ஐ.டி பனாரஸ் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு
படக்குறிப்பு,

நியமனக் கடிதம்

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு

இந்த முக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் பாஜகவின் ஐடி விங் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது.

குற்றவாளிகள் கட்சியின் பல முக்கிய தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த தகவல்களின்படி, குணால் பாண்டே வாரணாசியில் உள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் வாரணாசி தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார் சக்சம் படேல்.

ஐடி விங் செயற்குழுவில் அபிஷேக் என்ற ஆனந்த் உறுப்பினராக இருந்துள்ளார். பாஜக காசி மாகாணத் தலைவர் திலீப் பட்டேலின் தனிப்பட்ட செயலாளர் தான் இந்த சக்சம் படேல் என்றும் கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் சமூக ஊடக சுயவிவரங்கள் இந்தத் தகவல்களுக்கு ஆதரவாக மேற்கோள் காட்டப்படுகின்றன. பாஜக தலைவர் ஒருவரின் லெட்டர்ஹெட்டில், குற்றவாளியின் பெயருடன் வழங்கப்பட்ட நியமனக் கடிதமும் வைரலானது. இந்த கடிதத்தின் நம்பகத்தன்மையை பிபிசி உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பலர் அதை உண்மை என்று கூறி வருகின்றனர்.

பாஜக தலைவர்களும் முறைசாரா உரையாடல்களில் கட்சியுடனான குற்றவாளிகளின் உறவை ஒப்புக்கொள்கிறார்கள்.

மூவரையும் கட்சியில் இருந்து பாஜக நீக்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது தொடர்பாக பாஜக தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாஜக ஐடி பிரிவுடன் தொடர்பு இருப்பது குறித்து கேட்டபோது, ​​“இது விசாரணையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.ஐ.டி பனாரஸ் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு

பட மூலாதாரம், Getty Images

2 மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி, கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, அதிகாலை 1.30 மணியளவில், ஐஐடி பிஎச்யூவின் பி.டெக் மாணவி, தனது விடுதியான நியூ கேர்ள்ஸ் ஹாஸ்டலில் இருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார்.

சிறிது தொலைவில் அமைந்துள்ள காந்தி ஸ்மிருதி விடுதி சந்திப்பில் அவரது நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் கர்மன் வீர் பாபா கோயிலுக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது புல்லட்டில் வந்த மூவரும் அவர்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எஃப்.ஐ.ஆர் படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாணவியின் நண்பரைத் தாக்கியதாகவும், துப்பாக்கி முனையில் மாணவியின் ஆடைகளைக் கழற்றிய பின்னர், பாலியல் ரீதியில் அவரை துன்புறுத்தியதாகவும், அதை வீடியோவாகவும் பதிவு செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை சொன்னால் வீடியோவை வைரலாக்கி விடுவோம் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஐஐடி பிஎச்யூ மற்றும் பிஎச்யூ பிற துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், வளாகத்தில் பாதுகாப்பின்மையை சரிசெய்ய வேண்டுமெனவும் பத்து நாட்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்குப் பிறகு, பிஎச்யூ அவுட்போஸ்ட் பொறுப்பாளர் விசாரிக்கப்பட்டார் மற்றும் உள்ளூர் லங்கா காவல் நிலையத்தின் காவல் நிலையப் பொறுப்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஐ.ஐ.டி பனாரஸ் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு
படக்குறிப்பு,

பாஜக மாவட்டத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா

பாஜக கூறியது என்ன?

பாஜக மாவட்டத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா, முறைசாரா உரையாடலில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐடி செல் உறுப்பினர்கள்” என்று கூறினார்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் வெளியானவுடன் அவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, வாரணாசியில் பல பெரிய பாஜக தலைவர்கள் இந்த விஷயத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தவிர்ப்பதைக் காண முடிந்தது.

நகரின் வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முத்திரை, நீதிமன்ற கட்டணம் மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான ரவீந்திர ஜெய்ஸ்வால் ஒரு முறைசாரா உரையாடலில் “குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஊடகங்களுக்கு கூறினார்.

ஐ.ஐ.டி பனாரஸ் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு
படக்குறிப்பு,

அஜய் ராய்

எதிர்கட்சிகளின் கேள்விகள்

இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவிடம் காங்கிரஸ் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறது. இதில் பாஜக மற்றும் வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக லங்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, பாஜக தலைவர்களுடன் குற்றவாளிகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அஜய் ராய் தனது சமூக வலைத்தளமான Xஇல் வெளியிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் அவர் ஏற்கனவே கூறியதை மீண்டும் ஒரு காணொளி மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி, சமாஜ்வாடி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் அசுதோஷ் சின்ஹா, “தற்போது உத்தரபிரதேசம் குற்றச்செயல் மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு பாஜக தலைவர்களே பொறுப்பு” என்றார்.

ஐ.ஐ.டி பனாரஸ் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு

பட மூலாதாரம், Ajay Rai/X

‘நரி-வந்தன்’, ‘ஆன்டி ரோமியோ’, ‘பேட்டி பதாவோ, பேட்டி பச்சாவோ’ போன்ற பாஜகவின் பெண்கள் அதிகார முழக்கங்கள் வெற்று முழக்கங்கள் தான் என்றார்.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் ராய் துப்சாந்தி சமூக வலைதளங்களில், “பெண்களை வணங்குவது போல் நடிக்கும் பாஜகவின் உண்மை முகம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் சமூக வலைதளங்களில் பாஜகவிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதையடுத்து உள்ளூர் தலைவர்கள் அரசை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *