
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள ஊசி மருந்து ஆண்களுக்குச் சிறந்த கருத்தடை மருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்ட ஒரு பரிசோதனை மருத்துவ உலகில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
ஏழு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட ஆண் கருத்தடை ஊசியின் மருத்துவப் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
அதாவது இப்போது இந்த ஊசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் இந்த ஊசி செலுத்திக்கொண்டால் எந்தவிதமான தீவிர பக்கவிளைவுகள் இல்லை என்றும், இந்த ஊசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மருத்துவ பரிசோதனைகள் எவ்வாறு நடத்தப்பட்டன?
இந்த மருந்தின் மூன்றாவது மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் கடந்த மாதம்தான் ஆண்ட்ராலஜி ஜர்னல் ஆய்விதழில் வெளியிடப்பட்டன.
ரிவர்சிபிள் இன்ஹிபிஷன் ஆஃப் ஸ்பெர்ம் அண்டர் கைடன்ஸ் (Reversible Inhibition of Sperm Under Guidance-RISUG) எனப்படும் இந்த ஊசி, முறையாக அனுமதி பெறுவதற்கு முன், மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
டெல்லி, உதம்பூர், லூதியானா, ஜெய்ப்பூர் மற்றும் காரக்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த பரிசோதனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சோதனையில், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட 303 ஆரோக்கியமான, பாலுறவில் ஈடுபடும் திருமணமான ஆண்கள் மற்றும் அவர்களது மனைவிகளும் சேர்க்கப்பட்டனர்.
இந்த தம்பதிகள் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை மற்றும் சிறுநீரகவியல் துறையுடன் தொடர்பு கொண்டபோது மட்டுமே சோதனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஜோடிகளுக்கு வாஸெக்டமி தேவைப்பட்டது அல்லது இனி குழந்தைகள் வேண்டாம் என முடிவெடுத்த குடும்பங்களாக இருந்தன.
இந்த சோதனைகளின் போது, வழிகாட்டுதலின் கீழ், ஆண்களுக்கு 60 மி.கி. அளவுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
புதிய ஊசி மருந்து அனைத்து பரிசோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளது என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.
கருத்தடைக்கு இது எந்த அளவுக்கு உதவும்?
ஐசிஎம்ஆர் அதன் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளில் இந்த ஊசிதான் இன்றுவரை அனுமதிக்கப்பட்ட அனைத்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) கருத்தடைச் செயல்முறைகளிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது. மேலும் இது எந்தவிதமான தீவிர பக்க விளைவுகளையும் கொண்டதாகவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அசோஸ்பெர்மியாவின் இலக்கை அடைவதில் இந்த ஊசி மருந்து 97.3% வெற்றி பெற்றதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், இது கர்ப்பத்தைத் தடுப்பதில் 99.02% பயனுள்ளதாக இருக்கிறது.
அஸோஸ்பெர்மியா என்பது விந்தணுக்களை வெளியிடுவதில் ஏற்படுத்தப்படும் தடையாகும். ஒருமுறை ஊசி போடப்பட்டால், அது சுமார் 13 ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்காலகட்டத்தில் கர்ப்பத்தைத் தடுக்க முடியும்.
ஆணுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகள் (OCP) ஒரு பெண்ணை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கர்ப்பத்திலிருந்து தடுக்க உதவியாக இருக்கும்.
அதே நேரத்தில், காப்பர் டி என்ற கருத்தடை சாதனம் நீண்ட காலத்திற்கு கர்ப்பத்தைத் தடுக்க உதவியாகக் கருதப்படுகிறது.
வாஸெக்டமி என்பது நிரந்தர கருத்தடைக்கான ஒரு அறுவை சிகிச்சை முறையாகும்.
ஆனால் 13 ஆண்டுகள் என்பது ஆண்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உதவுவதால் நிரந்தரமானதாகவோ அல்லது பயனுள்ளதாகவோ இந்த மருந்தை அனைவரும் பார்க்கும் நிலை ஏற்படாது என கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
புதிய ஊசி மருந்து மாற்றத்துக்கான ஒரு தொடக்கமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?
கர்ப்பத்தைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட மருந்துகள் பெண்களுக்கு தங்கள் குடும்பத்தைத் திட்டமிடுவதற்கான சுதந்திரத்தை அளித்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், கருத்தடைக்கான பொறுப்பையும் இந்த மருத்துவ முறைகள் பெண்களின் மீதே சுமத்தின.
புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது, இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிகப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
அதேசமயம் ஆண்களிடம் குடும்பக் கட்டுப்பாட்டிற்கான பொறுப்பை எடுத்துக்கொள்வதற்குப் போதுமான வழிகள் இல்லை என்று சொல்ல முடியாது.
ஆண்களுக்கு ஆணுறைகள் கிடைக்கின்றன. சமீபகாலமாக இதற்கு மாத்திரைகளைப் பயன்படுத்தும் நடைமுறையும் தொடங்கிவிட்டது.
2019-21 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) படி, 10 ஆண்களில் ஒருவருக்கும் குறைவானவர்கள் அல்லது 0.5% பேர் மட்டுமே ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர் எனத்தெரியவந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், பெண்களுக்கு கருத்தடை செய்வது சமூகத்தில் இன்னும் அதிகமாக உள்ளது.
வாஸெக்டமி பாதுகாப்பானது மற்றும் எளிதானது என்று நிபுணர்கள் கூறினாலும், அது பிற கருத்தடை முறைகள் எவற்றிற்கும் சமமானதல்ல என்றே கருதப்படுகிறது.
குடும்பக் கட்டுப்பாட்டுக்கான பொறுப்பு யாருடையது என்ற சர்வேயில் உத்தரபிரதேசம், தெலுங்கானா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50% ஆண்கள் கருத்தடை செய்வது பெண்களின் வேலை என்றும் இதைப் பற்றியெல்லாம் ஆண்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களில் கருத்தடை தொடர்பான பல கட்டுக்கதைகள் உள்ளன. உதாரணமாக, ஆணுறைகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, அது பாலியல் இன்பத்தைக் குறைக்கிறது என்ற எண்ணம் தொடர்ந்து நீடிக்கிறது. அதேசமயம் கருத்தடை அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை அது, ஆண்களின் ஆண்மையைக் குறைப்பதாக பெரும் அச்சம் நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images
புதிய ஊசி மருந்தை ஆண்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறார் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டியிருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்திய சமூகத்தில் வாஸெக்டமி குறித்து பல கட்டுக்கதைகளும் தவறான கருத்துகளும் இருப்பதாக இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறைச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.சாந்த குமாரி இது குறித்துப் பேசிய போது, இந்திய ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாததை, ஆண்மைக் குறைபாடாகக் கருதுகின்றனர். இதன் காரணமாக அனைத்து சுமைகளும் பெண்களின் மீதே சுமத்தப்படுகின்றன என்று விளக்கினார்.
பாலின சமத்துவத்தை முன்னேற்றுவது தொடர்பாகப் பணியாற்றிவரும் ஆய்வாளரான பிதிஷா மோண்டல் பிபிசியிடம் ஒரு உரையாடலின் போது, பெண்களுக்கு கருத்தடை செய்வது இந்தியாவில் அதிகம் என்று தெரிவித்தார்.
சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு என்ற அரசு நிறுவனத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு 93% கருத்தடை செய்யப்படுவதாக பிதிஷா கூறுகிறார்.
அதே சமயம், கருத்தடை சாதனங்கள் குறித்த ஆண்களின் அச்சத்துக்கும் வரலாறுதான் காரணம் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
1975 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட கட்டாய கருத்தடை ஆண்களிடையே ஒரு பயத்தை ஏற்படுத்தியதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஆண்களும் கருத்தடை செய்வது அவர்களின் ஆண்மையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது தங்களின் ஆண்மையை அழித்துவிடும் என்று நினைக்கிறார்கள்.
இந்திய மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் தலைவர் எஸ்பி சிங், ஐசிஎம்ஆர்-ன் இந்த புதிய ஊசி மற்றும் அது குறித்த மருத்துவ பரிசோதனை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், இந்தியாவின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் இந்த ஊசி எந்தளவுக்கு பலன் தரும் என்பதை காலம்தான் தீர்மானிக்கவேண்டும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்