சண்டிகர் தேர்தல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேயர் பதவியை பாஜக கைப்பற்ற முடியுமா?

சண்டிகர் தேர்தல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேயர் பதவியை பாஜக கைப்பற்ற முடியுமா?

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சண்டிகர் மேயர் தேர்தலில் எட்டு வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. அந்த எட்டு வாக்குகளால் தான் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோற்று போனார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த எட்டு வாக்குகள் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

எனவே பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கரின் வெற்றி செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.

முன்னதாக மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷிஷ், அறிவித்திருந்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு, சோன்கர், மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்

சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி அனில் மஷிஷை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் வேண்டுமென்றே கையாடப்பட்டனவா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவருக்கு சட்டப்பிரிவு 340-ன் கீழ் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் முன் பொய்சாட்சி வழங்கும் விவகாரங்களில் இந்த நோட்டீஸ் வழங்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறியதாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, “ஜனநாயகத்துக்கான வெற்றி” என்று ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் ஜெக்ரிவால், “உண்மைக்கு நெருக்கடிகள் ஏற்படும், ஆனால் தோற்காது” என்று உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் கே சி வேணுகோபால், தேர்தல் நடைபெற்ற விதமே “முழுமையான பித்தலாட்டம்” என்றார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறுகையில், “உச்சநீதிமன்றத்திடமிருந்து எதிர்ப்பார்க்கப்படும் சீரிய பணியை உச்சநீதிமன்றம் செய்துள்ளது” என்றார். “ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது நீதிமன்றம். மிக துணிச்சலான முறையில் செயல்பட்டு, நடைபெற்ற அல்லது நடைபெற்று வரும் குதிரை பேரத்தை நிறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்” என்று அவர் கூறினார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

மறு தேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றி?

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரைஷி, “இந்த நல்ல தீர்ப்பு வழங்கியதற்காக நான் உச்சநீதிமன்றத்துக்கு தலை வணங்குகிறேன். முறைகேடு நடந்திருப்பதற்கான ஒவ்வொரு சாத்தியக்கூறையும் கண்டறிந்து அதை சீர் செய்துள்ளனர்*” என்றார் .

“நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்குள் மூன்று கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பாஜகவுக்கு கட்சி மாறியுள்ளனர்.

குரேஷி, “கால தாமதம் காரணமாக மூன்று பேர் கட்சி தாவியுள்ளனர். தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டாலும், முடிவுகள் தற்போது வேறு மாதிரி இருக்கும். எனவே குதிரை பேரம் நடந்துள்ளதை அறிந்து , அதை தடுத்து நிறுத்தும் நோக்கில், உண்மையான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது போன்ற தீர்ப்புகள் மிக அரிதாகவே வழங்கப்படுகின்றன” என்றார்.

தேர்தல் நடத்தும் அதிகாரியான அனில் மஷிஷின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி பிபிசியிடம் பேசிய போது, “இதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷிஷ் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சண்டிகரின் முன்னாள் மேயர் மற்றும் பாஜக முன்னாள் தலைவர் அருண் சூத் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும் ஏற்றுக் கொள்வதாகவும் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய அவர், “ஆனால் ஆம் ஆத்மி கட்சியிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒரு புறம் ஜனநாயகம் கொல்லப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் மறு புறம் பெரும்பான்மை கொண்ட பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. பத்து உறுப்பினர்களை கொண்ட ஆம் ஆத்மியும் ஏழு உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் மாநகராட்சிக்கு தலைமை தாங்குகிறது. பாஜகவின் ஒப்புதல் இல்லாமல் எப்படி அவர்களால் நிர்வாகம் செய்ய முடியும்? எங்களிடம் எண்ணிக்கை இருக்கிறது, நாங்கள் தான் முடிவுகளை எடுப்போம். ஆனால் எங்கள் மேயர் இல்லை.” என்றார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

சண்டிகர் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷிஷ்

அதிக கவுன்சிலர்களைக் கொண்ட பாஜக : அடுத்து என்ன நடக்கும்?

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு கட்சி மாறியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. சண்டிகர் மாநகராட்சி 35 கவுன்சிலர்களை கொண்டது. மேலும், சண்டிகர் மக்களவை உறுப்பினருக்கு ஒரு வாக்கு உண்டு.

ஆம் ஆத்மியிலிருந்து மூன்று கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்த பிறகு, ஆம் ஆத்மி கூட்டணிக்கு 17 கவுன்சிலர்களும்,பாஜகவுக்கு 17 கவுன்சிலர்களும் உள்ளனர். பாஜகவுக்கு, சண்டிகர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரோன் கேரின் வாக்கும் உள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாதிப்பு இல்லாமல் அமல்படுத்தப்படுமா?

நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கையும் சேர்த்து, பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. ஆனால் ஆம் ஆத்மி பெற்ற எட்டு வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தற்போது ஆம் ஆத்மியின் வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்புக்கு பிறகு மூன்று கவுன்சிலர்கள் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு மாறியுள்ளதால், ஆம் ஆத்மியின் வேட்பாளர் மேயரானாலும், ஆம் ஆத்மி பெரும்பான்மை வாக்குகள் பெறவில்லை.

மாநகரட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக திருத்தி எழுதிவிட முடியுமா?

சண்டிகர் முன்னாள் மேயர் சப்ரா பிபிசி பஞ்சாபியிடம் பேசிய போது, “மாநகராட்சிகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றால், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். அது பாஜகவுக்கு தற்போது கிடையாது” என்று விளக்கினார்.

ஆம் ஆத்மியின் சண்டிகர் நகர பொறுப்பாளருமான எஸ் எஸ் அலுவாலியாவிடம் இதே கேள்வியை பிபிசி கேட்ட போது, “காங்கிரஸ் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்றால் மட்டுமே பாஜகவால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். ஆனால் அது தற்போது சாத்தியம் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் “மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற 24 வாக்குகள் தேவைப்படும். காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் மிகவும் இணக்கமாக இருந்து பாஜகவை முழு வீச்சில் எதிர்த்து வருகின்றன. துணை மேயர் பதவிக்கான தேர்தல் பணிகள் குறித்து இரு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன. ஆம் ஆத்மியின் மேயர் பதவிக்கு பாதகம் ஏற்படாத வகையிலான உத்தியை அவர்கள் வகுப்பார்கள்”என்றார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி விசாரணை – இது தான் முதல் முறையா?

தேர்தல் நடத்தும் அதிகாரி இது போன்ற வகையில் உச்சநீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டு இது வரை விசாரிக்கப்பட்டதாக நினைவில்லை என்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். “இது தான் முதல் முறையாக இருக்கலாம். இது போன்ற முறைகேடுகளில் பலர் ஈடுபட்டு வரலாம். ஜனநாயகம் பல்வேறு தளங்களில் கொலை செய்யப்பட்டு வரும் இந்த வேளையில் இந்த தீர்ப்பு மிகவும் அவசியமான தீர்ப்பாகும்” என்றார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேஷி, இது போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன என்றாலும் ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி உச்சநீதிமன்றத்தின் முன்பு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக தனக்கு நினைவில்லை என்றார்.

“நான்கு ஆண்டுகளுக்கு முன் ஹரியாணா சட்டமன்றத்தில், மாநிலங்களவைக்கான தேர்தல்கள் நடைபெற்ற போது, தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டமன்றச் செயலாளர் இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டார். அந்த சம்பவம், தேர்தல் நடத்தும் அதிகாரியின் மீது கேள்விகளை எழுப்பும் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது” என்று தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *