சலார் விமர்சனம்: பிரபாஸ் – பிரஷாந்த் நீல் கூட்டணி வெற்றி பெற்றதா? படம் எப்படி இருக்கிறது?

சலார் விமர்சனம்: பிரபாஸ் - பிரஷாந்த் நீல் கூட்டணி வெற்றி பெற்றதா? படம் எப்படி இருக்கிறது?

சலார்: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா அல்லது பிரபாஸுக்கு மற்றுமொரு தோல்விப் படமா?

பட மூலாதாரம், Salaar/Twitter

கையில் ஒரு ஆயுதம் வைத்திருப்பது மட்டும் போதாது, அதை எப்படி சரியாகப் பயன்படுத்தலாம் என்பதும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நடிகர் பிரபாஸ்கூட அப்படிப்பட்ட ஓர் ஆயுதம்தான்.

அவருடைய திறமைக்கு ஏற்றவாறு பலமான கதைகள் அமைய வேண்டும். பிரபாஸால் மட்டுமே ஏற்று நடிக்கக் கூடிய கதாபாத்திரங்கள் கொண்டதாக அந்தக் கதைகள் இருக்க வேண்டும்.

பாகுபலிக்கு பிறகு அத்தகைய ஒரு கதை பிரபாஸுக்கு அமையவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். பிரஷாந்த் நீல் போன்ற ஓர் இயக்குனருக்கு பிரபாஸ் கிடைத்தால் அட்டகாசமான படம் ஒன்று கிடைக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இப்படியாக, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சலார் இன்று வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் எப்படியுள்ளது? பிரபாஸின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தி உள்ளதா? நீண்ட இடைவெளிக்குப் பின் பிரபாஸுக்கு ஒரு வெற்றிப்படமாக சலார் அமையுமா?

சலாரின் கதை என்ன?

சலார்: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா அல்லது பிரபாஸுக்கு மற்றுமொரு தோல்விப் படமா?

பட மூலாதாரம், Salaar/Twitter

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு கும்பல் அவரைப் பின்தொடர்கிறது. அந்த கும்பலிடம் இருந்து யாரும் அவரைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், தேவா (பிரபாஸ்) மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்ற சூழ்நிலை உருவாகிறது.

ஆனால் அந்த தேவா அசாமில் உள்ள டின் சுகியா எனும் தொலைதூர கிராமத்தில் தனது தாயுடன் (ஈஸ்வரி ராவ்) வசித்து வருகிறார். தேவா மிகவும் அமைதியானவர்.

தனது கண் முன்னால் எவ்வளவு பெரிய அநியாயம் நடந்தாலும் அதைக் கண்டும் காணாதது போலச் சென்று விடுவார். தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக எல்லா கோபத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு வாழ்பவர்.

அப்படிப்பட்ட தேவாவால் ஆத்யாவை காப்பாற்ற முடியுமா? கான்சார் உலகில் வரதாவுடன் (பிருத்விராஜ் சுகுமாரன்) தேவாவுக்கு நட்பு ஏற்பட்டது எப்படி? பின் அது பகையாக மாறியது எப்படி?

இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் சலார்.

சலார் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

சலார்: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா அல்லது பிரபாஸுக்கு மற்றுமொரு தோல்விப் படமா?

பட மூலாதாரம், Salaar/Twitter

பிரசாந்த் நீலின் மேக்கிங் ஸ்டைல் ​​மிகவும் புதியது. கேஜிஎஃப் படத்தில் அவரது மேக்கிங் ஸ்டைல் ​​அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் நல்ல வசனகர்த்தாவும்கூட.

சலார் கதையை அவர் தொடங்கிய விதம், இடைவேளைக்கு முன் கொடுத்த ஹைப், முக்கியக் காட்சிகளின் மூலமாக மொத்த கதையையும் புரட்டிப்போட்ட விதம் என அனைத்தும் பிரசாந்த் நீலின் ஸ்டைலை வெளிப்படுத்தியது.

ஒரு சிறுவன், ராட்சசன் போலத் தோன்றும் ஒருவனை அடிக்கும் காட்சி படத்தில் உள்ளது. ஆனால் அந்தக் காட்சி பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது பிரஷாந்த் நீலின் மேஜிக் தான். தேவா, வரதாவின் நட்பு எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைத்து, அதிலிருந்து கதையைத் தொடங்குகிறார் பிரஷாந்த் நீல்.

எதார்த்தத்தை மீறிய காட்சிகளை ரசிக்கும் விதத்தில் கொடுப்பது நீலின் பலம். தேவாவுக்காக கொடுக்கப்படும் பலி, தேவா- வரதா பிரிவு, இந்தக் காட்சிகள் எல்லாம் முதல் பத்து நிமிடத்தில் முடிந்து விடுகின்றன.

வரதாவை தேவா மீண்டும் சந்தித்தால் என்ன ஆகும்? என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும்?

திரைப்படங்கள், இந்திய சினிமா, நடிகர்கள், திரைப்பட விமர்சனம், பொழுதுபோக்கு

பட மூலாதாரம், TWITTER/HOMBALEFILMS

இத்தகைய கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் கூறுமாறு காட்சிகள் அமைத்து படத்தை நகர்த்திச் செல்கிறார். திரைப்படத்தின் முதல் சில காட்சிகளில் தேவா எவ்வளவு ஆபத்தானவன் என்பதையும் அவனைச் சுற்றித்தான் கதை நகரப் போகிறது என்பதையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துவது ஒரு நல்ல மாஸ் மசாலா படத்திற்கான தொடக்கம்.

இந்தப் படத்தை இயக்குவதில் ராஜமௌலியின் யுக்தியைக் கையாண்டிருக்கிறார் நீல். தேவா கதாபாத்திரத்தை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு எரிமலை போல காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தேவா எப்போது சண்டையில் இறங்குவான் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, இடைவேளைக்கு முன் வரும் அந்தக் காட்சியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறப்பாகப் பூர்த்தி செய்துள்ளார். இடைவேளை காட்சி இரண்டாம் பாதிக்கான ஹைப்பை பல மடங்கு எகிறச் செய்கிறது. பிரபாஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மகிழ்ந்திருப்பார்கள்.

கான்சார் உலகம் எப்படி இருந்தது?

திரைப்படங்கள், இந்திய சினிமா, நடிகர்கள், திரைப்பட விமர்சனம், பொழுதுபோக்கு

பட மூலாதாரம், TWITTER/HOMBALEFILMS

இரண்டாம் பாதியில் பார்வையாளர்களை கான்சார் உலகிற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குநர். அங்குள்ள மக்கள், அவர்களின் அரசமைப்பு, உறுதிமொழிகள் மற்றும் அதிகாரத்திற்கான விளையாட்டு, குறிப்பாக போர் நிறுத்தம் என்ற ஒரு முறை, இவையெல்லாம் சற்று குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

கேஜிஎஃப் படத்தின் தாக்கத்தில் இருந்து பிரஷாந்த் இன்னும் வெளியே வரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இரண்டாம் பாதியில் காட்சிகள் சற்று இழுவையாக உள்ளன.

இந்த படத்தில்கூட தனிமனித ஹீரோயிசம்தான் படத்தை நகர்த்திச் செல்கிறது. தேவாவுக்கு கொடுக்கப்படும் பில்ட்-அப்கள், வடிவமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள், பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கலாம். ஒவ்வொரு சண்டைக் காட்சிக்கு முன்னரும் வரும் ஒரு எமோஷனல் காட்சி, ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும் என நீல் நம்பியது வீண்போகவில்லை.

கிளைமாக்ஸ் காட்சிகள் ஏதோ ஜாம்பி படம் பார்ப்பது போல் உள்ளது. எங்கும் ரத்தக்களரி. ஆனால் தேவாவும் வரதாவும் பேசிக்கொண்டே எதிரிகளை வேட்டையாடும் காட்சிகள் சற்று ஆறுதலைத் தருகிறது.

இறுதியில் வரும் அந்த ட்விஸ்ட், இரண்டாம் பாகத்திற்கு ஒரு நல்ல அடித்தளம். இதுபோன்ற கதைகளுக்கு அந்த ட்விஸ்ட் எதிர்பாராததுதான்.

திரைப்படங்கள், இந்திய சினிமா, நடிகர்கள், திரைப்பட விமர்சனம், பொழுதுபோக்கு

பட மூலாதாரம், Salaar/Twitter

கணக்கில்லா கதாபாத்திரங்கள்

நீலின் கதையில் பல கதாபாத்திரங்கள் வந்து போகின்றன. அவற்றின் நோக்கம் என்னவென்று புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளது.

சலாரின் தொடக்கத்தில் பல கேள்விகள் எழுந்தன. ஆத்யா யார்? ஆத்யாவின் அப்பா என்ன செய்தார்? அந்த முற்றுகைச் சின்னத்தின் பின்னால் உள்ள கதை என்ன? தேவாவுடைய அம்மாவின் (ஜான்சி) பின்கதை என்ன? தேவா மற்றும் வரதா பிரிய உண்மையான காரணம் என்ன?

படம் முழுவதும் இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை. இறுதிக் காட்சியிலாவது பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இறுதிக் காட்சியில் மேலும் சில கேள்விகளே எழுகின்றன. இரண்டாம் பாகத்திற்காக இதை இயக்குநர் ரகசியமாக வைத்திருக்கலாம்.

பிரபாஸின் இமேஜ்

திரைப்படங்கள், இந்திய சினிமா, நடிகர்கள், திரைப்பட விமர்சனம், பொழுதுபோக்கு

பட மூலாதாரம், TWITTER/HOMBALEFILMS

சிறப்பாக எழுதப்பட்ட ஹீரோ பில்ட்-அப் காட்சிகள் மூலம், ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பிரபாஸுக்கு இருக்கும் இமேஜை மேலும் உயர்த்துகிறார் நீல்.

ஆனால், முதல் பாதியில் அவருக்குப் பெரிதாக சண்டைக் காட்சிகள் இல்லாமல், அவரை அமைதியான நபராகக் காட்டியது தவறோ எனத் தோன்றியது. ஸ்ருதி ஹாசனுக்கு இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல.

அவரது கதாபாத்திரம் இந்தக் கதையின் நகர்வுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. இரண்டாம் பாதியிலும் அவருக்கான முக்கியத்துவம் இருக்கிறது. பிரித்விராஜ் சுகுமாரனின் நடிப்பு நன்றாக உள்ளது. ஜெகபதி பாபு மற்றும் ஈஸ்வரி ராவ் தேவையான நடிப்பை அளித்திருக்கிறார்கள்.

அம்மா கதாபாத்திரங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் நீல், இதிலும் ஈஸ்வரி ராவின் மூலமாக ஒரு பலமான அம்மா கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார். ஜான்சி என்னும் அந்தக் கதாபாத்திரம் பார்க்க சற்று புதுமையாகத் தெரியலாம்.

திரைப்படங்கள், இந்திய சினிமா, நடிகர்கள், திரைப்பட விமர்சனம், பொழுதுபோக்கு

பட மூலாதாரம், TWITTER/HOMBALEFILMS

சலாரின் காட்சியமைப்புகள்

காட்சியமைப்புகளில் ஒரு புதுமை தெரிகிறது. கலர் கிரேடிங், ஃபிரேம்கள், விஷுவல்கள் என அனைத்தும் சலாரை தனித்து தெரியச் செய்கின்றன. எல்லா காட்சிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களின் பேச்சு வழக்குகளும் வேறுபட்டவையாக உள்ளன. பாடல்களுக்குப் பெரிதாக ஸ்கோப் இல்லை. ஹீரோயிசத்தை உயர்த்திக் காட்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில வசனங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. சில வசனங்கள் புரியவில்லை.

முதல் பாதியில் ரசிகர்கள் விரும்பியதைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இருப்பினும், இரண்டாம் பாதியில் கான்சாரின் உலகம் குறித்து முழுமையாகப் புரியவில்லை. கதையின் ஓட்டத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் இந்தக் குறைகளை இயக்குநர் சரி செய்ய வேண்டும். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நிச்சயம் தேறி விடும் என எதிர்பார்க்கலாம், இந்தப் படத்திற்கு மதிப்பெண்கள் என்று பார்த்தால் நிச்சயமாக பாஸ் மார்க் போடலாம். இரண்டாம் பாகத்தில் பிழைகள் சரி செய்யப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *