டி20 தொடர்: சூர்யகுமாரிடம் தோற்ற தென் ஆப்ரிக்கா, ஸ்கை சாதனை சதம், குல்தீப் பந்துவீச்சால் இந்தியா தந்த பதிலடி

டி20 தொடர்: சூர்யகுமாரிடம் தோற்ற தென் ஆப்ரிக்கா, ஸ்கை சாதனை சதம், குல்தீப் பந்துவீச்சால் இந்தியா தந்த பதிலடி

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

கேப்டன் சூர்யகுமார் யாதவின் அற்புதமான சதம், பிறந்தநாளில் குல்தீப் யாதவ் எடுத்த 5 விக்கெட் ஆகியவை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்த இந்த கடைசி டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களில் சுருண்டு, 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றது.

இதன் வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தன. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய தோல்வி

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ராம் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா

தென் ஆப்பிரிக்க அணி டி20 வரலாற்றில் சந்திக்கும் 3வது மிகப்பெரிய தோல்வியாகும்.அதேநேரம், தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியிடம் தோற்றது என்பதைவிட சூர்யகுமாரிடம் தோற்றது என்பது கூறுவது தான் சிறந்தது. ஏனென்றால், சூர்யகுமார் யாதவ் சேர்த்த 100 ரன்களைக் கூட தென் ஆப்பிரிக்க அணியால் அடிக்க முடியாமல் 95 ரன்களில் சுருண்டுவிட்டது.

ரோஹித் சாதனையை சமன் செய்த ஸ்கை

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால்

கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய 360 டிகிரி வீரர் சூர்யகுமார் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20வரலாற்றில் 4-வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா, மேக்ஸ்வெல் சாதனையை சூர்யகுமார் சமன் செய்துள்ளார். மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா 100 இன்னிங்ஸ்களைக் கடந்து இந்த சாதனையைச் செய்த நிலையில் சூர்யகுமார் 60 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

தொடக்கத்தில் தனது பேட்டிங்கில் நிதானம் காட்டிய சூர்யகுமார் 32 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 50 ரன்களை 23 பந்துகளிலும் எட்டி இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினார். ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் பெற்றார்.

வெற்றிக்குப்பின் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் “நான் நலமாக இருக்கிறேன், என்னால் நடக்க முடிகிறது, காயம் தீவிரமாக இல்லை. என்னுடைய சதம் வெற்றிக்கு காரணமாகியது என்பது பெருமையாக இருக்கிறது. அச்சமில்லாத கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறோம் என்பது மகிழ்ச்சி. குல்தீப்பின் 5 விக்கெட் அவரின் பிறந்தநாளுக்கு அவரே அளித்துக்கொண்ட பரிசு” எனத் தெரிவித்தார்.

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது இந்திய அணி

குல்தீப்பின் ‘சுய பிறந்தநாள் பரிசு’

தனது 29-வது பிறந்தநாளில் விளையாடிய குல்தீப் யாதவ் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தென்ஆப்பிரி்க்க பேட்டர்களின் சரிவுக்கு காரணமாகினார். 2.5 ஓவர்கள் வீசிய குல்தீப் 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் குல்தீப் வீசிய கடைசி 6 பந்துகளில் மட்டும் ஒரு ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார்.

ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால்

கடந்த ஆட்டத்தில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த ஜெய்ஸ்வால் தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி 41 பந்துகளில் 60ர ன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் சூர்யகுமார்(100),ஜெய்ஸ்வால்(60) ஆகியோர் மட்டுமே அதிகபட்ச ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டரும் எதிர்பார்த்தது போல் ரன் சேர்க்காமல் ஏமாற்றினர்.

ஜெய்ஸ்வால் தனது 14-வது டி20 இன்னிங்ஸில் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ஒவ்வொரு போட்டியிலும் ஜெய்ஸ்வால் சரியாக பயன்படுத்தி வருகிறார்.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்தநிலையில் அதில் 8 சிக்ஸர்கள் சூர்யகுமார் அடித்ததாகும், பவுண்டரி கணக்கில் 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டநிலையில் அதில் 7 பவுண்டரிகள் ஸ்கை அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பை வீணடித்த இளம் பேட்டர்கள்

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

திலக் வர்மா

சுப்மான் கில் தனக்கு கிடைத்த 2வது வாய்ப்பையும் தவறவிட்டு 8 ரன்னில் கால்காப்பில் வாங்கி கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 2வது போட்டியிலும் சொதப்பி டக்அவுட்டில் வெளியேறினார், ஜிதேஷ் சர்மா, ஜடேஜா தலா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒட்டுமொத்தத்தில் அணியைத் தூக்கி நிறுத்தியது சூர்யகுமார், ஜெய்ஸ்வால் பேட்டிங் மட்டும்தான். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை வலுவாக இருப்பதாக புறத் தோற்றத்தில் தெரிந்தாலும், சூர்யகுமார், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் தவிர கடந்த 2 போட்டிகளில் எந்த இளம் வீரரும் சிறப்பாக பேட் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். சூழலுக்கு ஏற்றார்போல் தங்களின் பேட்டிங்கை மாற்றிக்கொள்ளாத கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஜடேஜா ஆகியோருடன் டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்வது கடினம்தான் என்று விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேம்பட்ட பந்துவீச்சு

அதேநேரம், கடந்த போட்டியோடு ஒப்பிடும்போது இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மேம்பட்டிருந்தது. கடந்த போட்டியில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு முதல் ஓவரிலேயே 3 ஸ்லிப்புகளை கேப்டன் சூர்யா நிறுத்தினார். இதனால் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 3 ஸ்லிப் பீல்டர்கள் நிறுத்தப்பட்டு தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார்போல் சிராஜ் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, பல பந்துகளை லெக் கட்டராகவும், அவுட் ஸ்விங்கிலும் வீசிய சிராஜ் பந்துவீச்சை, தொட முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் பீட்டன் ஆகினர்.

முகேஷ் குமார் பந்துவீச்சில் வேகம் இல்லாவிட்டாலும் இந்த ஆட்டத்தில் சரியான லைன்லென்த்தில் வீசி நெருக்கடிஅளித்தார். தொடக்கத்திலேயே மேத்யூ பிரிட்ஸ்கீ விக்கெட்டை வீழ்த்தி முகேஷ் நெருக்கடி கொடுத்தார். பவர்ப்ளே முடிவதற்கு தென் ஆப்பிரிக்காவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திநெருக்கடி அளித்த இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஜடேஜாவின் கேப்டன் திறமை

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

சூர்யகுமார் களத்தில் இருந்த சிறிது நேரத்தில் பீல்டிங் செய்தபோது தசைப்பிடிப்பு ஏற்பட்டு டக்அவுட் சென்றுவிட்டார். அதன்பின் கேப்டன் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்திச் சென்றது ரவீந்திர ஜடேஜாதான். பவர்ப்ளே முடிந்து அடுத்த ஓவரை வீச வந்தவுடன் முதல் பந்திலேயே மார்க்ரம் விக்கெட்டை ஜடேஜா எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க தோல்விக்கு காரணங்கள்

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பெரிய ஷாட்களுக்கு ஆசைப் பட்டு பந்தை கணிக்காமல் பல பேட்டர்கள் விக்கெட்டை இழந்தனர். கிளாசன், மார்க்ரம், மில்லர் போன்ற அனுபவம் மிக்க பேட்டர்கள் பந்தை கணிக்காமல் ஆடி தங்களின் விக்கெட்டை தேவையின்றி பறிகொடுத்தனர். 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த, 53ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது.

ஜோகன்ஸ்பர்க் ஆடுகளம் வழக்கத்துக்கு மாறாக, தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது போதுமான அளவு ஒத்துழைக்கவில்லை, ஆனால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது பந்துகள் நன்றாக டர்ன் ஆனது.

அதிரடித் தொடக்கம்

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி ஜெய்ஸ்வால் அருமையான தொடக்கத்தை அளித்து ரன்களை வெளுத்து வாங்கினார். இதைப் பார்த்த கேப்டன் மார்க்ரம், 3வது ஓவரிலேயே கேசவ் மகராஜை பந்துவீச அழைத்தார். அதற்கு ஏற்றார்போல், மகராஜ் பந்துவீச வந்தஉடன் சுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். சுப்மான் கில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டபோது கால்காப்பில் வாங்கினார், டி ரீப்ளேயில் பந்து லெக்சைடு சென்றது தெரிந்தாலும் கில்லுக்கு அவுட் வழங்கப்பட்டது. அடுத்து வந்த திலக் வர்மா வந்தவேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

விளாசல் கூட்டணி

சூர்யகுமார், ஜெய்ஸ்வால் கூட்டணி தென் ஆப்பிரி்க்கப் பந்துவீச்சை பதம் பார்த்து, வெளுத்து வாங்கியது. பவர்ப்ளே முடியும் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 62 ரன்கள் சேர்த்தது. ஸ்கை, ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால், 11.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. விளாசலில் இறங்கிய ஜெய்ஸ்வால் 34 பந்துகளிலும், சூர்யகுமார் 32 பந்துகளிலும் அரைசதத்தை நிறைவு செய்தனர். 3-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தநிலையில் ஜெய்ஸ்வால் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ரிங்கு சிங் (14) ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்க இந்திய அணியின் நம்பிக்கை தளர்ந்து. சூர்யகுமாரும் 55 பந்துகளில் சதம் அடித்து வெளியேற இந்திய அணி விக்கெட் சரிவு தொடங்கியது. 188 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி அடுத்த 13 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பந்துவீச்சில் நெருக்கடி

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

202 ரன்கள் எனும் இமாலய இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியோடு தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆனால், ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸ்கீ ஆகியோருக்கு ஏற்றார்போல் வியூகங்களை அமைத்து, 3 ஸ்லிப் வைத்து இந்தியா பந்துவீசியது. சிராஜ் வீசிய முதல்ஓவரிலேயே தென் ஆப்பிரி்க்க பேட்டர்கள் திணறியது தெரிந்தது, பல பந்துகளை பிரிட்ஸீ, ஹென்ட்ரிக்ஸ் பீட்டன் செய்தனர். ஆனால் முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரிலேயே இன்சைட் எட்ஜ் மூலம் பிரிட்ஸ்கி 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

மூத்த வீரர்கள் பொறுப்பின்மை

கடந்த ஆட்டத்தில் பிரிட்ஸ்கி ரன் அவுட் ஆகியநிலையில் இந்த ஆட்டத்தில் ஹென்ட்ரிக்ஸ் ரன் அவுட் ஆகி 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த அனுபவ வீரர் கிளாசன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தநிலையில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு ஸ்லோபாலை தூக்கி அடித்தார். ஆனால், பவுண்டரி பகுதியில் ரிங்கு சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு கிளாசன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாக பேட் செய்த கேப்டன் மார்க்ரம், தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு நம்பிக்கையூட்டினார். பவர்ப்ளே முடிந்து 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்தை தூக்கி அடிக்க மார்க்ரம் முயன்று அது ஜெய்ஸ்வாலிடம் கேட்சாக 25 ரன்னில் மார்க்ரம் வெளியேறினார். தேவையற்ற நேரத்தில் மார்க்ரம் தேவையற்ற ஷாட் அடித்து அணியை நெருக்கடியில் தள்ளினார்.

டிஆர்எஸ் இல்லாததால் தப்பித்த மில்லர்

அதன்பின் வந்த நடுவரிசை பேட்டர்கள் பெரேரா (12), பெகுல்குவேயோ (0) இருவரும் ஏமாற்றினார். டேவிட் மில்லர் 18 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜடேஜா வீசிய பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா கேட்ச் பிடித்தார். ஆனால் அந்த நேரத்தில் டிஆர்எஸ் சிஸ்டம் செயல்படாமல் இருந்ததால் மில்லர் தப்பித்தார். இறுதியில் 35 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி மில்லர் ஆட்டமிழந்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *