இந்தியாவை பாகிஸ்தான் மற்ற போட்டிகளில் வென்றாலும் உலகக்கோப்பையில் தோற்பது ஏன்?

இந்தியாவை பாகிஸ்தான் மற்ற போட்டிகளில் வென்றாலும் உலகக்கோப்பையில் தோற்பது ஏன்?

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஐசிசி 50 ஓவர்கள் உலகக் கோப்பைத் தொடரில் 8-வது முறையாக நேற்று பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியால், இந்திய அணியை வெல்ல முடியவில்லை என்ற வரலாற்றை இந்திய அணி தக்கவைத்தது. இந்த வரலாறு இன்னும் 4 ஆண்டுகளுக்கு உயிர்ப்புடன் இருக்கும்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே உலகளவில் ரசிகர்களால் பார்க்கப்படும் போட்டியாக இருக்கும் என்பதால், வணிக நோக்கம் இயல்பாகவேச் சேர்ந்துவிடுகிறது. மக்களைப் பார்க்க வைப்பதற்கு செய்ய வேண்டிய அனைத்து கவன ஈர்ப்பு அம்சங்களையும் நிறுவனங்கள் செய்வதால் எந்தப் போட்டியிலும் இல்லாத கவனம் இதன் மீது குவிகிறது.

இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை வரலாற்றுப் பயணத்தைப் பார்த்தால், கடந்த 1992ம் ஆண்டிலிருந்துதான் இரு அணிகளும் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் 8 முறை இந்தியாவை எதிர்த்து மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோற்றுள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்திலும் 8வது முறையாக இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.

உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒருநாள் தொடரில் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தியுள்ள பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பைத் தொடர் என்று வரும்போது மட்டும் இந்தியாவிடம் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறது.

பாகிஸ்தான் ஆதிக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளை எடுத்துக்கொண்டாலும், அதில் பாகிஸ்தான் ஆதிக்கமே இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்(பைலேட்டரல் சீரிஸ்) என்று ஆய்வு செய்தாலும் அதிலும் பாகிஸ்தான் ஆதிக்கமே இருக்கிறது.

இப்படி இந்திய அணி மீது ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்தியுள்ள பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பைத் தொடர் என்று வரும்போது மட்டும் இந்தியாவிடம் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 135 ஒருநாள் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளன. இதில் 57 போட்டிகளில் இந்திய அணியும், 73 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இ்ந்திய அணியின் வெற்றி சதவீதம் 43.31 ஆகவும், பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவீதம் 56.58ஆகவும் இருக்கிறது.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 11 போட்டிகளில் இந்திய அணியும், 19 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும்வெற்றி பெற்றுள்ளன.

இந்தியாவில் வைத்து இந்திய அணியை தோற்கடித்த வகையில் பாகிஸ்தான் வெற்றி சதவீதம் 63.33% ஆக இருக்கிறது. இந்தியாவில் வைத்து பாகிஸ்தானை வென்ற வகையில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 36.67 ஆகத்தான் இருக்கிறது.

உலகக் கோப்பைத் தவிர்த்து இரு அணிகளும் மோதிக்கொண்ட ஒருநாள் தொடர்களில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம்தான் இந்திய அணி மீது மோலோங்கி இருக்கிறது.

உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியா , பாகிஸ்தான் அணிகள் இதுவரை 17 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளன.

பாகிஸ்தான் பயணத்தில் இந்திய அணி

இந்திய அணியும் 1978களில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணம் செய்து ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளது. இதுவரை 25 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானில் இந்திய அணி விளையாடியுள்ளது. அதில், 10 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியும், 13 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. இரு போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளது.

இந்தியா , பாகிஸ்தான் அணிகள் இதுவரை 17 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 6 ஒருநாள் தொடர்களை நடத்தியுள்ளது, பாகிஸ்தான் 7 தொடர்களை நடத்தியுள்ளது, மற்ற 4 தொடர்கள் பொதுவான இடத்தில் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஒருநாள் தொடரில் 11 தொடர்களை பாகிஸ்தான் வென்றுள்ளது, 5 தொடர்களை இந்தியா வென்றுள்ளது.

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இதுவரை 5 போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மோதியுள்ளன. அதில் 2 போட்டிகளில் இந்திய அணியும் 3 போட்டிகளில் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஆசியக் கோப்பைத் தொடரில் 14 ஒருநாள் போட்டிகளில் 8-ல் இந்திய அணியும், 5-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

ஆனால், உலகக் கோப்பை புள்ளிவிவரங்கள் அனைத்தும் தலைகீழாக இருக்கிறது. கடந்த 1992ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டுவரை நடந்த 8 உலகக் கோப்பைத் தொடர்களிலும் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோற்றுள்ளது. இந்த 8 உலகக் கோப்பைத் தொடர்களிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 100 சதவீத வெற்றியை தக்கவைத்துள்ளது.

இந்திய அணி வென்ற 8 ஆட்டங்களில் 3 முறை சேஸிங் செய்தும், 5 முறை முதலில் பேட் செய்து, பாகிஸ்தான் அணியை பந்துவீச்சில் சுருட்டி வெற்றி கண்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை ஆதிக்கம் செய்திருந்த பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் 8 முறையும் பணிந்து தோற்றது ஏன் என்ற கேள்வியும், காரணங்களும் புதிராக இருக்கிறது.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இரு அணிகளும் சம வலிமையோடு இருந்தாலும், உலகக் கோப்பைத் தொடர் என்று வரும்போது மட்டும் பாகிஸ்தானிடம் மட்டுமே ஏதோ சமநிலையில் மாற்றம் வருகிறது. அந்த சமநிலையற்ற தன்மைதான் போட்டியை ஒருதரப்பாக மாற்றி இந்திய அணியை வெல்ல காரணமாகிறது.

உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிரிக்கெட் போட்டியை ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள்.

சச்சின் காலத்திலிருந்து மாற்றம்

கடந்த 1980களிலும், 1990களிலும் இருந்த பாகிஸ்தான் அணி நிச்சயமாக இந்திய அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சவாலாக இருக்கக் கூடியது என்பதை மறுப்பதற்கில்லை. இம்ரான் கான், அப்பாஸ், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், இன்சமாம் உல் ஹக், சலீம் மாலிக், மியான்தத், மொயின் கான், அப்துல் காதிர், சயீத் அன்வர், இஜாஸ் அகமது, சக்லைன் முஸ்டாக், அப்துல் ரசாக், அசார் முகமது என பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் ஏராளமான ஜாம்பவான்கள் இருந்தனர்.

இந்திய அணியிலும் ஜாம்பவான் வீர்ரகள் இருந்தாலும், பல போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஈடுகொடுத்து போட்டியிடாமல் தோல்வி அடைந்தது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

ஆனால், பாகிஸ்தான் ஆதிக்கம் என்ற டிரண்ட் சச்சின் டெண்டுல்கர் விஸ்வரூமெடுத்த பின் மெல்ல குறையத் தொடங்கியது. சச்சினைத் தொடர்ந்து இந்திய அணிக்குள் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டு புதிய, துடிப்பு மிக்க வீரர்கள் வந்தபின் பாகிஸ்தான் ஆதிக்கம் என்ற நிழல் மறையத் தொடங்கியது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

2012ம் ஆண்டுக்குப் பின் இரு அணிகளும் தத்தம் நாடுகளுக்குச் சென்று பயணித்து கிரிக்கெட் விளையாடுவதையும், பைலேட்டரல் சீரிஸ் நடத்துவதையும் அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்தன. இதனால், இரு நாட்டு வீரர்களின் திறன், திறமை, ஆளுமை, தாங்குதிறன், உத்தி, பந்துவீச்சு, பேட்டிங் என எதையும் அறிந்து கொள்ள முடியாத போக்கு வந்தது.

இதனால், இரு நாடுகளும் ஏதாவது பொதுவான இடத்தில் சந்தித்து விளையாடும்போது, எந்த அணியிடம் அதிநவீன பயிற்சி, உடற்தகுதி, மனவலிமை, மனத் தெளவு, நிதிவலிமை, சுற்றுச்சூழல் நிம்மதி ஆகியவை எந்த அணிவீரர்களிடம் அதிகம் இருந்ததோ அந்த அணியின் ஆதிக்கம் இருந்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டிகளில் எந்த அணி குறைவாகத் தவறு செய்கிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், இந்திய அணியைவிட பாகிஸ்தான் அணி செய்யும் தவறுகள் அதிகம் என்பதால், அந்த தவறுகளுக்கு விலை கொடுத்துள்ளது.

20 ஆண்டுகால இந்திய கிரிக்கெட்

2000ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய அணி வீரர்களின் தரம், வசதி, ஊதியம் போன்றவை பாகிஸ்தானைவிட அதிகமாக இருந்தது. இதனால் கிரிக்கெட் விளையாட்டின் இயல்பாகவே ஆரோக்கியமான வளர்ச்சி பாகிஸ்தானைவிட இந்தியாவில் அதிகமாக இருந்தது.

குறிப்பாக ஒரு காலத்தில் வேகப்பந்துவீச்சில் பாகிஸ்தான் இந்தியாவைவிட வலிமையாக இருந்தது, ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்திய அணியின் பெஞ்சில் மட்டும் வரிசையாக ஏராளமான வீரர்கள் காத்திருப்பில் உள்ளனர்.

அடுத்ததாக உடற்தகுதி. ஒரு வீரருக்கு உடற்தகுதி வலிமையாக இருந்துவிட்டாலே மனத்தகுதி வந்துவிடும். அந்த வகையில் இந்திய அணி வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனை மிகக்கடினமான அளவில் நடத்தப்படுகிறது. குறிப்பாக நெருக்கடிகளின்போது எவ்வாறு தாங்க வேண்டும், அழுத்தத்தை தாங்கி எவ்வாறு விளையாடுவது, அதிலிருந்து மீண்டு அணியை வழிநடத்துவது போன்ற மனரீதியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் பார்த்தால் கடந்த 20 ஆண்டுளாக பாகிஸ்தானைவிட இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் வலிமையாகவே இருந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு தேசத்தின் அமைதி, பொருளாதார சூழல், பொருளாதார வளர்ச்சி, குடும்ப சூழல், ஊதியம், வருமானம், அடிப்படை வசதிகளும் வீரர்களின் மனநிலையை தீர்மானிக்கும். நல்ல மனநிலையில் இருக்கும் வீரர்கள்தான் சிறப்பான ஆட்டத்தை சர்வதேச களத்தில் வழங்க முடியும்.

ஆனால், பாகிஸ்தான் இன்னும் தொடர்ந்து வரும் தீவிரவாதம், உள்நாட்டுப் போட்டிகள் வளராமை, போதுமான ஊக்கமின்மை, வீரர்களுக்கான பற்றாக்குறை ஊதியம், அடிப்படை பயிற்சி வசதிகள் அந்த நாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த காரணிகளை ஒப்பிடும்போது இந்திய வீரர்கள் சிறந்த இடத்தில் உள்ளனர், மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும், நிம்மதியுடனும் விளையாடுகிறார்கள்.

உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முன்பு பாகிஸ்தான் அணிதான் சிறந்த அணியாகத் திகழ்ந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணணையாளருமா பட்டாபிராமன் கூறுகிறார்.

ஜாம்பவான்கள் காலம்

பாகிஸ்தான் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணணையாளருமா பட்டாபிராமன் பிபிசி செய்திகளுக்காக அளித்த பேட்டியில் “ நான் விளையாடிய காலத்தில் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருந்தது. 1992 உலகக் கோப்பையைக் கூட பாகிஸ்தான் அணி வென்றது. ஏராளமான ஒருநாள் தொடர்களில் இ்ந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.

ஷார்ஜாவில் பல போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றுள்ளது, குறிப்பாக மியான்தத் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்ததை மறக்க முடியாது. பல தொடர்களில் இந்தியாவை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது பாகிஸ்தான்.

இதற்கு முக்கியக் காரணம் பாகிஸ்தான் அணியில் இருந் வீரர்கள் ஒருங்கிணைந்து போராடுவார்கள். குறிப்பாக சிறந்த வீரர்களான இம்ரான் கான், மியான்தத், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சலீம் மாலிக் ஜாம்பவான் வீரர்கள் ஒருங்கிணைந்து அணியின் வெற்றிக்கு போராடினார்கள். இந்திய அணியைப் பொறுத்தவரை தனிப்பட்ட வீரர்களாக சிறப்பாக விளையாடினர். அசாருதீன், சச்சின் உள்ளிட்டோர் சிறப்பாக ஆடினர். இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது வெல்ல வேண்டும் என்ற தீர்மானம் அப்போதைய பாகிஸ்தானிடம் இருந்தது” எனத் தெரிவித்தார்

ஐபிஎல் அறிமுகத்துக்குப்பின் இந்திய கிரிக்கெட்டின் முகம் மாறியுள்ளது எனக் கூறும் பட்டாபிராமன் “இந்தியாவில் ஐபிஎல் அறிமுகத்துக்குப் பின் மிகப்பெரிய மாற்றம் கிரிக்கெட்டில் வந்துள்ளது, தரம் அதிகரித்துள்ளது. வீரர்களின் உடற்தகுதி மேம்பட்டுள்ளது, உடற்தகுதி தேர்வு சர்வதேச தரத்துக்கு இருக்கிறது, திறமையான வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி போன்றவர்கள் உருவாகியுள்ளனர். இதைவிட தன்னம்பிக்கை பாகிஸ்தானைவிட, இந்திய வீரர்களிடம் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

இந்திய வீரர்களோடு ஒப்பிடுகையில், இப்போதுள்ள பாகிஸ்தான் வீரர்களிடம் அழுத்தத்தை தாங்கும் மன வலிமை, நெருக்கடியை கடந்து வரும் போக்கு குறைவாக இருப்பதைப் பார்க்கிறேன். டி20 போட்டியில் வென்றாலும், ஒருநாள் போட்டி போன்று 100 ஓவர்களைத் தாங்கும் திறன் குறைவு. அதனால் இந்திய வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உலகக் கோப்பை என்று எடுத்துக்கொண்டாலே இந்திய அணிதான் விஸ்வரூபம் எடுக்கிறது.

பொருளாதாரம், பயிற்சி வசதி

பொருளாதார வசதியும், பயிற்சி வாய்ப்புகளும் இந்தியாவை மேம்பட்ட அணியாகக் காட்டுகின்றன என்று கூறும் பட்டாபிராமன் “பாகிஸ்தானைவிட இந்திய அணி அதிகமான ஒருநாள் போட்டிகளில் மற்ற அணிகளுடன் விளையாடி தங்களைத் தயார் செய்கிறது. இதற்காக அதிகமான முதலீடு செய்கிறது பிசிசிஐ.

ஐசிசியில் இருந்து பெரும்பகுதி வருவாய் பிசிசிஐக்கு செல்வதால், வீரர்களுக்குத் தேவையான வசதிகள், ஊதியம், ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக் கொடுக்க முடிகிறது. ஆனால், பாகிஸ்தானில் இந்த வசதிகள் மிகக்குறைவு, அங்குள்ள கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசியிடம் இருந்து குறைந்த நிதியே கிடைக்கிறது.

இதைவிட உள்நாட்டுப் போட்டிகளான ரஞ்சித் தொடர் உள்ளிட்ட பல தொடர்களை நடத்தி வீரர்களை அடையாளம் காண முடிகிறது. ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்களுடன் பழக்கம், அறிவுரைகள், ஆலோசனைகள்வீரர்களுக்கு கிடைக்கிறது. இவை அனைத்தும் பாகிஸ்தான் அணியைவிட இந்திய அணி ஆதிக்கம் செலுத்த காரணியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்

தோற்றத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் சம வலிமையாக இருந்தாலும், உள்ளார்ந்து பார்த்தால் உலகக் கோப்பை என்று வந்துவிட்டாலே, பாகிஸ்தானுக்கு முன் இந்திய அணி விஸ்வரூமெடுத்துள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *