பாலத்தீனம்: காஸாவில் சண்டை நிறுத்தமா? இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

பாலத்தீனம்: காஸாவில் சண்டை நிறுத்தமா? இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இஸ்மாயில் ஹனியே, ஹமாஸ் தலைவர்

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் திடீர் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா பகுதியில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல முறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக ஹமாஸ் தலைவர் கூறியுள்ளார்.

இந்த முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்கு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில், “கத்தாரில் உள்ள சகோதரர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் குழுவினர் மூலமாக எங்கள் பதிலை வழங்கியுள்ளோம். நாங்கள் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டியுள்ளோம்,” என செய்தி முகமைகள் மற்றும் பாலத்தீனிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்தியஸ்தராக செயல்படும் கத்தாரில் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே சாத்தியமான சண்டை நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.எஃப்.பி. செய்தி முகமை செய்தியின் படி, தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில், ஐந்து நாள் சண்டை நிறுத்தம் செய்வதற்கான ஷரத்துகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

“ஐந்து நாள் முழுமையான சண்டை நிறுத்தம், தரைச் சண்டையில் போர் நிறுத்தம் மற்றும் தெற்கு காஸா மீது இஸ்ரேலிய வான் வழி தாக்குதல் நிறுத்தம் உள்ளிட்டவை அடங்கும்,” என அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “பாலத்தீன ஆயுதக்குழுவினரிடம் உள்ள 200க்கும் மேற்பப்ட பணயக்கைதிகளில், இஸ்ரேலிய ராணுவ வீரர்களைத் தவிர ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 50-100 இஸ்ரேலிய குடிமக்கள் அல்லது பிற நாட்டைச் சேர்ந்த குடிக்களை விடுவிப்பார்கள். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறையில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 300 பாலத்தீனர்கள் விடுக்கப்படுவார்கள்,” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்த தகவல் அனைத்தும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் குழுவின் அதிகாரிகளை வழங்கியதாக மேற்கோள் காட்டியது.

இதைத் தவிர, அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இஸாட் இல் ரெசிக்,“இந்த போர் நிறுத்த காலம், காஸாவிற்கு உதவிகள் வழங்கவும், பாலத்தீன கைதிகள் மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்வதையும் மையமாகக் கொண்டுள்ளன. இதில், இரு தரப்பிலும் உள்ள பெண்களும், குழ்தைகளும் விடுவிக்கப்படுவார்கள்,”என்றார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை மத்தியஸ்தராக உள்ள கத்தார் அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் என்ன சொல்கிறது?

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தலைவர்

சாத்தியமான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி கத்தாரில் இருந்து வெளிவரும் நேர்மறையான சமிக்ஞைகள் அமெரிக்கா வெளிப்படுத்தும் உணர்வுகளை ஒத்து இருக்கிறது.

கத்தார் தலைநகரில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் பணயக்கைதிகளாக இருந்த நான்கு பேரை விடுவிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவியது.

இந்த தற்காலிக சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காஸா பகுதிக்கு உதவிகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பேச்சு வார்த்தை தொடர்பாக இஸ்ரேல் இதுவரையில் எந்த பதிலும் கூறவில்லை.

இஸ்ரேலிய இராஜதந்திரிகள், இந்த வார இறுதியில் கணிசமான எண்ணிக்கையிலான பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்.

கடத்தப்பட்டவர்களின் சில குடும்பங்கள் நேற்றிரவு டெல் அவிவில் இஸ்ரேலிய போர் அமைச்சரவையை சந்தித்த பின்னர் கோபத்தை வெளிப்படுத்தினர். ஹமாஸை அழிக்கும் பணியை விட தங்கள் அன்புக்குரியவர்களை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, எதிரி எந்த அளவுக்கு வலுவிழக்கச் செய்யப்படுகிறாரோ, அந்த அளவுக்கு பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறினார்.

அமெரிக்க அதிபர் என்ன சொல்கிறார்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம், Reuters

இந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஒரு விழாவில், போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் உள்ளதா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேட்டபோது, அவர் தனது விரல்களைக் மடக்கிக் காண்பித்து, “நான் அப்படித்தான் நம்புகிறேன்,”எனக் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரியான ஜோன் ஃபைனர், “முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கிறது,”எனக் கூறினார்.

இதற்கிடையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் உள்ள பணயக்கைதிகளை திரும்ப அழைத்து வரும் இலக்கு எட்டக்கூடிய தூரத்தில் இருப்பதாக கடந்த வார இறுதியில் கத்தார் கூறியிருந்தது.

ஹமாஸால் கடத்தப்பட்டவர்கள் யார்?

ஹமாஸ் -இஸ்ரேல்

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக கருதப்படுகிறது.

பணயக்கைதிகள், காஸாவில் உள்ள பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் கூறுகிறது. பணயக்கைதிகளில், 20 குழந்தைகளும், 10 முதல் 20 வயதிற்குற்பட்டவர்கள் 60 பேரும் உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

“சிலர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணயக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர், சிலர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை காணவில்லை, அதனால், அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்புவதாகக் கூறுகிறார்ககள்,” இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறது சர்வதேச மனித உரிமை அமைப்பு?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப்(UNICEF), இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் வந்தால் அதனை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைப்பின் இயக்குனர் டோபி கூறுகையில்,“பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏஜென்சி வரவேற்கும்,” என்றார்.

ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து பிபிசியிடம் பேசிய டோபி, “உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு யுனிசெஃப் மற்றும் பலர் அழைப்பு விடுத்திருந்தோம். அப்படி அது நடந்தால், எங்களால் முடிந்தவரை விரைவாக பொருட்களை கொண்டு சென்று, அவற்றை தங்குமிடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

காஸா பகுதியின் உள்ளே அவர்கள் எங்கிருந்தாலும், எங்கு தேவைப்படுகிறாதோ, எல்லா இடங்களிலும் இருக்கும் மக்களுக்கு உதவிகள் சென்று சேர ஏற்பாடுகள் செய்வோம்.

குளிர்காலத்தில் நோய்கள் பரவுவதைப் பொறுத்தவரை உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் “மற்றொரு பேரழிவை” தடுப்பதற்கும் இந்த உதவி முக்கியமானது,” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *