
பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நேற்று (வியாழன், நவம்பர் 16) நடைபெற்ற உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், இந்தப் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வலுவான மறுபிரவேசமாக அமைந்தது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியை, மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் திணறவைத்தனர். இந்த ஆரம்ப அடியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியால் மீள முடியவில்லை. அதைத் தொடர்ந்து டேவிட் மில்லர் சதம் அடித்தாலும் அவர்களால் 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெறும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியது ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தென் ஆப்பிரிக்க அணி முற்றிலும் பின்தங்கியது. இங்கிருந்து டேவிட் மில்லர் களமிறங்கினாலும், ஸ்கோர் மேலும் 100 ரன்களைக் கடக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் ரன் குவிக்கத் துவங்கிய வேகம், மிக விரைவில் இந்த போட்டி ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக அமையும் என்று தோன்றியது.

பட மூலாதாரம், Getty Images
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடர்ந்து 8 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது
ஆஸ்திரேலியாவின் ஆட்டம்
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் ரன் குவிக்கத் துவங்கிய வேகம், மிக விரைவில் இந்த போட்டி ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக அமையும் என்று தோன்றியது.
ஆனால் இந்த ஜோடி முறிந்ததும் ஆஸ்திரேலியா ஏழு விக்கெட்டுகளை ஒவ்வொன்றாக இழந்தது. பவுமாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதில் ரன்களை எடுக்க விடவில்லை. ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு ரன்னுக்கும் போராட வேண்டியிருந்தது.
இந்த உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு தோல்விகளுடன் தொடங்கியது.
முதல் போட்டியில் இந்தியாவிடம் தோற்று, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடர்ந்து 8 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கம்மின்ஸ் கூறினார்
கம்மின்ஸ் என்ன சொன்னார்?
போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், “டக் அவுட்டில் (dug out) அமர்ந்திருப்பது எளிதாக இருந்தது. ஆனால் அடுத்த சில மணி நேரம் மிகவும் கவலையாக இருந்தது. இது மிகவும் வலுவான முயற்சியுடன் கூடிய சிறந்த போட்டியாக இருந்தது. ஆடுகளம் சுழல் பந்துகளுக்குச் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். டிராவிஸ் ஹெட் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர். போட்டி முழுவதும் வெவ்வேறு பந்து வீச்சாளர்கள் பங்களித்துள்ளனர்,” என்றார்.
இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கம்மின்ஸ் கூறினார்.
மேலும் பேசிய அவர், “அணிக்கு நல்ல விஷயம் என்னவென்றால், எங்களில் சிலர் இதற்கு முன்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளோம். 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மறக்கமுடியாதது. இப்போது மற்றொரு உலகக் கோப்பை இறுதி, அதுவும் இந்தியாவில்… மிகவும் ஆர்வமாக உள்ளோம்,” என்றார்.
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தென் ஆப்பிரிக்க கேப்டன், “நாங்கள் தொடங்கிய விதம் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அவர்களின் சிறப்பான தாக்குதல் எங்கள் டாப் ஆர்டரைச் சிதைத்தது. அவர்கள் எங்களை முழு அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்,” என்றார்.
போட்டியின் ஆட்டநாயகனான டிராவிஸ் ஹெட், “இது மிகவும் பதற்றமான முடிவு. இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். நான் இவ்வளவு சுழலும் பந்துகளைப் பார்த்ததில்லை.” என்றார்.
இந்திய அணியுடனான இறுதிப் போட்டியைப் பற்றிப் பேசிய ஹெட், “அவர்களின் தாக்குதல் ஆட்டம் அபாரமானது,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்பிரிக்க அணி ஐந்தாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடியது. இதுவரை ஒருமுறை கூட இறுதிச் சுற்றுக்கு வர முடியவில்லை
என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டன?
- உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதில்லை.
- 1999 உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடிய ஆட்டம் டை ஆனது, 2007 மற்றும் 2023-இல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
- தென் ஆப்பிரிக்க அணி ஐந்தாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடியது. இதுவரை ஒருமுறை கூட இறுதிச் சுற்றுக்கு வர முடியவில்லை.
- உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் சதம் அடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர். 2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஃபாஃப் டு பிளெசிஸ் எடுத்த 82 ரன்கள் சாதனையை அவர் முற்யடித்தார்.
- இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா பவர்பிளேயின் முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை மட்டுமே எடுத்தது. இது இந்த உலகக் கோப்பையில் பவர்பிளேயின் போது செய்யப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோராகும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவால் ஆஸ்திரேலியாவை வெல்வது அவ்வளவு எளிதாக இருக்காது
இந்தியா மூன்றாவது முறை உலகக் கோப்பையை வெல்லுமா?
வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடக்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற இந்தியாவுக்கு மூன்றாவது முறை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணி கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திர சிங் தோனி தலைமையில் இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா முதன்முறையாக இந்த கோப்பையை வென்றது.
ஆனால் ஆஸ்திரேலியாவை வெல்வது அவ்வளவு எளிதாக இருக்காது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்காவை அரையிறுதியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தின் முதல் போட்டியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.
இப்போது மீண்டும் இந்த இரு அணிகளும், ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றியது
மீண்டும் நிழலாடும் 2003 தோல்வி
ஆஸ்திரேலிய அணி 8 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்தியா நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. கோப்பையை இரண்டு முறை வென்றுள்ளது. 2003-இல் இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் திருப்தி அடைய வேண்டியிருந்தது.
2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அணி, ஆஸ்திரேலியாதான். இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றியது.
வியாழன் அன்று ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்தபோது, ‘2003 WC’ மீண்டும் சமூக வலைதளமான எக்ஸ்-இல் ட்ரெண்டாக்கத் தொடங்கியது.
பல பயனர்கள், “இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பதன் மூலம், 2003 இறுதிப் போட்டியின் கணக்கை இந்தியா தீர்க்கும்,” என்று எழுதினர்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய மண்ணில் நடந்த 71 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 33 போட்டிகளில் சமமாக வெற்றி பெற்றுள்ளன
இறுதி ஆட்டத்தில் கடும் போட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் கடந்தகால வரலாறு ஊக்கமளிப்பதாக இல்லை.
இரு அணிகளும் இதுவரை 150 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா 83 வெற்றிகளுடன், இந்தியாவின் 57 வெற்றிகளைவிட வெகு முன்னிலையில் உள்ளது.
உலகக் கோப்பைத் தொடர்களில் இரு அணிகளும் தலா 13 ஆட்டங்களில் மோதியிருக்கின்றன. இங்கும் ஆஸ்திரேலியா 8-5 என முன்னிலையில் உள்ளது.
இந்திய மண்ணில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு நடந்த 71 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 33 போட்டிகளில் சமமாக வெற்றி பெற்றுள்ளன.
மேலும், இந்த ஆண்டு இரு அணிகள் மோதிய 7 போட்டிகளின் முடிவுகளைப் பார்த்தால், நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா சற்று முன்னிலை பெற்றுள்ளது.
நடப்பு உலகக் கோப்பையைப் பற்றிப் பேசினால், அது இந்தியாவின் டாப் ஆர்டராக இருந்தாலும் சரி, மிடில் ஆர்டராக இருந்தாலும் சரி, அனைவரும் முழு ஃபார்மில் இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி எடுத்த 711 ரன்கள் தான் எந்த அணியின் பேட்ஸ்மேனும் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். அதே நேரத்தில் ரோஹித் சர்மா (550 ரன்கள்), ஷ்ரேயாஸ் ஐயர் (526 ரன்கள்) ஆகியோரும் பின்தங்கவில்லை.
மறுபுறம், அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்ச ரன்களை எடுத்தது டேவிட் வார்னர் (528). அவருடன் இணைந்து கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் தலா இரண்டு சதங்களைப் பெற்றுள்ளனர்.
பந்துவீச்சில் முன்னணியில் இருக்கும் முகமது ஷமி. 6 போட்டிகளில் மட்டுமே 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
விக்கெட்களில், இந்தியாவைப் பொறுத்தவரை, ஜஸ்பிரித் பும்ரா (18), ரவீந்திர ஜடேஜா (16), குல்தீப் யாதவ் (15), முகமது சிராஜ் (13) ஆகியோரும் பின்தங்கவில்லை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஸ் ஹேசில்வுட் (14), மிட்செல் ஸ்டார்க் (13) ஆகியோரும் எந்த சூழ்நிலையிலும் அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் பலரால் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதை ஒரு பலவீனமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்ததும் நினைவுபடுத்தப்படுகிறது.
ஆறாவது பந்துவீச்சாளர் அல்லது ஆல் ரவுண்டர் தேவையா என்ற சிக்கலும் இந்திய அணியில் இன்னும் நீடித்து வருகிறது.
எனவே, இந்த உலகக் கோப்பையின் இறுதிப் ஆட்டத்தில் இந்தியா எளிதாக வென்று விடும் எனக் கூற முடியாது. கடும் போட்டி நிலவும் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்