
பட மூலாதாரம், Getty Images
மூத்த குடிமக்களுக்கு அல்லது அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஒரு பழமையான மரத்திற்கு கிடைக்கும் ஓய்வூதியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒரு மரத்திற்கு ஓய்வூதியம் என்பது கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். பஞ்சாப்பின் அண்டை மாநிலமான ஹரியாணாவில், 75 வயதுக்கு மேற்பட்ட மரங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் பெயர் ‘பிரான் வாயு தேவதா யோஜனா’. மரங்களை பராமரிப்பதே இதன் நோக்கம்.
குறைந்தபட்சம் 75 வயது நிரம்பிய மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இத்திட்டம் முதல்வரால் கொண்டு வரப்பட்டு, ஹரியாணா தினத்தன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தனியார், பஞ்சாயத்து அல்லது வேறு எந்த இடத்திலும், 75 வயதுக்கு மேற்பட்ட பழமையான மரம் இருந்தால், அதற்கு மாதம் 2,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஹரியாணா அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
எந்தெந்த மரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன?
பழமையான மரங்களின் எண்ணிக்கை குறித்து ஹரியாணாவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது தவிர, பழமையான மரங்களை தங்கள் நிலத்தில் வைத்திருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்கள் அந்த மரங்களை முறையாக பராமரித்து வந்தால் அரசாங்கம் அவர்களுக்கு ஓய்வூதியத்தை அளிக்கும்.
வனத்துறை அதிகாரி ஜெய் குமார் கூறுகையில், “மாநிலத்தில் உள்ள 3810 பழமையான மரங்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 112 மரங்கள் ஓய்வூதியத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.”
“அத்தகைய 200 மரங்களுக்கான விண்ணப்பங்கள் கர்னால் மாவட்டத்திலிருந்து பெறப்பட்டன, இவற்றில் 50 சதவீத மரங்கள் பஞ்சாயத்து நிலத்தில் உள்ளன. இது தவிர குருக்ஷேத்திரத்தில் 68 மரங்கள் உள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசிடம் இருந்து ஓரளவு நிதியுதவி கிடைக்கும் போது, இந்த மரங்களை அவர்களால் சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதே இத்திட்டத்தின் பலன்” என்கிறார் ஜெய் குமார்.

பட மூலாதாரம், Kamal Saini
“மரங்களை பாதுகாக்க கிராம மக்கள் மேடைகளை தயார் செய்துள்ளனர்”
மரங்களின் வயதை சரிபார்ப்பது எப்படி?
மரங்களின் வயதை சரிபார்க்க கிராமத்தின் பெரியவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது மற்றும் வனத்துறையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மறுபுறம், அரசின் இந்த திட்டத்தால் உள்ளூர் மக்களிடையேயும் உற்சாகம் காணப்படுகிறது.
கிராம மக்களில் ஒருவர் பேசும்போது, “எங்களைப் பொறுத்தவரை, இந்த மரங்கள் எங்கள் மூதாதையர்கள் போல. எங்கள் கிராமத்தில் இருக்கும் ஒரு மரம் 1947ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான்பிரிவினைக்கு முந்தையது. வெளிநாடுகளில் 500 ஆண்டுகள் பழமையான மரம் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம், இனி நம் நாட்டிலும் அதை பார்க்கலாம். மரங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவை நமது பெருமை” என்று கூறினார்.
ஷம்கர் கிராம மக்களும் இந்த முடிவால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர், இக்கிராம மக்கள் இந்த பழமையான மரங்களின் நிழலில் இளைப்பாறுவதை விரும்புகின்றனர்.
இந்த மரத்தடிகளில் பலர் சிறு கடைகளை திறந்துள்ளனர்.
கிராமத்தின் மைதானத்தில் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. அதன் கீழ் கிராமத்து குழந்தைகள் விளையாடுகிறார்கள். இதன் வயது சுமார் 80 ஆண்டுகள் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Kamal Saini
மத முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் இதில் அடங்குமா?
குருக்ஷேத்திரத்தைப் பொறுத்தவரை, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மரங்களில் மத முக்கியத்துவம் வாய்ந்த மரங்களும் உள்ளன.
அதில் கீதையின் ஞானத்திற்கு சாட்சி என நம்பப்படும் ஒரு மரமும் உள்ளது.
புராணங்களின்படி அங்கு அமைந்துள்ள மரம் 5,000 ஆண்டுகள் பழமையானது என ஜோதிசர் புரோகிதர் சுக்பால் பார்கவா கூறுகிறார்.
“மரங்களை வளர்ப்பதற்கு அரசும் முயற்சி எடுக்க வேண்டும். மரங்கள் பல வருடங்களுக்கு பசுமையாக இருக்கும், நல்ல பராமரிப்பு இருந்தால் அவை நீண்ட காலம் வாழும்” என்கிறார் அவர்.
இத்திட்டம் குறித்து அறிந்ததும் மரங்களை பாதுகாக்கும் பணியை ஊராட்சிகள் தொடங்கியுள்ளன.
கர்னாலின் ஷாம்கரில், அரசின் இந்த திட்டத்திற்குப் பிறகு மரங்களை பராமரிக்க மேடைகள் அமைக்கும் பணியை பஞ்சாயத்து நிர்வாகம் துவங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் ஐந்து மரங்கள் எங்கள் கிராமத்தில் உள்ளன.”

பட மூலாதாரம், Kamal Saini
“ஓய்வூதிய தொகையை அதிகரிக்க வேண்டும்”
பிற பழமையான மரங்களையும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க பன்ஹரியானா கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.
ஓய்வூதியத் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்கின்றனர்.
ரம்பா கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினர் குர்பிரீத் சிங் கூறுகையில், “சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து வளர்க்கப்பட்ட ஒரு மரம் தனது கிராமத்தில் இருக்கிறது. கிராம மக்கள் இந்த மரங்களை மிகவும் மதிக்கிறார்கள்”
தொடர்ந்து பேசுகையில் “எப்போது திருவிழாக்கள் வந்தாலும் கிராம மக்கள் இந்த மரங்களில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்” என்று கூறினார்.
வனத்துறை அதிகாரி ஜெய் குமார் கூறுகையில், “பொதுவாக பழமையான மரங்கள் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகும். மேலும் அவை உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனின் மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன.
இத்தகைய மரங்கள் மனித வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் முக்கியம். அவை காப்பாற்றப்பட வேண்டும்” என்கிறார்.

பட மூலாதாரம், Kamal Saini
ரம்பா கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினரான குர்பிரீத் சிங், 1947ல் இருந்து இந்த மரம் தனது கிராமத்தில் இருக்கிறது என்கிறார்.
கொரோனா காலத்தில் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்
48 கேஓஎஸ் (Kos) கமிட்டியின் தலைவர் மதன் மோகன் சாப்ரா கூறுகையில், குருஷேத்ரா மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ஏராளமான மரங்கள் உள்ளன. அவை பிராண வாயு தேவதா யோஜனாவின் கீழ் ஓய்வூதியம் பெற உள்ளன.
இந்த மரங்களை பராமரிக்க அரசு எடுத்த ஒரு சிறந்த நடவடிக்கை இது.
கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் சிரமப்படுவதைக் காண முடிந்தது. அப்போது தான் மரங்களின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொண்டோம்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி பறவைகளுக்கும் மரங்கள் மிகவும் முக்கியம் என்கிறார் மதன் மோகன் சாப்ரா.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்