தெலங்கானா: சந்திரசேகர ராவின் மக்கள் நல திட்டங்களே அவருக்கு எதிராக திரும்புகிறதா?

தெலங்கானா: சந்திரசேகர ராவின் மக்கள் நல திட்டங்களே அவருக்கு எதிராக திரும்புகிறதா?

தெலங்கானா சட்டமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

தெலங்கானா மாநிலத்தில் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் ஆட்சிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால், இத்திட்டங்களால் பயனடையாதவர்களின் கோபத்திற்கும் அக்கட்சி ஆளாகியிருக்கிறது.

தற்போது சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் ஆட்சி குறித்து பல கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும்கூட, கடந்த பத்தாண்டுகளில் செயல்படுத்திய பல மக்கள் நலத் திட்டங்களும் சமூக பாதுகாப்புத் திட்டங்களும் அந்த அரசுக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. ஆனால், அதே நேரம் இத்திட்டங்களால் பயனடையாதவர்களின் கோபத்திற்கும் அக்கட்சி ஆளாகியிருக்கிறது.

விவசாயிகளுக்கான ‘ரைத்து பந்து’, முதியோருக்கான உதவித் தொகை அதிகரிப்பு, பட்டியலினத்தோருக்கான ‘தலித் பந்து’, வீடில்லாதவர்களுக்கு இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடுகளை அளிக்கும் திட்டம் போன்றவை பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றன. ஆனால், இத்திட்டங்களில் பலனடைந்தவர்கள், பலனடையாதவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அரசின் மீது அதிருப்தி இருக்கிறது.

தெலங்கானா

பட மூலாதாரம், FACEBOOK/KCR

ரைத்து பந்து திட்டம் மக்களிடம் வரவேற்பு பெற்றதா?

பி.ஆர்.எஸ். ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் மிக முக்கியமான திட்டம் ‘ரைத்து பந்து’ திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஆறாயிரம் ரூபாய் என வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது.

ஆனால், இதில் பணக்கார விவசாயிகளே கூடுதல் பலன் பெறுகிறார்கள் என்ற அதிருப்தி இருக்கிறது. 2- 3 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் சிறு விவசாயி, இந்தத் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பெற முடியும். ஆனால், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் பணக்கார விவசாயிகள், லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெறுவார்கள்.

‘தலித் பந்து’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பட்டியலினத்தவருக்கு பத்து லட்ச ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, மாநிலத்தில் வீடில்லாதவர்களுக்கு 2 படுக்கை அறைகளைக் கொண்ட வீடுகளைக் கட்டித்தரும் ‘2 பிஎச்கே’ திட்டத்தை அமல்படுத்தியது பிஆர்எஸ் அரசு. முதற்கட்டமாக 2.5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பெரும்பகுதி வீடுகள் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்களின் கீழ் பெரும் எண்ணிக்கையில் பயனடைந்தவர்கள் இருந்தாலும், பல்வேறு மட்டங்களில் அதிருப்தியும் நிலவுகிறது. ‘ரைத்து பந்து’ திட்டத்தைப் பொருத்தவரை, இந்தத் திட்டத்தின் கீழ் பணக்கார விவசாயிகளே கூடுதலாகப் பலன்பெறுகிறார்கள் என்ற அதிருப்தி சிறு விவசாயிகளிடம் இருக்கிறது.

தெலங்கானா தேர்தல்
படக்குறிப்பு,

‘தலித் பந்து’ திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்பட்ட பட்டியலினத்தவருக்கு பத்து லட்ச ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

தலித் பந்து – பிசி பந்து திட்டங்கள் எவ்வளவு கை கொடுத்தது?

‘தலித் பந்து’ திட்டத்தைப் பொறுத்தவரை, தகுதியுள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த இந்த நிதி வெகுவாக உதவுகிறது என்பது உண்மைதான். ஆனால், பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஒதுக்கப்படுவதாக குரல் எழுப்பியதால், ‘பிசி பந்து’ போன்ற திட்டங்களையும் துவங்கியது அரசு. ஆனால், இப்படிப் பல தரப்பையும் சேர்ந்த எல்லோருக்கும் பத்து லட்ச ரூபாய் தருவதற்கு நிதி இல்லாத காரணத்தால் இந்தத் திட்டங்கள் இப்போது முடங்கிக் கிடக்கின்றன.

மாநிலத்தில் வீடில்லாதவர்களுக்கான ‘2BHK’ திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மிகக் குறைவாக இருப்பதும் தரம் மோசமாக இருப்பதும் பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறன.

“கே. சந்திரசேகர ராவ் முதல்வராகி மூன்றாண்டுகளுக்கு பிறகு ‘ரைத்து பந்து’, ‘ரைத்து பீமா’ போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார். விளைச்சலில் இருந்து கிடைக்கும் வருவாயோடு சேர்ந்து, கூடுதல் வருவாயாக அமைந்தது.

ரைத்து பந்து' திட்டம்

பட மூலாதாரம், TELENGANA GOVT

ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என பணம் வழங்கப்பட்டதால் பல ஏக்கர் நிலத்தை வைத்திருந்த பணக்கார விவசாயிகள் எதுவுமே செய்யாமல் கூடுதல் பணம் கிடைத்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் கே.சி.ஆரின் அமைச்சர்கள் பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றார்கள்.

ஆனால், ஏழை விவசாயிக்கு மிகக் குறைவான பணமே கிடைத்தது. சிறு விவசாயிகளுக்கு அது போதுமானதாக இல்லை. ஆகவே இது அவர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கும் இதில் ஏதும் கிடைக்கவில்லை என்பதால் அவர்களுக்கும் அதிருப்திதான்.

இதற்குப் பிறகு ‘தலித் பந்து’, ‘பிசி பந்து’ போன்ற திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்தினார். ‘தலித் பந்து’ திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோர் எல்லோருக்கும் பத்து லட்ச ரூபாய் அளிப்பதாகச் சொன்னார். இதே போன்ற திட்டங்களை மற்ற ஜாதிகளுக்கும் விரிவுபடுத்தினார்.

ஆனால், அந்த அளவுக்கு அரசிடம் பணம் இல்லை. விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றாலும் யாருக்கும் பணம் வழங்கப்படவில்லை. ஆகவே பலன் கிடைக்காதவர்கள் அரசின் மீது கோபமடைந்திருக்கிறார்கள்” என்கிறார் அரசியல் செயல்பாட்டாளரான பேராசிரியர் எம். கோதண்ட ராம்.

மாநிலத்தின் சமூக நலத்திட்டங்களின் வரலாறு

தெலங்கானா தேர்தல்

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் சமூக நலத் திட்டங்களுக்கு என ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. என்.டி. ராமாராவ் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே இரண்டு ரூபாய்க்கு அரசி வழங்கப்படும் திட்டம் துவங்கப்பட்டது. பல அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டன.

“என்.டி. ராமாராவின் கீழ் அமைச்சராக இருந்த கே. சந்திரசேகர ராவும் அந்தப் பாரம்பரியத்தை பின்பற்றுகிறார். தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிந்து, அவர் முதலமைச்சரானதும் பல மக்கள் நலத் திட்டங்களை அவர் செயல்படுத்த ஆரம்பித்தார். கணவரை இழந்தோர், முதியவர்கள் ஆகியோருக்கான உதவித் தொகை அதிகரிக்கப்பட்டது. கள் இறக்குவோர், நெசவாளர்கள் ஆகியோருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 24 கிலோ அரிசியே வழங்கப்படும் என்ற உச்சபட்ச அளவு நீக்கப்பட்டு, குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒருவருக்கு மாதம் ஆறு கிலோ அரிசி வழங்கப்பட்டது. இவையெல்லாமே மிக நல்ல திட்டங்கள்தான்” என்கிறார் என். கோதண்டராம்.

இரண்டு படுக்கையறை வீடு திட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முன்னோடித் திட்டமாக இந்தத் திட்டத்தைக் குறிப்பிடுகிறது மாநில அரசு. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 500 சதுர அடி பரப்புள்ள வீடு கட்டித்தரப்படுகிறது. ஆனால், இதில் பலருக்கும் அதிருப்தி இருக்கிறது.

“மாநிலத்தில் 26 லட்சம் குடும்பங்களுக்கு வீடில்லை. ஆனால், அரசு 2.5 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியிருக்கிறது. பல இடங்களில் இந்த வீடுகளின் கட்டுமானத் தரம் மிக மோசமாக இருந்தது. மற்றொரு பக்கம் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கட்சிக்காரர்களுக்கே முன்னுரிமை அளித்தார்கள். ஆகவே பி.ஆர்.எஸ்சின் தொண்டர்களாக இருப்பவர்களுக்கு, அதிலும் தலைவர்களைத் தெரிந்தவர்களுக்கே வீடு கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது.

ஆகவே இந்தத் திட்டத்தைப் பொருத்தவரை, ஒன்று வீடு கிடைக்கவில்லை என்ற அதிருப்தி இருக்கும். அல்லது கிடைத்த வீடு நன்றாக இல்லை என்ற அதிருப்தி இருக்கும். எனவே இந்தத் திட்டத்தை அரசியல் ரீதியாகவும் சமூக பாதுகாப்பு என்ற அடிப்படையிலும் தோல்வியடைந்த திட்டம் என்றுதான் சொல்லவேண்டும்” என்கிறார் கோதண்டராம்.

வேலைவாய்ப்பின்மை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?

தெலங்கானா தேர்தல்
படக்குறிப்பு,

வேலைவாய்ப்பின்மை தெலங்கானா மாநிலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாக இருக்கிறது.

ஆனால், முதியோருக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது மிகமிக நல்ல விஷயம் என்கிறார் அவர். இதன் மூலம் அவர்களது நிலை மேம்பட்டதோடு, குடும்பங்களுக்குள்ளும் அவர்களுக்கு ஒரு மரியாதை கிடைக்க இது உதவியது என்கிறார் அவர்.

ஆனால், இந்தத் திட்டங்களில் உள்ள ஊழல், அரசுக்கு எதிரான மன நிலையை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான சீனிவாச ரெட்டி.

“இந்த அரசு கொண்டுவந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை, இவை ஒன்பதரை ஆண்டுகளாக நன்றாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தத் திட்டங்களின் பலன்களைப் பெறாதவர்களும் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் இவை ஆளும் கட்சிக்கு எதிராகச் செல்லக்கூடும். மற்றொரு பக்கம் 2 பிஎச்கே திட்டம் போன்றவற்றில் உள்ள முறைகேடுகளும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தும்” என்கிறார் சீனிவாச ரெட்டி.

வேலைவாய்ப்பின்மை தெலங்கானா மாநிலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாக இருக்கிறது. இது தொடர்பான அதிருப்தி பல மட்டங்களில் நிலவுகிறது. தற்போதைய அரசு வந்ததில் இருந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வுகளை சரியாக நடத்தவில்லை என்ற அதிருப்தி இருக்கிறது. இதனால், அரசுப் பணிக்காக தயாராகிவந்த இளைஞர்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.

2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3,016 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது பி.ஆர்.எஸ். ஆனால், அந்தத் திட்டம் துவங்கப்படுவதற்கு முன்பே கோவிட் பரவல் ஏற்பட்டது.

இதனால், நிதி இழப்பு என்ற காரணத்தைக் காட்டி இந்தத் திட்டம் இன்னும் துவங்கப்படவே இல்லை. இது இளைஞர்களை விரக்திக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆனால், இந்தத் திட்டங்கள் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. மக்கள் தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்கிறார் பி.ஆர்.எஸ். கட்சியின் செய்தித் தொடர்பாளரான டாக்டர் ஷ்ரவண்.

“இது போன்ற பெரிய மக்கள் நிலத் திட்டங்களை ஒரே நேரத்தில் செயல்படுத்த கடவுளாலும் முடியாது. தலித் பந்து திட்டத்தைப் பொறுத்தவரை, மிக ஏழைகளிலும் ஏழைகளில் இருந்து துவக்கியிருக்கிறோம். வரிசையாக எல்லோருக்கும் நிதியளித்து, அவர்களைத் தொழில்முனைவோராக்கி, சமூகத்தில் மரியாதையைப் பெற்றுத்தருவதுதான் நோக்கம். கே.சி.ஆரின் கடைசி மூச்சுள்ளவரை இதற்காக பாடுபடுவார். அடுத்ததாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்போது இந்தத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

வீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை, நாட்டில் எங்கேயேயாவது இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? 8.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடுகள் வெளிப்படையாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. குலுக்கல் மூலம் ஒதுக்கீடு நடப்பதால் இதில் எந்த ஊழலும் கிடையாது. 2004ல் இருந்து 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆந்திராவில் இதுபோல எத்தனை வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது? அப்படி கட்டிக் கொடுத்திருந்தால், நாங்கள் ஏன் இத்தனை லட்சம் வீடுகளைக் கட்ட வேண்டியிருக்கிறது?

பல மாநில அரசுகள் வீட்டுத் திட்டத்தை செயல்படுத்துகின்றன. ஆனால், அதில் வழங்கப்படும் தொகைகள் மிகக் குறைவானவை. அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போதும் லட்சக்கணக்கான வீடுகளைக் கட்டி பயனாளிகளுக்கு அளிப்போம். இது ஒரு தொடர் நடவடிக்கை” என்கிறார் டாக்டர் ஷ்ரவண்.

பொதுவாக, மக்கள் நலத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட அரசுக்கு கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தருவதுதான் வழக்கம். ஆனால், தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் மக்கள் நலத் திட்டங்களும் அவை செயல்படுத்தப்பட்ட விதமும் அவருக்கே எதிராக திரும்பி சற்று சிக்கலை ஏற்படுத்தியிருப்பது ஒரு அரசியல் முரண்தான்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *