மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தமிழ்நாட்டில் என்ன சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும்?

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தமிழ்நாட்டில் என்ன சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும்?

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் என்ன சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும்?
படக்குறிப்பு,

சுமார் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இன்று துவங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நீண்டகால நோக்கில் சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை’ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று துவக்கி வைத்திருக்கிறார்.

இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுமார் 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் சுமார் 12 கோடி ரூபாய் அளவுக்கு இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும்.

2021ஆம் ஆண்டின் தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க. வெளியிட்ட 10 ஆண்டுகளான லட்சிய ஆவணத்தில் இந்தத் திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து இந்தத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியதாலும் தொடர்ந்து ஆர்வம் அதிகரித்தாலும் இந்த ஆண்டே திட்டத்தைத் துவங்க அரசு முடிவுசெய்தது.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களிலேயே பொது விநியோகத் திட்டத்திற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நலத் திட்டமாக இந்தத் திட்டமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பொதுவாக நலத் திட்டங்கள் எல்லாத் தரப்பினருக்கும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, சில வரையறைகளை தமிழ்நாடு அரசு விதித்திருக்கிறது. அதன்படி, ஆண்டு வருமானம் 2.5 லட்ச ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு பணியாளர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், கார் வைத்திருப்பவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது.

பயனாளிகளைத் தேர்வுசெய்து தொகை அளிப்பதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார் தமிழ்நாடு மாநில திட்டக் கமிஷனின் துணைத் தலைவரான ஜெ. ஜெயரஞ்சன். “முன்பெல்லாம் இம்மாதிரி மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவரும்போது, யாருக்கு அளிக்க வேண்டும், அளிக்கக்கூடாது என்பதை முடிவுசெய்ய முடியாது. பயனாளிகளைத் தேர்வுசெய்ய எந்த புள்ளிவிவரமும் இருக்காது. அதனால் எல்லோருமே பயன்பெறும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்துவார்கள். இப்போது தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் அப்படித்தான் செயல்படுகிறது.

ஆனால், இப்போது புள்ளிவிவரங்கள் துல்லியமாக கிடைக்கின்றன. அப்படிக் கிடைக்கும் புள்ளிவிவரங்களைத் தொகுக்கவும் முடியும். இவற்றைப் பயன்படுத்தி, யாருக்கு கட்டாயமாக உரிமைத் தொகையை அளிக்க வேண்டும், யாருக்கு அளிக்க வேண்டாம் என்பதை முடிவுசெய்ய முடியும். முதற்கட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான அட்டையைப் பெற்ற அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர். மற்றொரு பக்கம் பல்வேறு வரையறைகளை வைத்து, அந்த வரையறைக்குள் வந்தவர்கள் நீக்கப்பட்டனர். இந்த இரண்டிற்கும் நடுவில் இருப்பவர்களை துல்லியமான புள்ளிவிவரங்களைக் கொண்டு தேர்வுசெய்கிறோம்” என்கிறார் ஜெயரஞ்சன்.

“நம்பிக்கையைத் தரும் திட்டம்”: ஜெ. ஜெயரஞ்சன்

இந்தத் திட்டம் இப்போதுதான் துவங்கப்பட்டிருப்பதால், இதன் நேரடியான தாக்கம் குறித்துத் தெரிய வர மாதங்களாகலாம். ஆனால், ஆரம்பகட்டத்தில் பார்க்கும்போது இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் ஜெயரஞ்சன். “பெருநகரங்களில் வேலை பார்ப்பவர்கள் வாழ்க்கையை நடத்த இரண்டு, மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறார்கள். திடீரென ஒரு வீட்டில் வேலையைவிட்டு நிறுத்திவிட்டால், அந்த மாத சம்பளம் நின்றுவிடும். அம்மாதிரியான சூழலில் இந்த உரிமைத் தொகை உதவிகரமாக இருக்கும். அதையெல்லாம்விட, மாதாமாதம் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையைத் தரும். செலவுகளைத் திட்டமிடவும் உதவும். இந்த ஆயிரம் ரூபாய் ஒரு குடும்பத்தின் எல்லாத் தேவையையும் பூர்த்தி செய்ய உதவாது, ஆனால், நிலைத் தன்மையைத் தரும்” என்கிறார் ஜெயரஞ்சன்.

தவிர, இந்தத் திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடும்போது இந்தத் திட்டத்தை மட்டும் தனியாக மதிப்பிடக் கூடாது என்கிறார் அவர். “பல நாடுகளில் மாந்திர செலவுக்கான குறைந்தபட்சத் தொகையை அளிக்கிறார்கள். இங்கே தமிழ்நாடு அரசு தனது பொருளாதரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொண்டு, அந்த திசையை நோக்கி பயணிக்க முயற்சிக்கிறது என்பதாகத்தான் இந்தத் திட்டத்தைப் பார்க்க முடியும். ஆகவே, இந்தத் திட்டத்திற்கு என சில வரையறைகள் உண்டு.

மேலும், இந்தத் திட்டத்தைத் தனியாகப் பார்க்கக்கூடாது. பொது விநியோகத் திட்டம், பெண்கள் இலவச பேருந்துத் திட்டம், குழந்தைகளுக்கான காலை உணவு, படிக்கும் பெண்களுக்கான மாதாந்திரத் தொகை ஆகியவற்றோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்து மாநிலத்தில் உள்ள பெண்களின் வாழ்வில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் ஜெயரஞ்சன்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் என்ன சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும்?
படக்குறிப்பு,

இந்தத் திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடும்போது இந்தத் திட்டத்தை மட்டும் தனியாக மதிப்பிடக் கூடாது – ஜெயரஞ்சன்

“வீட்டு வேலைக்கும் அங்கீகாரம் கிடைக்கிறது”

பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை அங்கீகரிப்பதால் இந்தத் திட்டம் பொதுவாக வரவேற்கத் தக்கது என்கிறார் அகில இந்திய மாதர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் ஜி. மஞ்சுளா. “இந்தத் திட்டத்தைப் பொதுவாக வரவேற்கிறோம். இதுவரை வீட்டில் செய்யப்படும் வேலைக்கு மதிப்பே கிடையாது. யாருமே அதை வேலையாகக் கருதியதில்லை. ஆனால், இந்த உரிமைத் தொகையின் மூலம் வீட்டு வேலையும் ஒரு வேலையாகக் கருதப்படுகிறது. காலம் செல்லச்செல்ல வீட்டில் செய்யப்படும் வேலை குறித்த மனநிலையை இது மாற்றும்.

அது தவிர, ஆயிரம் ரூபாய் என்பது பலருக்குப் பெரிய தொகை. ஏனென்றால், வீட்டு வேலை செய்பவர்கள் ஆயிரம் ரூபாய்க்காக கூடுதலாக ஒரு வீட்டிற்குச் சென்று வேலைசெய்கிறார்கள். அந்த வகையில் இது ஒரு முக்கியமான உதவி” என்கிறார் மஞ்சுளா.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் என்ன சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும்?
படக்குறிப்பு,

“இப்போதுதான் இந்தத் திட்டம் துவங்கப்படுகிறது என்பதால், இதன் நீண்ட காலத் தாக்கம் குறித்து இப்போதே சொல்வது கடினம்.”

“பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரிக்கும்”: சி. விஜயபாஸ்கர்

இப்போதுதான் இந்தத் திட்டம் துவங்கப்படுகிறது என்பதால், இதன் நீண்ட காலத் தாக்கம் குறித்து இப்போதே சொல்வது கடினம். இருந்தபோதும் இந்தத் திட்டத்தில் கிடைக்கும் தொகையை பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொருத்து பலவிதமான தாக்கங்கள் இருக்கலாம் என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரான எம். விஜயபாஸ்கர்.

“இந்தத் திட்டத்தினால் மட்டும் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடக்கூடாது. ஒட்டுமொத்தமாகவே நலத்திட்டங்கள் அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கான விடுதலை அதிகரிக்கிறது. வங்கியில் பணம் இருக்கும்போது வீட்டு ஆண்களைச் சார்ந்திருப்பது குறையும். குழந்தைகளின் ட்யூஷன் போன்றவற்றுக்கு கூடுதலாகச் செலவழிப்பார்கள். இது கல்வி நிலையை மாற்றும். ஆனால், பெண்கள் இந்தத் தொகையை வைத்து என்ன செய்வார்கள் என்பது பற்றி பார்க்கவேண்டும். அடித்தட்டு மக்கள் மத்தியில் கல்விக்கும் மருத்துவத்திற்குமான செலவுதான் மிகப் பெரியதாக இருக்கிறது. இதுதவிர, கடந்த 2 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அதனைச் சமாளிக்க இது ஒரு சிறிய உதவியாக அமையும்.

மூன்றாம் உலக நாடுகளில் எங்கெல்லாம் உதவித் தொகை அளிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் பெண்கள் அதனைச் சேமித்தார்கள். அடுத்ததாக குழந்தைகளின் படிப்பிற்கும் மருத்துவத்திற்கும் செலவுசெய்தார்கள். சொந்தத் தொழிலில் ஈடுபட்டார்கள். அது போலவே இங்கேயும் நடக்கும் என எதிர்பார்க்கலாம்” என்கிறார் விஜயபாஸ்கர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் என்ன சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும்?
படக்குறிப்பு,

நலிந்த பிரிவினருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையை இந்தத் திட்டத்திற்கு அரசு மடைமாற்றிவிடுமோ என்ற கவலைகளும் சில தரப்பினருக்கு இருக்கின்றன.

“உரிமைத் தொகைக்கான வரம்பை அதிகரிக்க வேண்டும்”

ஆனால், இதில் சில பிரச்னைகள் இருக்கின்றன என்கிறார் மஞ்சுளா. “இந்தத் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த உதவி கிடையாது என்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, அதில் தேர்வுசெய்யப்படுவோருக்கு ஊதியமே கிடையாது. இருந்தாலும் அவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒரு வீட்டில் 21 வயதுக்கு மேல் இரண்டு பெண்கள் இருந்தாலும் ஒருவருக்குத்தான் உரிமைத் தொகை தருகிறார்கள். மற்றொரு பெண் செய்யும் வேலை கணக்கில் கொள்ளப்படாமல் போகிறது. அதனை மாற்றி, ஒரு வீட்டில் தகுதியுடைய எத்தனை பெண்கள் இருந்தாலும் அத்தனை பேருக்கும் தர வேண்டும். தவர இந்தத் திட்டத்திற்கான வருமான வரம்பு மிகக் குறைவாக இருக்கிறது. அதனை அதிகரிக்க வேண்டும்” என்கிறார் மஞ்சுளா.

தவிர, ஏற்கனவே நலிந்த பிரிவினருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையை இந்தத் திட்டத்திற்கு அரசு மடைமாற்றிவிடுமோ என்ற கவலைகளும் சில தரப்பினருக்கு இருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *