
பட மூலாதாரம், X/@LOKESH KANAGARAJ
விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழா இன்று நடைபெறுகிறது. கலவையான விமர்சனங்களுக்கு நடுவில் வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?
விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான ‘லியோ’ திரைப்படத்திற்கு இன்று, சென்னையில் ‘சக்ஸஸ் மீட்’ நடக்கவிருக்கிறது.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த சக்ஸஸ் மீட் நடக்கவிருக்கிறது. லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்காததால், இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டை விஜய்யின் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஆனால், இந்தப் படத்தின் வெற்றி தொடர்பாக கடந்த சில நாட்களாக பெரும் விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்தப் படம் வெற்றிப் படம் என்று சிலரும், இந்தப் படம் போதுமான வசூலைச் செய்யவில்லையெனச் சிலரும் சமூக வலைதளங்களில் வாதிட்டு வருகின்றனர்.
லியோ தயாரிப்புச் செலவு, வசூல் எவ்வளவு?
லியோ படத்தைப் பொறுத்தவரை, அதன் தயாரிப்புச் செலவு எவ்வளவு என்பது துல்லியமாக யாருக்கும் தெரியாது. இது குறித்துத் தயாரிப்புத் தரப்பு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. தோராயமாக 250 முதல் 300 கோடி ரூபாயில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் பெருமளவு பணம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் ஆகியோரின் ஊதியத்திற்குச் செலவிடப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் வெளியாகும்போது, திரையரங்குகளில் இருந்து 80 சதவீதம் அளவுக்கு தயாரிப்புத் தரப்பு பங்கு கேட்டதால், பல திரையரங்குகள் இப்படத்தை வெளியிட தயக்கம் காட்டின. பல திரையரங்குகள், அக்டோபர் 18ஆம் தேதிவரைகூட இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தின. முடிவில் தமிழ்நாட்டில் 850 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது.
இந்தப் படம் வெளியான பிறகு, கலவையான விமர்சனங்களையே படம் பெற்றது. இருந்தபோதும், படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது. ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் 461 கோடி ரூபாயை வசூலித்த இந்தப் படம், 12 நாட்களில் சுமார் 540 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படத்தைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.
திரைப்படங்களின் வசூலைக் கண்காணிக்கும் இணையதளமான sacnilk தரும் தகவல்களின்படி, படம் வெளியாகி 12 நாட்களில் இந்தியாவில் மட்டும் 362.35 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.

பட மூலாதாரம், X / TRISHA
லியோ படத்தால் யாருக்கு லாபம்?
இந்த நிலையில்தான், படம் வெளியாகி 14வது நாளிலேயே சக்சஸ் மீட்டிற்கு தயாரிப்புத் தரப்பு ஏற்பாடு செய்திருக்கிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், இந்தப் படத்தால் தங்களுக்கு லாபமில்லை என ஊடகங்களில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக புதிய படங்களுக்கு 60 முதல் 70 சதவீதம் மட்டுமே பங்களிப்புத் தரப்படும் நிலையில், இந்தப் படத்திற்கு 80 சதவீதம் பங்களிப்புச் செய்ததால், தங்களுக்கு லாபமே இல்லை எனக் கூறிவருகிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
ஆனால், தயாரிப்புத் தரப்போ தாங்கள் வெறும் 40 திரையரங்குகளுக்கு மட்டுமே 80 சதவீதம் பங்களிப்புப் பெற்றதாகக் கூறுகிறது. ஆனால், திருப்பூர் சுப்பிரமணியன் அதை மறுக்கிறார்.

ஜெயிலர் வசூலை லியோ முந்துமா?
அதேபோல, ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் மாதம் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வசூலை இந்தப் படம் முந்துமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஜெயிலர் படம் ஒட்டுமொத்தமாக 604 கோடி ரூபாயை வசூலித்ததாக sacnilk இணையதளம் தெரிவிக்கிறது. இந்த வசூலை லியோ படம் தாண்டிச் செல்ல வேண்டுமானால், அடுத்த சில நாட்களில் 60 கோடி ரூபாயை படம் வசூலிக்க வேண்டும்.
ஆனால், வரும் வெள்ளிக்கிழமை பல மொழிகளிலும் சிறிதும் பெரிதுமாக பல படங்கள் வெளியாகவிருக்கின்றன. நவம்பர் 10ஆம் தேதி கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனால், லியோ திரையிடப்படும் படங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். ஆகவே, ஜெயிலர் படத்தின் வசூலை லியோ தாண்டுமா என்பது ஒரு கேள்வியாகவே நீடிக்கிறது.

லியோ வசூல் ரூ.540 கோடி என்பது உண்மையா?
இந்தப் படத்தின் வெற்றி குறித்த சர்ச்சைகள் தேவையில்லாதவை என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான ஸ்ரீதர் பிள்ளை.
“விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு அடிபடும் நிலையில், படம் அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சர்ச்சைகள்தான். பிறகு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்கவில்லை. வேறு சில பிரச்சனைகளும் எழுந்தன. சமீப காலத்தில் வேறு எந்தப் படத்திற்கும் இது போன்ற பிரச்சனைகள் வரவில்லை. இந்த நிலையில், லியோ படம் ஒட்டுமொத்தமாக 540 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தயாரிப்புத் தரப்பு சொல்லும் நிலையில், அதை நம்பித்தான் ஆக வேண்டும்” என்கிறார் அவர்.
படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையில் வசூலைப் பிரித்துகொள்வது தொடர்பான பிரச்னையைப் பொறுத்தவரை, அது எல்லா பெரிய படங்களுக்கும் இருக்கும் பிரச்சனைதான் என்கிறார்.
“எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். காலத்திலிருந்து இந்தப் பிரச்சனை இருந்துவருகிறது. இந்தியாவிலேயே தனித் திரையரங்குகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். முன்பு 2,400 திரையரங்குகள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது வெறும் 850 – 900ஆகக் குறைந்துவிட்டது. வருடத்திற்கு 200 படங்கள் வெளியாகும் நிலையில், திரையரங்குகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இம்மாதிரி உரசல் எழுவது சகஜம்தான். அது ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில்லை” என்கிறார் அவர்.
லியோ அன்கட் விரைவில் வெளியீடு
இந்தப் படத்தின் தயாரிப்பு, வசூல் குறித்து நெருக்கமாக அறிந்தவர்கள் வேறு சில விஷயங்களையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, மிகவும் எதிர்பார்ப்புள்ள படம் ஒன்றுக்கு, 80 சதவீத பங்கு கேட்பது தமிழ்த் திரையுலகில் புதிதல்ல என்கிறார்கள் அவர்கள். சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம் நடித்து, பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படத்திற்கு 90 சதவீத பங்கு கேட்கப்பட்டதையும் அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
லியோ படத்தைப் பொருத்தவரை, நிச்சயமாக வெற்றிப்படம் எனக் கூறும் அவர்கள் பிரிட்டனில் அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பிரிட்டனில் மட்டும் 1.5 மில்லியன் பவுண்டுகளை லியோ வசூலித்திருக்கிறது. விரைவில், ‘uncut’ லியோ பதிப்பு வெளியாகவிருக்கும் நிலையில், அதற்கும் அங்கு பெரும் ஆர்வம் நிலவுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி, மிகப் பெரிய தொகை ஒன்றை அளித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறது. தற்போது திரையரங்குகளில் வசூலாகியிருக்கும் தொகையோடு, நெட்ஃப்ளிக்ஸ் அளித்த தொகையையும் சேர்த்தால், மொத்த வருவாய் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்