
பட மூலாதாரம், Facebook/Annamalai
சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்பேசியபோது, “வரவுள்ள 2024 என்பது நரேந்திர மோதிக்கான தேர்தல். இந்தத் தேர்தலில் அனைத்து தொகுதிகளும் நரேந்திர மோதியின் வசம் கிடைக்கும்,” என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்துள்ளது என்றும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியே திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்ணாமலை சொல்வதுபோல், திமுகவை தனித்து நின்று எதிர்க்கும் அளவுக்கு பாஜக கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக வளர்ந்துள்ளதா, அவரது கடுமையான அணுகுமுறை கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளதா என்பது குறித்து பிபிசி தமிழிடம் மூத்த செய்தியாளார் ப்ரியன் பேசினார்.
அண்ணாமலை திமுக குறித்து என்ன பேசினார்?
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இது எங்களுடைய தேர்தல். அதற்கான பணிகளை நாங்கள் செய்யப் போகிறோம். 2024 தேர்தல் மட்டுமே இதற்கு ஒரேயொரு பதில். கருத்துகளை யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், இதற்கு தேர்தல் முடிவுகளே சரியான பதிலைக் கூற முடியும்.” என்று பதிலளித்தார்.
வரவுள்ள 2024 தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பாஜகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆதரவாகத்தான் இருக்கும் எனக் கூறிய அண்ணாமலை, “அதிமுகவா பாஜகவா என்ற நிலை இங்கு இல்லை என்றும் 2024 தேர்தலைப் பொறுத்தவரை திமுகவா பாஜகவா என்பதே போட்டி என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“பாஜக பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. தேர்தல் நடைபெறும்போது திமுக ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் முடிவடைந்திருக்கும். இந்நிலையில், திமுகவின் ஆட்சியை மதிப்பீடு செய்து, மக்கள் முடிவெடுப்பார்கள். அதனால்தான் திமுக, பாஜக இரண்டுக்குமான போட்டி இது,” என்று தான் கூறுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக யாருடன் மோத வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டவர், “நாங்கள் மோத வேண்டியது திமுகவிடம்தான். மற்ற கட்சிகளுக்கு அதிகாரம் இல்லாதபோது, அவர்களுக்குப் பதில் கூறுவதில் பயனில்லை,” என்றார்.
மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவும் மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலில் மோதுவதாக அண்ணாமலை உறுதியாகத் தெரிவித்தார்.
“பாஜக அடிப்படையிலேயே பலம் பெற்றிருக்கிறது. வரவுள்ள 2024 தேர்தல் அதை உறுதி செய்யும்,” என்று குறிப்பிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

பாஜக தமிழ்நாட்டில் பலம் பெற்றுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
அண்ணாமலை கூறுவது போல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்துள்ளதா என்று மூத்த செய்தியாளர் ப்ரியனிடம் கேட்டபோது, “தங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டியே என்பதைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், எதார்த்த நிலை அப்படி இல்லை.
தனியாக நின்று பாஜக பழக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் முடிவுகள் அவர்களது பலத்தைக் காட்டுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றிலும்கூட குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அவர்களால் பார்க்க முடியவில்லை,” என்று கூறினார்.
அதுமட்டுமின்றி அண்ணாமலை தலைமையின்கீழ் பாஜக வளர்ந்துள்ளதாக அவர் நினைத்தாலும் பாஜக தலைமை அப்படி நினைக்கவில்லை என்று கூறுகிறார் ப்ரியன்.
“அப்படி நினைத்திருந்தால், பாஜக மேலிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வர முயற்சி எடுத்திருக்காது. அண்ணாமலை முன்பு ஜெயலலிதா குறித்துப் பேசியபோதே, அதிமுக கோபம் கொண்டது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் அமித் ஷா சமாதானம் செய்து வைத்தார். ஒருவேளை பாஜக தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட நினைத்திருந்தால், அந்தச் சமாதான முயற்சி நடந்திருக்காது. அதற்குப் பிறகு அந்தக் கூட்டணி தொடர்ந்திருக்காது.
அதற்கும் பிறகு அண்ணாமலை தனது கடும் போக்கைத் தொடர்ந்த காரணத்தாலேயே அதிமுக உடனான கூட்டணி உடைந்தது,” என்று கூறுகிறார் மூத்த செய்தியாளர் ப்ரியன்.
தமிழக பாஜக வளர்ந்திருப்பதாக மத்திய தலைமை நினைத்திருந்தால், கூட்டணியைத் தக்க வைப்பதற்கான முயற்சியையே எடுத்திருக்காது என்றும் அவர் கூறுகிறார். சுமூகமாக இருந்த கூட்டணியை உடைத்துவிட்டதாகவே மேலிடம் அண்ணாமலை குறித்துக் கருதுவதாகவும் ப்ரியன் கூறுகிறார்.
அண்ணாமலை குறித்து பாஜக தலைமை என்ன நினைக்கிறது?
அண்ணாமலையின் இந்தக் கடுமையான அணுகுமுறை மீது டெல்லி பாஜக வருத்தத்தில் இருப்பதாக இருந்தால், அவரது தலைமை நீடிப்பது ஏன் என்று கேட்டபோது, “அவர்மீது தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தலைமை நினைப்பதாலேயே அவர் இன்னும் நீடிப்பதாக” கூறுகிறார் ப்ரியன்.
பாஜக தலைமை அவர் மீது கோபமாக இருப்பதாகக் கூறும் ப்ரியன், இப்போதைக்கு இருதரப்பையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் அதனாலேயே அண்ணா குறித்த அண்ணாமலையின் நிலைப்பாட்டை செய்தியாளர்கள் கேட்டபோது அதுகுறித்துப் பேச அவர் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்.
“இதுவொரு போர் நிறுத்த சூழலைப் போன்றது. அதிமுக, பாஜக குறித்துக் கடுமையாக எதுவும் பேசாது. அதேபோல் பாஜகவும் அதிமுக குறித்து இப்போதைக்கு எதுவும் பேசாது. இவர்களது கூட்டணி முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்பதை நம்புவது கடினம்.
இன்று பேசும்போதுகூட, திமுகவுடன் மட்டுமே பாஜகவின் போட்டி என்று கூறிய அண்ணாமலை அதிமுக குறித்துப் பேசவே மறுத்துவிட்டார். அதோடு அதிமுகவும் இன்னும் பாஜக தலைமையை, மோதியின் ஆட்சியை விமர்சிக்கும் அளவுக்கு கூட்டணியை உடைத்துக் கொள்ளவில்லை. அதுவும் கேள்விகளை எழுப்புகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், PRIYAN
திமுகவை பாஜக-வால் தனித்து நின்று எதிர்க்க முடியுமா?
பாஜக தனித்து நின்றால் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரியும் எனக் கூறுகிறார் ப்ரியன். “பாஜக, அதிமுக, நாம் தமிழர் என திமுக எதிர்ப்பு வாக்குகள், மூன்றாகப் பிரியும். அதேபோல, பாஜக எதிர்ப்பு வாக்குகளும், திமுக, நாம் தமிழர் எனப் பிரியும். ஆனால் அதில் பெரும்பான்மை வாக்குகள் திமுகவுக்கே கிடைக்கும்.
ஆகவே, திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரியும்போது அது திமுகவுக்குத்தான் சாதகமாக அமையும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாஜக மத்திய தலைமை தேர்தலின்போதுதான் முடிவெடுக்கும். பாமக தவிர்த்து தற்போது தமிழக பாஜக கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்குப் பெரிய செல்வாக்கு இல்லை,” என்று கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, வரவுள்ள 2024 தேர்தல் மத்தியில் நரேந்திர மோதி ஆட்சி இருக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த மக்களின் பதிலாக இருக்குமே ஒழிய திமுக ஆட்சிக்கானதாக இருக்காது என்றும் ப்ரியன் கூறுகிறார்.
“திமுக தோல்வியடைந்தால், அது மக்களின் மனப்போக்கைக் காட்டுவதாக இருக்கலாம். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய அம்சமாக நரேந்திர மோதி ஆட்சி தொடர வேண்டுமா இல்லையா என்பதாகத்தான் இருக்கும்,” என்று கூறுகிறார் அவர்.
மேலும், தமிழ்நாட்டில் திமுகவை தனித்து நின்று எதிர்ப்பதைவிட, அதிமுகவுடன் கூட்டணியில் நின்று எதிர்ப்பது பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம் என்பதால் தேர்தல் நேரத்தில் டெல்லி தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்தே புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்