
பட மூலாதாரம், ANI
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காலை 11:15 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், பாரத் ராஷ்டிர சமிதி 42 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் காமாரெட்டி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி அங்கு முன்னிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸின் மாநிலத் தலைவரான ரேவந்த் ரெட்டியின் பெயர் பெருமளவில் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர்களிடையே அவர் மிகப்பிரபலமாக இருந்தார். பிரசாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவரோடு இருந்தனர்.
இந்நிலையில் அடுத்த தெலங்கானா முதல்வராக அவரது பெயர் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரசேகர ராவ் காஜ்வெல் தொகுடியிலும் போட்டியிடுகிறார். அங்கு அவர் முன்னிலை வகிப்பதாகத் தற்போதைய நிலவரம் தெரிவிக்கிறது.
பா.ஜ.க 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் ஹைதராபாதில் இருக்கும் கட்சி அலுவலகத்தின் முன் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் கட்சியாக உள்ளது. தெலங்கானாவில் கடந்த 2018-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (பாரத் ராஷ்டிர சமிதியின் அப்போதைய பெயர்) 88 தொகுதிகளை வென்றது, அப்போது, காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
தெலங்கானா சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 119 இடங்கள் இருக்கும் தெலங்கானாவில் 60 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை. தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், ANI
பிரசாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ரேவந்த் ரெட்டியுடன் இருந்தனர்
யார் இந்த ரேவந்த் ரெட்டி?
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் 1969-ஆம் ஆண்டு பிறந்த அனுமுலா ரேவந்த் ரெட்டி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடபடத் துவங்கினார்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரெட்டி, அப்போது ஏ.பி.வி.பி.யில் இணைந்திருந்தார். பின்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக, 2009-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றார்.
2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். இருப்பினும், 2018 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்ததால் காங்கிரஸில் சேருவது அவருக்குப் பெரிதாகப் பலனளிக்கவில்லை.
ஆட்சி முடிவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே சட்டசபையை கலைத்து தேர்தலை நடத்திவிட்டார் கே.சி.ஆர்.
சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. அதில் அவர் வெறும் 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2021-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அவரை மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்து, மிகப்பெரும் பொறுப்பைக் கொடுத்தது.
இந்தத் தேர்தலில், காமாரெட்டி தொகுதியில் அவர் தற்போதைய முதல்வர் கே.சி.ஆரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

பட மூலாதாரம், ANI
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், கட்சியின் வேட்பாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்வதற்கு சொகுசுப் பேருந்துகள் வரவைக்கப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் போட்டி எப்படி இருந்தது?
தெலங்கானாவில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது பி.ஆர்.எஸ். (முன்பு டி.ஆர்.எஸ்.). தான் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாகக் களமிறங்கியது அந்தக் கட்சி.
ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த முறை, பி.ஆர்.எஸ்-க்கு கடுமையான போட்டியைக் கொடுத்தது. மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 118 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.
பா.ஜ.க. 111 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. இது தவிர ஏ.ஐ.எம்.ஐ.எம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் களத்தில் இருந்தன.
பாரத் ராஷ்ட்ர சமிதி – காங்கிரஸ் கூட்டணி – பா.ஜ.க. கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுவதைப் போலத் தோற்றம் இருந்தாலும், களத்தில் பாரத் ராஷ்ட்ரிய சமிதிக்கும் காங்கிரஸுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் கட்சி கொண்டுவந்திருக்க்கும் சொகுசுப் பேருந்துகள்
வேட்பாளர்களைப் பாதுகாக்க சொகுசுப் பேருந்துகள்
தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தங்களது வேட்பாளர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்ல, சொகுசுப் பேருந்துகள் வரவழைத்துள்ளன.
இதுகுறித்துப் பேசிய தெலங்கானா மாநிலக் காங்கிரஸின் துணைத் தலைவர் கிரண் குமார் சமாலா, கே.சி.ஆர் மற்ற கட்சிகளிலிருந்து வெற்றி வேட்பாளர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் பழக்கமுடையவர் என்பதால் இந்த முன்னேற்பாடுகள் தேவைப்படுவதாகக் கூறினார்.
சூழ்நிலையை நிர்வகிக்க அண்டை மாநிலமான கர்நாடகாவின் துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் ஹைதராபாத் சென்றிருக்கிறார்.
இதுகுறித்து கர்நாடகாவின் காங்கிரஸ் அமைச்சர் ரஹீம் கானிடம், தெலங்கானா வேட்பாளர்களை பெங்களூருவுக்குக் கொண்டுவர திட்டம் இருக்கிறதா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் “அப்படி ஒரு நிலைமை வந்தால் அதை கட்சித் தலைமை முடிவெடுக்கும்,” என்றார்.
தெலங்கானா மாநில பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் என்.வி.சுபாஷ், இது காங்கிரஸ் கட்சிக்குத் தனது வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்