
உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ்
கேரளா மற்றும் தமிழகத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் வரும் சம்பவத்தின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவினர், சுபாஷ் குழியில் விழுந்தது முதல் மீட்கப்பட்டது வரை நடந்த உண்மையையும், திரைப்படத்தில் காண்பிக்கப்படாத சம்பவங்களையும் பிபிசி தமிழ் நேர்காணலில் பகிர்ந்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாள திரைப்படம், கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தில் காட்டப்படும் கொடைக்கானல் பகுதியில் உள்ள குகையை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது.
கேரள மாநிலம் கொச்சினை அடுத்த மஞ்சும்மல் கிராமத்தைச் சேர்ந்த, 11 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் 2006இல், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் உள்ள ‘குணா குகை’க்கு சுற்றுலா செல்கின்றனர்.
அப்போது, குழுவில் இருந்த சுபாஷ் என்பவர் பல நூறு அடி ஆழமுள்ள குகையின் குழியில் விழுந்த நிலையில், சுபாஷை அந்தக் குழுவில் இருந்த குட்டன் என்கிற சிஜூ டேவிட் தன் உயிரைப் பணயம் வைத்து குழியில் இறங்கி காப்பாற்றுவதும், அதற்கு அவர்களின் நண்பர்கள் உதவுவதும்தான் படத்தின் கதை.
கடந்த 2006இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ‘நட்பின் இலக்கணம்’ எனக் கூறி சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உண்மையான, சுபாஷ், குட்டன் மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவுடன், மஞ்சும்மல் கிராமத்திற்குச் சென்று பிபிசி தமிழ் நேர்காணல் நடத்தியது.
அவர்கள் திரைப்படத்தில் காண்பிக்கப்படாத பல சம்பவங்களையும், சுபாஷ் மீட்கப்பட்டது எப்படி என்ற தங்களின் உண்மையான ‘த்ரில்’ அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளனர்.

சுபாஷ் மற்றும் குட்டன்
மஞ்சும்மல் பாய்ஸ் – பெயர்க் காரணம் என்ன?
கேள்வி: உங்கள் குழுவுக்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெயர் வரக் காரணம் என்ன? 11 பேர் குழுவாக மாறியது எப்படி? ஊரினுள் இந்தக் குழு என்ன செய்துகொண்டிருந்தது?
சுபாஷ் பதில்: மஞ்சும்மல் என்பது எங்களது கிராமத்தின் பெயர். நாங்கள் 11 பேர் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள், நாங்கள் குழுவாகச் சேர்ந்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவை உருவாக்கினோம்.
ஊரினுள் விளையாட்டுகள், ‘டக் ஆஃப் வார்’ எனப்படும் கயிறு இழுத்தல் என மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது பொறுப்புகள் அதிகமானதால் விளையாட்டுகள் எல்லாம் இல்லை, குழுவாக எப்போதாவது எங்காவது சுற்றுலா செல்வோம்.
கேள்வி: 2006இல் சுற்றுலா செல்ல கொடைக்கானல் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? அங்கு என்னென்ன செய்தீர்கள்?
குட்டன் பதில்: நாங்கள் மூணாறு போன்று சில இடங்களுக்குச் சென்றுள்ளதால், புதிதாக எங்காவது செல்லலாம் என எங்கள் குழுவில் இருந்த சுதீஸ்தான் கொடைக்கானலை தேர்வு செய்தார். அவர் ஏற்கெனவே இரண்டு முறை கொடைக்கானல் ‘குணா குகை’க்கும் சென்றிருந்தார்.
ஒன்பது பேர் இருக்கை அளவே கொண்ட டொயோடா குவாலிஸ் வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து, 12 பேராகப் பயணித்தோம். அங்கு கொடைக்கானல் ஆறு, ‘பைன் காடு’ எனப் பல இடங்களைப் பார்வையிட்டு மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

மஞ்சும்மல் பாய்ஸ் கொடைக்கானல் சென்ற புகைப்படம்
குகைக்குள் சுபாஷ் விழுந்தபோது என்ன நடந்தது?
கேள்வி: ‘குணா குகை’ தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தும் ஏன் தடுப்பை மீறிச் சென்றீர்கள்? சுபாஷ் விழுந்ததும் அங்கு சென்றது தவறு என உணர்ந்தீர்களா?
குட்டன் பதில்: குணா குகை அருகே தமிழில் மட்டும் அறிவிப்புப் பலகை வைத்திருந்ததால், அது தடை செய்யப்பட்ட பகுதி என்பது எங்களுக்குத் தெரியாது.
நாங்கள் சென்றபோது அங்கு எங்களுக்கு முன்பு சில சுற்றுலா பயணிகள் குகை பகுதிக்குச் சென்றதால், அவர்களைப் பின்தொடர்ந்துதான் நாங்களும் சென்றோம். நாங்கள் சென்றபோது சுபாஷ் குழியில் விழுந்தபின், இங்கு வந்தது தவறு என்பதை உணர்ந்தோம்.
கேள்வி: குகைக்குள் விழுந்ததும் சுபாஷூக்கு சுயநினைவு இருந்ததா? குகைக்குள் எட்டிப் பார்த்தபோது எப்படி இருந்தது?
குட்டன் பதில்: குகைக்குள் விழுந்து அரை மணிநேரத்திற்கு சுபாஷூக்கு சுயநினைவே இல்லை. அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை.
குகைக்குள் சுபாஷ் விழுந்ததும் நாங்கள் அனைவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் அலைமோதினோம். குகைக்குள் நாங்கள் பார்த்த போது இருட்டாக, பயங்கரமாக இருந்தது.
அரை மணிநேரத்துக்குப் பின் சுபாஷ் வலியில் மரண ஓலமிடும் சத்தம் கேட்டுத்தான் அவன் உயிருடன் இருக்கிறான், எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் எனத் தோன்றியது. அதன் பிறகுதான் காவல் நிலையம், வனத்துறை, தீயணைப்புத் துறை எனப் பலருக்கும் தகவல் தெரிவித்து, உதவிகள் பெற்றோம்.

சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் குழிக்குள் இருந்து சத்தமிடுவதைக் கேட்டவுடன்தான் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஓரளவுக்கு உதவி செய்தார்கள்.
படத்தில் வருவது போல் காவல்துறையினர் தாக்கினார்களா?
கேள்வி: சுபாஷை மீட்க காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் போதிய உதவிகள் செய்தார்களா? திரைப்படத்தில் வருவது போல் தாக்கினார்களா?
கிருஷ்ணா பதில்: சுபாஷ் குழியில் விழுந்ததும் உதவி கேட்டு கொட்டும் மழையில் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு என்னுடன் சேர்த்து நான்கு பேர் சென்றிருந்தோம்.
போலீசாரிடம் நாங்கள் நடந்ததைக் கூறியபோது, ‘குணா குகை’ அருகே சில கொலைகள் நடந்துள்ளதாகக் கூறிய போலீஸார், நாங்களும் அதேபோல் சுபாஷை குழிக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டோம் எனக் கூறி எங்களை லத்தியால் அடித்துத் துன்புறுத்தினார்கள்.
பின், சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் குழிக்குள் இருந்து சத்தமிடுவதைக் கேட்டவுடன்தான் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஓரளவுக்கு உதவி செய்தார்கள். பெரிய அளவிலான உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
குகைக்குள் இறங்க துணிச்சலாக முன்வந்தது எப்படி?
கேள்வி: சுபாஷை மீட்க குகைக்குள் யாரும் இறங்க முன்வராதபோது குட்டன் மட்டும் எப்படி முன்வந்தார்? அதற்கான தைரியம் எப்படி கிடைத்தது?
குட்டன் பதில்: சுபாஷ் விழுந்த சில நிமிடங்களில் கடும் மழை பெய்து, அவர் விழுந்த குழியில் மழைநீர் வழிந்தோடியது. மழைநீருடன் சில கற்களும் சென்றதால், மழைநீருடன் குழிக்குள் கற்கள் செல்வதைத் தடுக்க நாங்கள் அனைவரும் குழியைச் சுற்றி படுத்துக்கொண்டோம்.
மழை நின்றவுடன் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், வெகு நேரமாகப் பேசிக்கொண்டிருந்த அவர்கள் குழிக்குள் இறங்கி சுபாஷை காப்பாற்றுவதாக எங்களுக்கு நம்பிக்கையே இல்லை.
அந்த நேரத்தில் சுபாஷை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் எனக்குத் தோன்றியது. அதனால், நானாக முன்வந்து சுபாஷை காப்பாற்ற குழிக்குள் இறங்கினேன், அதற்கு அரசு அதிகாரிகளும் சம்மதித்தனர்.
அந்த இக்கட்டான சூழலில் எங்கள் அனைவரது மனதில் சுபாஷை காக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. எனக்கு சுபாஷை மிகப் பிடிக்கும், அவன் என் நண்பன், அதனால் எதையும் பொருட்படுத்தாமல் உடனடியாக இறங்கிவிட்டேன்.

“படத்தில் காண்பிப்பது போல் நான் நெற்றியில் டார்ச் விளக்கு கட்டவில்லை. உண்மையில் டார்ச் விளக்கை கயிற்றில் சுற்றி என் கழுத்தில் கட்டியிருந்தேன்”
குகையின் குழிக்குள் சென்றபோது எப்படி இருந்தது?
கேள்வி: குகையின் குழிக்குள் சென்றபோது எப்படி இருந்தது? சுபாஷை பார்த்த போது எப்படி உணர்ந்தீர்கள்?
குட்டன் பதில்: குகையின் குழி சாதாரணமாக இல்லை, கும்மிருட்டாக குறுக்கும் நெடுக்குமாக கூர்மையான பாறைகளுடன், மிகவும் வழுக்கும் விதமாக, வெளவால் எச்சங்களின் நாற்றத்துடன் இருந்தது.
படத்தில் காண்பிப்பது போல் நான் நெற்றியில் டார்ச் விளக்கு கட்டவில்லை. உண்மையில் டார்ச் விளக்கைக் கயிற்றில் சுற்றி என் கழுத்தில் கட்டியிருந்தேன். பாறைகளில் கால் வைத்து ஊன்றி நிற்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், டார்ச் லைட் பயன்படுத்தி சுபாஷை தேடினேன்.
கீழே இறங்க இறங்க சுபாஷ் கதறும் சத்தம் அதிகமானது. 70 அடி ஆழத்திற்கு மேல் செல்லும்போது கயிறு தீர்ந்துவிட, கூடுதல் கயிறு இணைக்கப்பட்டது. 90வது அடியில் சுபாஷை கண்டேன்.
அப்போது எனக்கு உயிர் வந்து போனது போல் இருந்தது, அந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளில் கூற முடியவில்லை.
சுபாஷ் குகைக்குள் எப்படி சிக்கியிருந்தார்?
கேள்வி: குகையில் இருந்து வெளிவருவதற்கான போராட்டம் எத்தகையது?
குட்டன் பதில்: 98-ஆவது அடியில் கொக்கி போல் இருந்த ஒரு பாறையின் சிறு துண்டில், தனது தம்பியிடம் வாங்கி அவன் அணிந்திருந்த பெல்ட் சிக்கிக்கொண்டிருந்தது, அவன் செங்குத்தாக நிற்பது போல் சிக்கிக் கொண்டிருந்தான்.
தான் இறந்து வேற்று உலகில் இருப்பது போன்ற வார்த்தைகளுடன் உளறிக் கொண்டிருந்தான். அவனை நான் தொட்டதும், பயத்தில் என்னைத் தாக்க கையை உயர்த்தினான். பின் வலியில் கதறி அழ ஆரம்பித்து விட்டான்.
அவன் உடல் முழுதும் காயம், ரத்தம், சேறும் சகதியுமாக இருந்தான். வெளியில் எடுக்க கயிறு கட்டவே முடியவில்லை, தொட்டாலே கதறி அழுதான். கயிற்றைக் கட்டி மேலே வரும்போது, 3 முறைக்கு மேல் கயிறு பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டது, மீண்டும் எங்களைக் கீழே இறக்கி மேல ஏற்றியபோது இந்த சிக்கல்களைச் சமாளித்து மேலே வந்தோம்.

“இதுவரை இந்தக் குழியில் விழுந்த 13 பேர் இறந்துள்ளனர், யாரும் பிழைக்கவில்லை. சுபாஷ் கடவுளின் பிள்ளை, கடவுளின் அருளால் பிழைத்துள்ளான் என அனைவரும் கூறினார்கள்”
உயிருடன் மீண்ட தருணம்
கேள்வி: சுபாஷை உயிருடன் மீட்டு குழியில் இருந்து வெளியே அழைத்து வந்ததும் எப்படி உணர்ந்தீர்கள்?
குட்டன் பதில்: வெளியே வந்ததும் சுபாஷை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளேன் என நினைத்து மகிழ்ச்சியில் அழுதேன். என் நண்பர்கள் எங்களைத் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றனர்.
இதுவரை இந்தக் குழியில் விழுந்த 13 பேர் இறந்துள்ளனர், யாரும் பிழைக்கவில்லை. சுபாஷ் கடவுளின் பிள்ளை, கடவுளின் அருளால் பிழைத்துள்ளான் என அனைவரும் கூறினார்கள்.
கேள்வி: 2006 சம்பவத்திற்குப் பின் ‘குணா குகை’ சென்றீர்களா? உங்களுக்கு உதவிய ‘டூர் கைடு’, புகைப்படக் கலைஞர், பெட்டிக்கடை உரிமையாளர் ஆகியோரைச் சந்தித்தீர்களா?
சுபாஷ் பதில்: சம்பவத்திற்குப் பின் நாங்கள் அனைவரும் கூட்டாக கடந்த வாரம் ‘குணா குகை’ சென்றிருந்தோம். 2006 சம்பவம் நினைவு வந்தாலும், எங்களுக்கு அச்ச உணர்வு இல்லை.
அங்குள்ள கடைக்காரரை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது, ‘டூர் கைது’, புகைப்படக் கலைஞரைப் பார்க்க முடியவில்லை.
கேள்வி: குகைக்குள் விழுந்ததற்கு மது போதைதான் காரணமா? திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது போலத்தான் விழுந்தாரா?
குட்டன் பதில்: நாங்கள் கொடைக்கானலில் தங்கியபோது மது அருந்தியது உண்மைதான். ஆனால், குகைக்குச் செல்லும்போதும், அதற்கு முன்பும் நாங்கள் மது அருந்தவில்லை.
ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு நாங்கள் தாண்டித்தான் சென்றோம். அப்போது, நான்காவதாக தாண்டிய சுபாஷ் செருப்பு இடறி குழிக்குள் விழுந்து விட்டார், இதுதான் உண்மைக் காரணம்.
கேள்வி: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்து தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், மது குடித்துவிட்டு கூத்தடித்ததாக கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து?
சுபாஷ் பதில்: எங்களை மக்கள் ஹீரோவாக பார்க்கிறார்கள், எங்களுக்கு நடந்த சம்பவத்தை அனைவரும் பரவலாகப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் இந்தத் திரைப்படத்திற்கும், எங்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
எங்களைப் பற்றி யாரோ என்னமோ பேசட்டும், அவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை, அதை ஒரு பொருட்டாகவும் நாங்கள் நினைக்கவில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்