
பட மூலாதாரம், Getty Images
தாய்லாந்து அயுத்தயா நகரில் உள்ள பழமையான கோவில்
1350 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அயுத்தயா நகரம் ஒரு காலத்தில் ஒரு பெரிய பேரரசின் தலைநகராக இருந்தது. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அயுத்தயா நகருக்குள் நான் காலடி எடுத்து வைத்தவுடன், அதன் மிகப்பெரிய இடிபாடுகள் என் கவனத்தை ஈர்த்தன.
மேலும் நகரத்தின் பெயர் அயுத்தயா என்பதால் அது எனது கவனத்தை ஈர்த்தது. இது கிட்டத்தட்ட இந்தியாவின் அயோத்தி என்ற பெயருக்கு இணையாக இருக்கிறது. அயோத்தி சரயு நதிக்கரையில் அமைந்திருப்பது போல, தாய்லாந்தின் அயுத்தயா நகரம் சுமார் 3500 கிலோமீட்டர் தொலைவில் மூன்று நதிகளால் சூழப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் சுரத் ஹொராசயாகுல், பாங்காக்கில் உள்ள சூலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுகளின் நிறுவன இயக்குநர் ஆவார்.

பட மூலாதாரம், Getty Images
அயுத்தயாவில் உள்ள புத்தரின் சிலை
அவர் பிபிசியிடம் பேசியபோது, “அயோத்தி மற்றும் அயுத்தயாவின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. சமஸ்கிருதச் சொற்களை தாய்லாந்து மொழியாக மாற்றி இங்கு புதிய பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைய இந்திய நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அயுத்தயா நிறுவப்பட்ட நேரத்தில், ராமாயணம் தாய்லாந்திலும் நன்கு அறியப்பட்டிருந்தது. இது இங்கு ராமகியன் என்று அழைக்கப்படுகிறது. எந்தவொரு காலகட்டத்திலும், ஒரு பேரரசு அல்லது நகரத்தின் பெயரை மங்களகரமானதாகக் கருதும் வகையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அந்தப் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும். பல வரலாற்றாசிரியர்கள் அயோத்தியுடன் அயுத்தயாவின் பெயரின் ஒற்றுமையை இவ்வாறு விளக்குகிறார்கள்,” என்றார்.
பேராசிரியர் சுரத்தின் குடும்பம் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் வசித்து வந்தது. ஆனால் அவரது குடும்பம் பிரிவினைக்கு முன் தாய்லாந்துக்கு இடம்பெயர்ந்தது. அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறைக் குடிமகனாக தாய்லாந்தில் வசித்து வருகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “தாய்லாந்தில், மன்னர் என்பவர் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்பட்டார். எனவே, தாய்லாந்து நாட்டின் பல்வேறு மன்னர்கள் ராமா-1, ராமா-2, ராமா-10 என அழைக்கப்படுகிறார்கள். சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகளின் தாக்கம் தாய்லாந்தில் அதிக அளவில் காணப்படுகிறது. (உங்கள் பெயர் வந்தனா என்பதை தாய்லாந்து மொழியில் குர்வந்தனா என வைத்துக்கொள்ளலாம்.)” என விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
ராமகியான் கதையில் நடிக்கும் நடிகர்
அயுத்தயா அரசவையும் முகலாய தூதரும்
யுனெஸ்கோவின் கூற்றுப்படி, அயுத்தயாவின் அரசவைக்கு முகலாய அரசவைப் பிரதிநிதிகள், ஜப்பான், சீனப் பேரரசுகளின் தூதர்கள் மற்றும் பிரான்சின் தூதர்கள் மட்டுமின்றி பல நாடுகளின் தூதர்கள் வருகை தந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய விவகாரங்களில் நிபுணரும், மனோகர் பாரிக்கர் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்துடன் தொடர்புடையவருமான டாக்டர் உதய் பானு சிங் பேசிய போது, “இந்த ஆண்டு தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 77 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார மற்றும் மத உறவுகள் பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகின்றன. தாய்லாந்தில் 1350 இல் நிறுவப்பட்ட அயுத்தயா என்ற நகரம் உள்ளது. இது அயோத்தியுடன் தொடர்புடைய நகரமாக இருக்கிறது. இது அரசர் ரமாதிபோதி-1 என்பவரால் நிறுவப்பட்டது. இன்று அயுத்தயா யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய தலமாக உள்ளது,” என்றார்.
“தாய்லாந்து பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடு. ஆனால் இங்குள்ள அரச குடும்பம் இந்து மதம் சார்ந்த பல பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டது.”
மூத்த வரலாற்றாசிரியர் டி.பி.சிங்கால், “சீனா போன்ற நாடுகளின் கலாச்சாரத்தை விட இந்திய கலாச்சாரம் தாய்லாந்தில் அதிக முத்திரை பதித்துள்ளது. ராமாயணக் கதை தாய்லாந்தில் ராமகியன் என்று அழைக்கப்படுகிறது,” என எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ராமகியான் நாடகம்
ராமாயணமும் ராமகியானும்
உண்மையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தென்னிந்தியாவில் இருந்து மக்கள் கடல் வழியாக தாய்லாந்துக்கு பயணம் செய்தனர். ராமாயணமும் அப்போது தாய்லாந்தைச் சென்றடைந்தது. அதன் பல பதிப்புகள் தயாரிக்கப்பட்டு தாய்லாந்து மன்னர் ராமா 1 அதை மீண்டும் மறுஉருவாக்கம் செய்தார்.
அது தாய்லாந்து ராமாயணம் என அழைக்கப்படுகிறது. மேலும், தற்போதும் அது பல மேடைகளில் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இது ராமாயணத்துடன் பல ஒற்றுமைகள் கொண்டது. இருப்பினும், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பௌத்தத்தின் அடிப்படையில் இந்த ராமாகியன், ராமாயணத்தில் இருந்து பல நிலைகளில் வேறுபட்டுள்ளது.
ராமாயணத்தில் வரும் ராவணன் போலவே ராமாகியனில் தோஸ்கன் என்ற கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கே தோஸ் என்றால் பத்து எனப்பொருள். ராமாகியனில், ஃபிரா ராம் என்ற கதாபாத்திரம் பகவான் ராமரைப் போன்றது.
இந்தியா-தாய்லாந்து உறவுகளைப் பற்றி பேசுகையில், தாய்லாந்தின் ராயல் தூதரகத்தின் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் படி, தாய்லாந்தின் மன்னர் ராமா-5 1872 இல் சிங்கப்பூர் மற்றும் யங்கூன் வழியாகப் பயணித்து பின்னர் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13, 1872 இல் கல்கத்தாவை அடைந்த பிறகு, அவர் பாரக்பூர், டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ ஆகிய இடங்களுக்கும் ரயிலில் சென்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அயுத்தயா புத்தர் சிலை
அயுத்தயாவின் வரலாறு
14 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், இன்றைய அயுத்தயா, உலகின் முக்கிய இராஜதந்திர மற்றும் வர்த்தக மையமாகவும் இருந்த செழிப்பான சியாம் ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. 1767 இல், பர்மா இந்த நகரத்தைத் தாக்கியது. இத்தாக்குதலில் முழு நகரமும் அழிக்கப்பட்டது.
அதன் பின் இந்த நகரில் மீள்குடியேற்றம் நடைபெறவில்லை. ஆனால் பாங்காக் என்ற புதிய தலைநகரம் உருவாக்கப்பட்டது. பாங்காக்கின் அதிகாரப்பூர்வமான பெயர் உண்மையில் பாங்காக் அல்ல. நீண்ட காலமாக அயுத்தயா தான் அதன் முறையான பெயராக இருந்தது. இதன் தாக்கம் இன்றளவிலும் தொடர்கிறது. மேலும் இந்நகரின் நடுவில் அயுத்தயா சாலை என்ற சாலையும் உள்ளது.
இங்கு தங்கியிருந்த ஒரு நாளில், வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள பகோடாக்கள் மற்றும் மடாலயங்களின் எச்சங்களாக உள்ள கட்டிடங்கள், அவை உண்மையில் எவ்வளவு உயரமாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. உடலே இல்லாத புத்தர் சிலைகள், மேற்கூரை இல்லாத கட்டிடங்கள், எங்கு பார்த்தாலும் இடிபாடுகள் என இங்கு நிற்பது ஆக்கிரமிப்பாளர்களால் அழித்தொழிக்கப்பட்ட ஒரு இடத்தில் நிற்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.
உலகின் மிகப்பெரிய சாய்ந்த (ஓய்வெடுக்கும்) புத்தர் சிலையை நாம் இங்கே காணலாம். இங்கு பல பெரிய புத்தர் சிலைகள் உள்ளன. ஆனால் அவற்றில் பலவற்றிற்கு தலைகள் இல்லை. இந் நகரம் அழிக்கப்பட்டபோது, ஏராளமான புத்தர் சிலைகளும் அழிக்கப்பட்டதாகவும், மக்கள் பல சிலைகளின் தலைகளை உடைத்து ஐரோப்பாவில் விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆயுத்தயாவில் அந்தக் காலத்தைப் போலவே, இன்றும் நாம் எங்கு பார்த்தாலும் யானைகளைக் காணமுடிகிறது
ஆனால் உடலிலிருந்து தலை பிரிந்த சிலை ஒன்று உள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், அந்த உடற்பகுதி முற்றிலும் மரத்தின் வேர்களுக்கு இடையில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இங்கு நின்று புகைப்படம் எடுக்க முடியாது.
இங்குள்ள கட்டிடங்களில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் கலையம்சத்தின் கலவையை நாம் காணமுடியும். மேலும், கலாச்சாரத்தில் இந்தியாவின் முத்திரை அப்பட்டமாகத் தெரிகிறது.
இதைப் பற்றி நூலாசிரியர் எஸ்.என்.தேசாய் தனது ‘ஹிந்துயிசம் இன் தாய்’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
அந்த நூலில் அவர், “தாய்லாந்தில் ராமர் பற்றிய தொல்பொருள் சான்றுகள் இல்லை என்றாலும், அங்கு உள்ள அயுத்தயா நகரம் ராமரின் தாக்கத்திற்கு சாட்சியாக உள்ளது. ஆனால் ராமரும் ராமாயணமும் பல நூற்றாண்டுகளாக நாட்டுப்புறக் கலைகள் மூலம் மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. தாய்லாந்தில் உள்ள மற்றொரு நகரம் லோப்புரி. ராமரின் மகனான லவவின் நினைவாக இந்த நகரம் பெயரிடப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த நகரத்தில் ஒரு தெருவுக்கு ஃபிரா ராம் என்று பெயரிடப்பட்டுள்ளது,” என எழுதியுள்ளார்.
அயுத்தயாவைப் பற்றி பேசினால், அந்தக் காலத்தைப் போலவே, இன்றும் நாம் எங்கு பார்த்தாலும் யானைகளைக் காணமுடிகிறது. இருப்பினும் தற்போதைய வித்தியாசம் என்னவென்றால், வீரர்களுக்கு பதிலாக, கேமராக்கள் பொருத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இப்போது இங்கு நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்