
பட மூலாதாரம், Getty Images
IND-TN-12-MM-6376 எனும் பதிவு எண் கொண்ட படகில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் 12 மீனவர்கள் கடந்த அக்டோபர் 10ம் தேதி இந்தியப் பெருங்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அக்டோபர் 23ம் தேதி மாலத்தீவில் உள்ள தினதூ தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மாலத்தீவு கடற்பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்து அவர்களது படகை பறிமுதல் செய்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரை மீட்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து மீனவர்கள் விடுவிப்பதாக மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகு விடுவிக்கப்படவில்லை. விசைப்படகை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.2 கோடி அபராதம் கட்டுமாறு மாலத்தீவு அரசு கூறியதையடுத்து இந்தியா திரும்பாமல் தமிழ்நாடு மீனவர்கள் மாலத்தீவிலேயே இருந்து வருகின்றனர்.
மாலத்தீவில் செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில், இந்திய படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி‘இந்தியாவே வெளியேறு’ என்ற முழக்கத்தோடு பிரச்சாரம் செய்த முகமது முய்சு அந்நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த அக்டோபர் 1ம் தேதிதான் மாலத்தீவின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் சில நாட்களுக்குள் தமிழ்நாடு மீனவர்கள் மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கை கடற்படைக்கு அடுத்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மாலத்தீவு கடற்படை இன்னொரு தலைவலியாக மாறியுள்ளதா? இந்தியாவிற்கும் மாலத்தீவிற்குமான வெளியுறவு சிக்கலில் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு? எனப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டு மீனவர்களை மாலத்தீவு கைது செய்தது ஏன்?
பூகோள ரீதியாக மாலத்தீவிற்கு அருகில் இருக்கக் கூடிய இந்திய மாநிலங்களில் ஒன்று கேரளா மற்றொன்று தமிழ்நாடு. மாலத்தீவில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு முதல் சிக்கலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் கைது மற்றும் படகு சிறைபிடிக்கப்பட்டிருப்பது நடந்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த பாதிப்பு தொடருமா? இந்தியா-மாலத்தீவு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று சவீதா சட்டக் கல்லூரியின் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் மாரிமுத்துவிடம் கேட்டோம்.
“இந்தியா – மாலத்தீவிற்கு இடையிலான சிக்கலில் தமிழ்நாட்டிற்கு வர்த்தகம், அயலக வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் மாலத்தீவில் பணிபுரிகின்றனர். முக்கியமாக ஆசிரியர்களாகவும் செவிலியர்களாகவும் இந்த இரண்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாலத்தீவில் பணிபுரிகின்றனர். இந்தியா – மாலத்தீவு இடையிலான வெளியுறவு சிக்கல் அதிகமானால் ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளை நோக்கி மாலத்தீவு செல்லும்” என அவர் தெரிவித்தார்.
சுற்றுலா துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசிய அவர், “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே மிகவும் செலவு குறைந்த ஒரு சுற்றுலாத்தளமாக மாலத்தீவு விளங்குகிறது. இந்தியா – மாலத்தீவு இடையே சிக்கல் அதிகமாகும் பட்சத்தில் மாலத்தீவை நோக்கி செல்லும் தமிழக மற்றும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறையலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மீனவர்கள் பிரச்னை குறித்து பார்க்கும்பொழுது, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மீனவர்கள் மாலத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்கவும், ஓய்வெடுக்கவும் தங்களது வலைகளை காய வைக்கவும் செல்வது வழக்கம். வரும் காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்களை இதேபோல கைது செய்யப்படுவார்களா என்பது இந்தியாவின் செயல்பாடுகளை பொறுத்துதான் உள்ளது” என பேராசிரியர் மாரிமுத்து தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவிற்கு தற்போது எந்த ஒரு அண்டை நாட்டோடும் நட்புறவு இல்லை. ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் அண்டை நாடுகள் சீன ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள். உதாரணத்திற்கு, வங்கதேசம் அதிக அளவில் சீனாவிற்குத்தான் ஆடை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல மாலத்தீவும் வரும் காலத்தில் சீனாவோடு தனது ஏற்றுமதியை அதிகப்படுத்தும்” என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா-மாலத்தீவு பிரச்சனையால் தமிழ்நாட்டிற்கு ஆபத்தா?
இந்தியா – சீனா மோதல் மாலத்தீவிலும் எதிரொலிக்கிறதா?
இந்தியா – மாலத்தீவு சிக்கலில் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பிபிசி தமிழிடம் பேசினார்.
அவர் கூறுகையில், “மாலத்தீவில் பள்ளி ஆசிரியர்களாக அதிக அளவில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். முக்கியமாக கணிதம், அறிவியல் போன்ற பாட ஆசிரியர்களாக தமிழர்கள் அதிகம் வேலை செய்கிறார்கள். இது தவிர்த்து ஒப்பந்த ஊழியர்களாகவும் தமிழர்கள் மாலத்தீவில் இருக்கிறார்கள். இவர்களை மாலத்தீவு அரசு உடனே திருப்பி அனுப்பாது. ஆனால், இந்தியா – மாலத்தீவு சிக்கல் இவர்களுக்கு ஒரு நிலையற்ற சூழலை அங்கே உருவாக்கும்” என அவர் கூறினார்.
மேலும், இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கும் மாலத்தீவில் இந்தியாவின் அதிகாரத்திற்கும் வித்தியாசம் உள்ளது. மாலத்தீவு சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே அந்த வகையிலும் தற்போது மாலத்தீவில் அதிபராக இருக்கும் முகமது முய்சு சீன ஆதரவாளர் எனக் கூறப்படுவதாலும் வரும் காலத்தில் மாலத்தீவில் இந்தியாவை விட சீனாவின் அதிகமாக வாய்ப்புள்ளதாக பேராசிரியர் க்ளாட்சன் சேவியர் தெரிவித்தார்.
“அதேபோல, மாலத்தீவிற்கு புவிசார் அரசியலிலும் முக்கிய இடம் உள்ளது. மாலத்தீவு ஆப்ரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. எனவே, இந்த இடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா என்னவேண்டுமானாலும் செய்யும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிற்கு அதன் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பாதுகாப்பு அரண்கள் உள்ளன. ஒன்று, அந்தமான் நிக்கோபார் மற்றொன்று லட்சத்தீவு. இந்த இரண்டு பகுதிகளுக்கும் நடுவே மாலத்தீவு உள்ளது. அங்கு சீனாவின் ஆதிக்கம் இருப்பது இந்தியாவிற்கு நிச்சயம் தலைவலிதான் என அவர் தெரிவித்தார்.
மொத்தமாக பார்த்தால், இந்தியா – மாலத்தீவு சிக்கலில் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய நேரடி பாதிப்பை விட இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக ஏற்படக்கூடிய பாதிப்பு தமிழ்நாட்டிலும் பிரதிபலிக்கும் என்று கூறலாம் என கிளாட்சன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
2017ல் மாலத்தீவு முன்னாள் அதிபரோடு சீன அதிபர் ஷி ஜின்பிங்
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் என்ன பிரச்னை?
2008ம் ஆண்டில் இருந்து மாலத்தீவில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைக்கவே இல்லை. இருந்தும், இந்தியாவிற்கும் மாலத்தீவிற்குமான வெளியுறவில் 2017 வரை பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படவில்லை. 2017ல் மாலத்தீவின் அதிபராக இருந்த அப்துல்லா யமீன் சீன ஆதரவாளராக கருதப்பட்டார். இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகள் மத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதன் ஒரு பகுதியாக மாலத்தீவில் சீனா தனது ஆதிக்கத்தை தொடங்கியது. அவ்வகையில், 2017ல் சீனா உடன் மாலத்தீவு தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement) கையெழுத்திட்டது. அப்போதிருந்து சீனாவின் இருப்பு மாலத்தீவில் அதிகமாகியது.
தற்போது மாலத்தீவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் முகமது முய்சு, ‘இந்தியாவே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன் வைத்தார். 5.21 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மாலத்தீவில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 75 வீரர்கள் உள்ளனர்.
2021-ஆம் ஆண்டில், இந்திய விமானங்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் சுமார் 75 இந்திய ராணுவ வீரர்கள் நாட்டில் இருப்பதாக மாலத்தீவு பாதுகாப்புப் படை கூறியது. இது அந்நாட்டில் சந்தேகத்தையும் கோபத்தையும் தூண்டியது. ஏனெனில் இந்த வானூர்திகள் மாலத்தீவில் இந்திய ராணுவ இருப்பை தக்க வைக்க ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படுவதாக பலர் கருதினர்.
ஆனால், 1988ல் மாலத்தீவில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 600 ராணுவ வீரர்கள் மேற்கொண்ட ‘ஆபரஷேன் கேக்டஸ்’ (Operation Cactus) மாலத்தீவை பெரும் தாக்குதலில் இருந்து காப்பாற்றியது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் என்ன பிரச்சனை?
மாலத்தீவை காப்பாற்றிய இந்தியாவின் ‘ஆப்ரேஷன் கேக்டஸ்’
1988ல் மாலத்தீவின் அதிபராக இருந்த அப்துல் கயூம் இந்தியாவிடம் ஒரு அவசர உதவி கோரினார். எதற்காகவென்றால், மாலத்தீவைச் சேர்ந்த அப்துல் லுத்துஃபி எனும் தொழிலதிபர் இலங்கையைச் சேர்ந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் தமிழ் ஆயுதக்குழுவின் உதவியோடு மாலத்தீவை நோக்கி படையெடுத்தார். அப்போது மாலத்தீவிற்கு மற்ற நாடுகள் உதவிக்கு வர மறுத்த நிலையில் அப்துல் கயூம் இந்தியாவிடம் உதவி கோரினார்.
இதனையடுத்து இந்தியாவில் இருந்து 600 இராணுவ வீரர்கள் பாராசூட் மூலம் மாலத்தீவு தலைநகர் மலேவில் இறங்கி பதுங்கு குழியில் இருந்த அப்போதைய அதிபர் அப்துல் கயூமை மீட்டு. மாலத்தீவையும் அந்தக் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
அதே போல 2004 சுனாமியின் போதும் 2014ம் ஆண்டு மாலத்தீவில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்னையின் போதும் இந்தியாவின் உதவி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறாரா மாலத்தீவின் புதிய அதிபர்?
அதிபர் தேர்தலுக்கு முன் பிபிசியிடம் பேசிய, பதவி விலகும் அதிபர் சோலி, இந்திய துருப்புகளின் இருப்பு குறித்த அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறினார்.
“மாலத்தீவில் ராணுவ ரீதியாகச் செயல்படும் வெளிநாட்டுப் பணியாளர்கள் யாரும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள இந்தியப் பணியாளர்கள் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் செயல்பாட்டுக் கட்டளையின் கீழ் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
ஆனால் பிரச்னை விமானங்கள் பற்றி மட்டுமானதல்ல. சமீப ஆண்டுகளில் மாலத்தீவு இந்தியாவுடன் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக முய்சு கூறுகிறார்.
“அவற்றில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. நாடாளுமன்றத்தில் கூட விவாதத்தின் போது சில எம்.பி.க்கள் அதில் என்ன இருக்கிறது என்று தங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். அதை நிச்சயம் கண்டுபிடிப்போம்,” என்று அவர் கூறினார்.
மேலும் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்ற அவருடைய கருத்துதான். மேலும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்த முய்சு, தான் சீனாவிற்கு ஆதரவாகவோ எந்த நாட்டிற்கும் எதிராகவோ செயல்படவில்லை என்று கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்