குல்தீப் யாதவ் 2.0: இந்திய அணி ஒதுக்கிய வீரர் உலகக்கோப்பை ‘துருப்புச்சீட்டாக’ மாறியது எப்படி?

குல்தீப் யாதவ் 2.0: இந்திய அணி ஒதுக்கிய வீரர் உலகக்கோப்பை 'துருப்புச்சீட்டாக' மாறியது எப்படி?

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 - குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சமீபத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு ஃபார்ம் பிரமாதமாக இருந்ததால், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரமாக மாற நினைத்து கிரிக்கெட் விளையாட வந்தவர், கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சாளராக மாறி ஜொலித்து வருகிறார்.

அவர் வேறுயாருமல்ல, இந்திய அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தான்!

‘சினாமென்’ (மணிக்கட்டு சுழற்சியில்) சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவுக்கு தற்போதைய காலம் கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு அத்தியாயம் என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு ஃபார்ம் பிரமாதமாக இருந்ததால், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமான குல்தீப் யாதவுக்கு தொடக்ககால கிரிக்கெட் வாழ்க்கை அற்புதமாக இருந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஐபிஎல் தொடர் என குல்தீப் யாதவ் வாழ்க்கை ஏறுமுகமாகப் பயணித்தது.

எந்த இந்திய சுழற்பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையாக 58 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் எட்டி குல்தீப் யாதவ் சாதித்தார்.

சோதனைக் காலம்

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பந்துவீச்சு வேகத்திலும், ஆக்ஸன் செயல்பாட்டிலும், பல்வேறு திருத்தங்களைச் செய்து மீண்டும் இந்திய அணியில் குல்தீப் இடம் பெற்றார்.

ஆனால், 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலம் குல்தீப் யாதவுக்கு மிகவும் சோதனையான காலம்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட குல்தீப், நம்பிக்கை இழந்தார். இந்திய அணியிலிருந்தும் குல்தீப் யாதவ் கழற்றிவிடப்பட்டு, கிரிகெட் வாழ்க்கை சூனியமாகப் போனது.

ஆனால், மனம் தளராத குல்தீப், தனது பந்துவீச்சு வேகத்திலும், ஆக்ஸன் செயல்பாட்டிலும், பல்வேறு திருத்தங்களைச் செய்து மீண்டும் இந்திய அணியில் குல்தீப் இடம் பெற்றார்.

திருப்புமுனை

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு முக்கியமானதொரு பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருந்தார்.

ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலம் குல்தீப் யாதவ் வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனையை ஏற்படுத்தி இந்திய அணியிக்குள் இடம் பெறச் செய்த காலம்.

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முறையான சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் நிச்சயமாக துருப்புச்சீட்டுகளாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு முக்கியமானதொரு பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருந்தார்.

இந்தியாவில் உள்ள பல மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை, இதில் குல்தீப் யாதவுக்கு பந்துவீசி அதிக அனுபவம் இருப்பதால், நிச்சயாக குல்தீப் யாதவ் பந்துவீச்சு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தையின் கிரிக்கெட் கனவு

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குல்தீப் யாதவ் தனது 12 வயதிலேயே முறைப்படி கிரிக்கெட் பயிற்சி பெறத் தொடங்கினார்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த குல்தீப் யாதவ் 1994, டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை ராம் சிங் யாதவ் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

சிறு வயதிலிருந்தே ராம் சிங்கிற்கும் கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. ஆனால், குடும்ப சூழல், வறுமை, பொறுப்புகள் போன்றவற்றால், கிரிக்கெட் கனவு காய்ந்து போனது.

ஆனால், தன்னுடைய மகன் குல்தீப் யாதவை கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என்ற தீராத ஆசையில், அவரை முறைப்படி கிரிக்கெட் பயிற்சியாளர் கபில் பாண்டேவிடம் ராம் சிங் சேர்த்தார்.

உன்னாவ் நகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த கபில் பாண்டேவிடம், குல்தீப் யாதவ் தனது 12 வயதிலேயே முறைப்படி கிரிக்கெட் பயிற்சி பெறத் தொடங்கினார்.

வாசிம் அக்ரமாக மாற விருப்பம்

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குல்தீப் யாதவை அவரது தந்தை ராம் சிங் 12 வயதிலேயே முறையான கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்துவிட்டார்

குல்தீப் யாதவின் இளமைக்கால கிரிக்கெட் கனவு குறித்து அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “குல்தீப் யாதவை என்னிடம் அவரின் தந்தை ராம் சிங் பயிற்சியில் சேர்த்துவிட்டார். அப்போது குல்தீப் யாதவிடம் நீ எந்த வீரர் போல் உருவாக விரும்புகிறாய் என்று கேட்டேன்.

அதற்கு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் போல் உருவாகப் போகிறேன் என்று குல்தீப் என்னிடம் பதில் அளித்தார்,” என்று கூறியுள்ளார்.

“நானும், அவரின் கனவுக்குத் தடை விதிக்கவில்லை. ஆனால், குல்தீப் யாதவின் பந்துவீச்சைப் பார்த்துவிட்டு, அவரிடம் நிச்சயமாக வாசிம் அக்ரம் போல் வருவது சாத்தியமில்லை.

‘உன்னிடம் பந்தை ஸ்விங் செய்யும் திறமை இருக்கிறது, ஆனால், பந்து வீசுவதற்கான வேகம் இல்லை.’ இதை வேறு விதத்தில் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தினேன்,” என்று கபில் பாண்டே குறிப்பிட்டுள்ளார்..

பயிற்சியாளருடன் வாக்குவாதம்

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிறுவயதிலேயே குல்தீப் யாதவ் கூக்ளியில் பந்து வீசுவதைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

“என்னுடைய பந்து நன்றாக ஸ்விங் ஆகிறதுதானே, ஏன் வேகப்பந்துவீச்சாளர் ஆக முடியாது” என்று குல்தீப் தன்னிடம் வாதம் செய்ததாக பயிற்சியாளர் கபில் பாண்டே குறிப்பிட்டார்.

ஆனால், தான் குல்தீப்பின் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்ததாகவும் அவருக்கு சுழற்பந்துவீச்சுதான் வரும், வேகப்பந்துவீச்சு வராது என அறிவுறுத்தியதாகவும் கூறுகிறார் கபில் பாண்டேன்.

அதன்பிறகு, “என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்ட குல்தீப் யாதவ், தனது பந்துவீச்சை சுழற்பந்துவீச்சுக்கு மாற்றி, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டார். இடது கையில் பந்து நன்றாகச் சுழல்வதால் சினாமென் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவுக்கு பயிற்சியளித்தேன்.

குல்தீப் யாதவுக்கு 13 வயதிலேயே பந்துவீச்சில் இருக்கும் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவரை சிறப்பாகப் பந்துவீசச் செய்தேன். குல்தீப் யாதவும் தன்னுடைய பலத்தைப் புரிந்துகொண்டு சுழற்பந்துவீச்சு மீது கவனம் செலுத்தினார்.

சிறு வயதிலேயே குல்தீப் யாதவ் கூக்ளியில் பந்துவீசுவதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். குல்தீப் யாதவின் திறமை, தீர்க்கம், விடாமுயற்சி ஆகியவை விரைவாக அவரை இந்திய அணிக்குள் கொண்டு சேர்த்தது,” எனத் தெரிவித்தார் கபில் பாண்டே.

பந்துவீச்சு மாற்றம் வாழ்க்கையை மாற்றியது

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2018இல் ஆசியக் கோப்பையில் 10 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தியிருந்தார்.

குல்தீப் யாதவ் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் ஓரங்கப்பட்ட நிகழ்வு குறித்து கபில் பாண்டே கூறுகையில், “ஐபிஎல் தொடரில் மொயீன் அலி குல்தீப் ஓவரில் 26 ரன்கள் அடித்தது பெரிதாக விமர்சிக்கப்பட்டது. அவரை கொல்கத்தா அணியிலிருந்து ஓரங்கட்டினர்.

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் சென்ற பின்புதான் குல்தீப் யாதவின் திறமை வெளியே தெரிந்தது. 2021ஆம் ஆண்டில் காயம் காரணமாக 6 மாதங்கள் குல்தீப் விளையாடவில்லை,” என்றார்.

இந்தக் காலக்கட்டத்தில் குல்தீப் தன்னிடம் பந்துவீச்சில் உள்ள குறைபாடுகளைத் திருத்திக் கொண்டார். ஸ்டெம்ப்புக்கு மட்டும் குறிவைத்து பந்துவீசும் முறையைக் கையில் எடுத்தார்.

பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து, டாஸ் செய்வதை அதிகப்படுத்தி, பந்து சுழல்வதை அதிகப்படுத்தினார். ஆசியக் கோப்பையை வெல்லவும் குல்தீப் முக்கியக் காரணமாக இருந்தார்.

சஹலா அல்லது குல்தீப்பா?

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குல்தீப் யாதவ் 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி 43.73 சராசரி வைத்திருந்தார்.

2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணிக்குள் ரிஸ்ட் ஸ்பின்னர் என்றால் குல்தீப் யாதவ் அல்லது யஸ்வேந்திர சாஹல் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்றால் சஹலையே தேர்வு செய்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை நிறைவு மற்றும் 2021ஆம் ஆண்டு முடிவில் சாஹல் 21 ஒருநாள் போட்டியில் விளையாடி 34 விக்கெட்டுகளையும், 28.47 சராசரியையும் வைத்திருந்தார்.

அதேநேரம், குல்தீப் யாதவ் 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி 43.73 சராசரி வைத்திருந்தார்.

இதனால் குல்தீப் யாதவைவிட சாஹலையே இந்திய அணி தேர்வுக்குழு விரும்பியது. ஐபிஎல் தொடரிலும் குல்தீப் கொல்கத்தா அணியால் ஓரங்கட்டப்பட்டார். ஆனால், அதன்பின் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஏற்பட்ட மாற்றம் மிகப் பெரியது.

குல்தீப்பின் விஸ்வரூபம்

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது போன்றவை குல்தீப் யாதவின் பந்துவீச்சை மெருகேறச் செய்தது.

குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிறு, சிறு மாற்றங்களைச் செய்யவே, அவரது பந்துவீச்சு சர்வதேச அளவில் சிம்மசொப்னமாக மாறி மீண்டும் வலம் வந்தது. 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை குல்தீப் யாதவ் 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

குல்தீப் பந்துவீச்சு சராசரி 43.73 ஆக இருந்தது, திடீரென 18.93 ஆகக் குறைந்தது. குல்தீப் யாதவின் பந்துவீச்சு எக்கானமி ரேட், 2019ஆம் ஆண்டில் 5.70 ஆக இருந்தது, 2022ஆம் ஆண்டில் 4.70ஆகக் குறைந்தது.

கடந்த ஆண்டில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது, தென் ஆப்பிரிக்கா, இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளைச் சாய்த்தது, ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது போன்றவை குல்தீப் யாதவின் பந்துவீச்சை மெருகேறச் செய்தது.

குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பந்து மெதுவாக வருகிறது, தாழ்வாக வருகிறது என்ற விமர்சனங்களுக்கு குல்தீப் தனது பந்துவீச்சில் பதிலடி கொடுத்தார்.

பந்துவீச்சில் குல்தீப் செய்த திருத்தங்களால், பந்துவீச்சில் சிறிது வேகத்தை அதிகப்படுத்தி, பந்தை வீசும்போது அதிகமாக 45 டிகிரி கோணத்தில் டாஸ் செய்தார்.

குல்தீப் யாதவ் பந்து வீச்சில் செய்த மாற்றம் அவரை புதிய உச்சத்துக்கும், அவருக்குத் திருப்பமுனையைும் ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் பேட்டரை பதம் பார்த்த குல்தீப்

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆசியக் கோப்பைத் தொடரில் குல்தீப் யாதவ் பந்துவீச்சை கணித்து ஆடுவது கடினமாக இருந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பேட்டர் பக்கர் ஜமானுக்கு வீசிய பந்சுவீச்சை யாரும் மறந்திருக்க முடியாது.

குல்தீப் டாஸ் செய்த பந்தை பக்கர் ஜமான் கவனித்து ஃபிரண்ட்ஃபுட் செய்து விளையாடுவதற்குள் பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச்சாக மாறி விக்கெட்டை பறித்தது.

ஆசியக் கோப்பைத் தொடரில் குல்தீப் யாதவ் பந்துவீச்சை கணித்து ஆடுவது கடினமாக இருந்தது.

இன்றைய சுழற்பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் வீசும் 83 கி.மீ வேகம் என்பது அதிவேகம் இல்லை என்றாலும், கடந்த காலத்தைவிட குல்தீப் யாதவின் பந்துவீச்சில் வேகம் கிடைத்திருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

கணிக்க முடியாத குல்தீப் பந்துவீச்சு

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குல்தீப் யாதவ் முதுகை வளைக்காமல் நேராகப் பந்துவீசுவது, அவரின் பந்துவீச்சில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேதான், குல்தீப் யாதவின் முதல் சர்வதேச பயிற்சியாளர். குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கும்ப்ளே இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “குல்தீப் யாதவ் இந்திய அணியில் இருந்த காலத்தில் நான் பயிற்சியாளராக இருந்தபோது, நேராகப் பந்துவீச அவருக்கு அறிவுறுத்தினேன்.

ஆனால், அப்போது அவர் திருத்திக் கொள்ளவில்லை. இப்போது, குல்தீப் யாதவ் முதுகை வளைக்காமல் நேராகப் பந்து வீசுவது, அவரின் பந்துவீச்சில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

பந்துவீச்சில் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். முன்பு பந்துவீச்சில் வேகத்தை குல்தீப் யாதவால் அதிகப்படுத்த முடியவில்லை, ஆனால், இப்போது முன்பைவிட வேகமாகப் பந்து வீசுகிறார்.

இதனால், குல்தீப் பந்துவீச்சை எந்த ஒரு பேட்டராலும் எளிதாகக் கணித்து ஷாட்களை அடிக்க முடியாது. பந்து எந்தத் திசையில் டர்ன் ஆகிறது என்பதைக் கணிப்பதும் கடினம்,” எனத் தெரிவித்தார்.

சாதனை நாயகன்?

குல்தீப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உலகக் கோப்பையிலும் குல்தீப் விக்கெட் வீழ்த்தும்போது, நிச்சயம் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் உள்ளார். இதில், உலகக் கோப்பையிலும் குல்தீப் விக்கெட் வீழ்த்தும்போது, நிச்சயம் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவ் 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிவிரைவாக 50 விக்கெட்டுகளை எட்டிய 5வது சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்கிறார். 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை குல்தீப் எட்டினார். 88 ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் அடைந்தார்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், தென் ஆப்பிரிக்காவின் தப்ரியாஸ் ஷம்ஸி, ஆப்கானிஸ்தான் நூர் அகமது ஆகியோர் மட்டுமே உள்ளனர். நிச்சயம் இந்த 3 சினாமேன் சுழற்பந்துவீச்சாளர்களும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்களாக இருப்பார்கள்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *