
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியானது முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சிக்கான முதலீடாக இந்தத் திட்டத்தைப் பார்ப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது.
அத்துடன் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கிலேயே ரூ.1,000 வரவு வைக்கும் திட்டம் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதுதொடர்பான விண்ணப்பங்கள் கோரும் முகாம், மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.
அந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களோடு ஒப்பிடப்பட்டு, பயனாளியின் பெயரில் உள்ள விவரங்கள் ஆவண அடிப்படையில் சரிப்பார்க்கப்பட்டது.
பின்னர், கள ஆய்வுகளின் அடிப்படையிலும் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைச் சரிபார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
ஏற்கெனவே “பயனாளிகளுக்கான தகுதிகள்” அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்தத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், விண்ணப்பம் நிரப்புதலில் தகுதியின்மைக்கு ஆனானவையும் ஏற்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியானது முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தி
விண்ணப்பத்தின்போது, எந்த மொபைல் எண் ஆதாரோடு இணைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டதோ, அதே எண் பயனாளியின் வங்கித் தரவு விவரங்களிலும் கொடுக்கப்பட்டிருப்பின் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தி நேற்று (செப்டம்பர் 13) வந்திருக்கும்.
பணப் பரிமாற்றம் சரியாக நடக்கிறதா என்று அறிய தமிழக அரசு முன்னோட்டம் பார்த்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த ரூ.1 வரவுக்கான குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றவர்கள், தாங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு தகுதி பெற்றிருப்பதை அறிந்து கொண்டனர்.
அதேபோல் இன்று (செப்டம்பர் 14) பிற்பகல் முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
குறுஞ்செய்திகளைக் கண்ட பெரும்பாலான பெண்கள், தங்கள் வங்கிக் கணக்கில் எதிர்பாராத நேரத்தில் பணம் வந்தது குறித்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இனிவரும் மாதங்களிலும் மாதா மாதம் இந்தப் பணம் தங்களுக்குக் கிடைக்கும் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், TNDIPR
சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு கிடைக்காது.
ஒரு நாளைக்கு முன்பாகவே பணம் வந்தது ஏன்?
பொதுவாக, அரசு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக விழா மூலம் தொடங்கி வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தை முதல்வர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அதிகாரிகளுடன் நடத்திய வீடியோ கான்ஃபிரன்சிங் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் இது. ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் 1,000 ரூபாயை மாதந்தோறும் பெறுவர்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “இது அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டம். இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு உள்ளது,” என்றார்.
அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தையும் அப்போது முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரியும், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளருமான தாரேஷ் அஹமத் பிபிசி தமிழிடம் பேசினார்.
அப்போது அவர் “செப்டம்பர் 15ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான கணக்குகளுக்கு பணம் வரவு வைக்கப்பட இருந்தது.
இந்தத் திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்கூட்டியே பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் விளக்கமளித்தார்.
ஏடிஎம் கார்டு விநியோகம்
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து தேர்வாகியுள்ள பெண்களுக்கு அதற்கான ஏடிஎம் கார்டுகளும் நாளை முதல் (செப்டம்பர் 15) முதல் விநியோகிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து எதற்காக இந்த ஏடிஎம் கார்டு, ஏற்கெனவே தங்களிடம் உள்ள வழக்கமான வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அந்தப் பணத்தை எடுக்க முடியாதா?
யூபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்ய முடியாதா?
இவ்வாறு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
யாருக்கெல்லாம் இந்த ஏடிஎம் கார்டு தேவைப்படும்?

பட மூலாதாரம், Getty Images
ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் உரிமைத் தொகை பெற முடியாது
வங்கிக் கணக்கு வைத்திருந்தும் அது பயன்பாட்டில் இல்லாதோர், பான் அட்டை இல்லாதவர்கள், ஆதார்-பான் எண்ணை இணைக்காததால் ஏடிஎம் கார்டு வங்கியில் கிடைக்கப் பெறாதவர்கள் ஆகியோருக்க்ஹ தபால் நிலையங்களிலும், கூட்டுறவு வங்கிகளிலும் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முகாம்கள் நடைபெற்றன.
அந்த முகாமில் விண்ணப்பித்தவர்களும் தங்களுக்கு வந்துள்ள உரிமைத் தொகையை எளிதில் எடுப்பதற்காக இந்த பிரத்யேக ஏடிஎம் கார்டு விநியோகம் செய்யப்பட உள்ளன.
மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் நாளை (செப்டம்பர் 15) இத்திட்டத்தைத் தொடக்கி வைக்கிறார்.
அதேநேரம் மாவட்டம் தோறும் இந்த விழா நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகள் விநியோகிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
பயனாளிகள் எதன் அடிப்படையில் விழாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) ஷர்மிளா விளக்கம் அளித்துள்ளார்.
“முதற்கட்டமாக 2500 முதல் 3000 ஏடிஎம் கார்டுகள் கோவைக்கு வந்துள்ளன.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் விழா நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் இரு தாலுக்காக்களை சேர்ந்தவர்களின் ஏடிஎம் அட்டைகள் இருந்தால் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் நேரில் வந்து தங்களது ஏடிஎம் கார்டை வாங்கிச் செல்லலாம்,” என்று டிஆர்ஓ சர்மிளா கூறினார்.

பட மூலாதாரம், Elambhahavath IAS
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து தேர்வாகியுள்ள பெண்களுக்கு அதற்கான ஏடிஎம் கார்டுகளும் நாளை முதல் (செப்டம்பர் 15) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
ஏடிஎம் கார்டில் என்னென்ன விவரங்கள் இடம்பெற்றிருக்கும்?
பயனாளியின் பெயர், அவர்களுக்கான பிரத்யேக 16 இலக்க எண்கள், அட்டை காலாவதியாகும் மாதம் ஆண்டு, ஆகியவை இடம்பெற்றிருக்கும். இது ஒரு வழக்கமான டெபிட் கார்டு போன்றே இருக்கும்.
காத்திருக்கும் அதிகாரிகள்
ரூ.1,000 பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு செல்லும் பயனாளிகளைப் பார்த்து, பணம் கிடைக்கப் பெறாதவர்கள் அதிருப்தியடையாத விதமாக, திட்டத்தின் தொடக்க விழா நடக்கும் இடத்திலேயே அரசு அதிகாரிகள் முகாம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
அவர்கள் மேல்முறையீட்டுக்கான கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு “பரிசீலிக்கிறோம்” என விண்ணப்பதாரர்களிடம் கூற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
நிராகரிப்பு காரணம் பற்றிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம். ஒருவேளை விண்ணப்பத்தில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
விண்ணப்பத்தின் முடிவு நிலை என்னவாயிற்று என்பது குறித்து, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் 18ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
அதில், விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான விவரங்களை அறிந்து கொள்வதற்கான இலவச அலைபேசி எண்களையும் மறக்காமல் குறிப்பிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் அதில் தெரிவிக்கப்படும்.
- நிராகரிப்பு காரணம் பற்றிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம். ஒருவேளை விண்ணப்பத்தில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
- குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற நாட்களில் இருந்து மேல்முறையீட்டு விண்ணப்பங்களைப் பெற 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது.
- தனி நபர்கள் மூலம் பெறும் புகார்களுக்கு வருவாய் கோட்டாட்சியரே விசாரணை அலுவலராகச் செயல்படுவார்.
- நேரில் செல்ல இயலாதவர்கள் இ-சேவை மையம் மூலமும் மேல்முறையீடு செய்யலாம். அதற்கும் 30 நாட்கள்தான் அவகாசம்.
- இணையம் மூலம் பெறப்பட்ட மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவுகளோடு ஒப்பிடப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
- கள ஆய்வு தேவைப்படும் எனில், அதுவும் மேற்கொள்ளப்படும்.
- அந்தக் கள ஆய்வுக்கான முடிவுகள், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வாயிலாக சரிபார்க்கப்படும்.
இந்த மேல்முறையீடு தொடர்பான நடைமுறைகள் அனைத்துமே இணையம் வழியாகவே செய்யப்படவுள்ளன.

பட மூலாதாரம், TWITTER/MK STALIN
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பொருந்துவதாக இருந்தால் உரிமைத் தொகை நிராகரிக்கப்படலாம்.
ரூ.1,000 உரிமைத் தொகையைப் பெற அரசு நிர்ணயித்த தகுதிகள் – ஒரு நினைவூட்டல்
- குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்ட பெண்
- ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரது மனைவி
- திருமணமாகாத பெண், கைம்பெண், திருநங்கை தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவியாகக் கருதப்படுவர்.
- ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் ஒருவர் மட்டும் தேர்வாவார்.
எதனால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்?
- ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பொருந்துவதாக இருந்தால் உரிமைத் தொகை நிராகரிக்கப்படலாம்.
- ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள்
- ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள்/ வருமான வரி செலுத்துபவர்கள்
- ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்போர்.
- ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள்
- மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள்
- வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்
- ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
- நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்
- மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்
- ஊராட்சி மன்ற தலைவர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
- சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள்
- ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
- ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுவோர்
- சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியமும், அரசிடமிருந்து ஓய்வூதியமும் பெறும் குடும்பங்கள்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
“முப்பது நாட்கள் அவகாசத்துக்குள் தங்களது விவரங்கள் குறித்து விண்ணப்பதாரர்கள் கேட்டறிந்து கொள்ளலாம்.”
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். ஆனால், அவர்களுக்கும் தகுதி வகைப்பாட்டு முறைகள் பொருந்தும்.
ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கையில் கொடுத்த மொபைல் எண் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலோ, நெட்வொர்க் சிக்னல் இல்லாத இடத்தில் இருந்தாலோ, அல்லது ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் உள்வரும் அழைப்போ, குறுஞ்செய்தி வருகையோ தடைப்பட்டிருந்தாலோ உங்களுக்கு குறுஞ்செய்தி வராமல் போக வாய்ப்பிருக்கும். எனவே அதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் “கள ஆய்வுப் பணிகளுக்கு அலுவலர்கள் வரும்போது பூட்டப்பட்டிருக்கும் வீடுகள், ஆட்கள் இல்லாத வீடுகள், புலம்பெயர்ந்து இருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் காத்திருப்பில் வைக்கப்படும்.
முப்பது நாட்கள் அவகாசத்துக்குள் தங்களது விவரங்கள் குறித்து விண்ணப்பதாரர்கள் கேட்டறிந்து கொள்ளலாம்,” எனவும் கோவை மாவட்ட டிஆர்ஓ ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்