டெம்பா பவுமா: உலகக் கோப்பையில் மிரட்டும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கேலிக்குள்ளாவது ஏன்?

டெம்பா பவுமா: உலகக் கோப்பையில் மிரட்டும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கேலிக்குள்ளாவது ஏன்?

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

“இன்றிலிருந்து 15 வருடங்களில் எம்பெக்கியுடன் (அப்போதைய தென்னாப்பிரிக்கா அதிபர் ) நான் கை குலுக்குவேன். அவரும் வருங்கால தென்னாப்பிரிக்க அணியை கட்டமைப்பதற்கு எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்.”

இதை டெம்பா பவுமா ஆறாவது படிக்கும்பொழுது எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி பள்ளிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் வேலைக்கான நேர்காணல்களிலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஆனான் சிலரால் மட்டும்தான் இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதிலை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா.

டெம்பா பவுமா தென்னாப்பிரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் நடப்பு உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பை வெல்லாத தென்னாப்பிரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது.

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டெம்பா பவுமா தென்னாப்பிரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார்

மிரட்டும் அணி, கேலி செய்யப்படும் கேப்டன்

உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு, ‘கேப்டன்ஸ் டே’ எனப்படும் உலகக்கோப்பையில் விளையாடும் பத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. இந்த செய்தியாளர் சந்திப்பில் டெம்பா பவுமா தூங்குவது போலிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

தான் தூங்கவில்லை என்றும் அந்த கேமரா கோணத்தினால்தான் அப்படி தெரிந்ததாகவும் டெம்பா பவுமா விளக்கமளித்தார். இந்த விளக்கத்தை அவர் தருவதற்கு முன்பே பவுமா பற்றி பல மீம்கள் வைரலாகின.

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இணையத்தில் தொடர்ந்து கேலி செய்யப்படும் பவுமா

அதன்பிறகு, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் வெள்ளை டவல் போர்த்தி பவுமா அமர்ந்திருந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. தென்னாப்பிரிக்க அணி மும்பையில் நடந்த இரண்டு போட்டிகளிலும் டெம்பா பவுமா விளையாடவில்லை. இருந்தாலும் அவரின் பெயர் செய்திகளில் இருந்துகொண்டே இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற பிறகு, அவரது கொண்டாட்டத்தின் வீடியோவும் தொடர்ந்து எல்லாராலும் பகிரப்படுகிறது.

ஒரு வீரராக பவுமாவின் சுமாரான ஆட்டமும் அவர் ட்ரோல் செய்யப்படுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

உண்மையில் கேப்டன்தான் அணியின் முகம். போட்டிக்கு முன் இறுதி 11 பேர் தேர்வு செய்யப்படும்போது, ​​கேப்டனின் பெயர்தான் முதலில் குறிப்பிடப்படும்.

அணியில் முதல் நபராக கேப்டன் எவ்வாறு செயல்படுகிறார் என்பது ரசிகர்கள், ஊடகங்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் சக வீரர்கள் ஆகியோரின் கவனத்தைப் பெறுகிறது.

அணி ஜெயிக்கிறது என்றால் கேப்டனின் தனிப்பட்ட ஆட்டத்தை யாரும் பேசுவதில்லை. ஆனால் அதே அணி தொடர்ந்து தோற்கிறது என்றால் கேப்டனின் தனிப்பட்ட ஆட்டம் குறித்து எல்லாரும் பேசத் தொடங்குவார்கள்.

பவுமா

பட மூலாதாரம், Getty Images

பவுமாவின் ஆட்டம் எப்படி உள்ளது?

இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை பவுமா 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 35.35 ஆக உள்ளது.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, கடந்த மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார்.

சர்வதேச டி20 போட்டியை பொறுத்தவரை ஒரே ஒரு அரை சதத்தைதான் அடித்திருக்கிறார். டி20யில் அவரது பேட்டிங் சராசரியும் 21.61 ஆகத்தான் உள்ளது.

ஆனால், டெஸ்ட் மற்றும் டி20யோடு ஒப்பிடும்போது ஒரு நாள் போட்டிகளில் பவுமாவின் ஆட்டம் நன்றாகவே உள்ளது. 34 ஒருநாள் போட்டிகளில் 50க்கும் அதிகமாக சராசரி வைத்துள்ளார் பவுமா. மேலும், 4 சதங்களும் 5 அரை சதங்களும் அவர் அடித்துள்ளார்.

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் பவுமாதான்

பவுமா கேப்டன் ஆனதின் பின்னணி என்ன?

பவுமா தென்னாப்பிரிககாவின் கேப்டன் ஆனதற்கு அவர் கருப்பினத்தவர் என்பதுதான் காரணமென தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு அவர் எந்த சூழலில் தென்னாப்பிரிக்காவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

2000ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோல்பாக் ஒப்பந்தத்தினால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்பந்தத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலும் சென்று அந்த நாட்டு வீரராகவே கிரிக்கெட் விளையாடலாம் என்பதுதான் கோல்பாக் ஒப்பந்தம். அதன்படி தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பல வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேருவதற்காக சென்றனர்.

இந்த சிக்கலில் இருந்து தென்னாப்பிரிக்க அணி மீள்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியது.

2021 டி20 உலகக்கோப்பையின் போது இனவாதத்திற்கு எதிரான ‘Black Lives Matter’ முன்னெடுப்பின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முட்டியிட்டு ஆதரவு தெரிவிப்பார்கள்.

பவுமா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த செயலை அதன் அணி வீரர்களுக்கு கட்டாயமாக்கியது.

ஆனால், அப்போதைய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்துதான் பவுமா டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார்.

இந்த சர்ச்சையை பவுமா மிகவும் நிதானத்தோடு அணுகினார். அவரது தலைமைப்பண்பு இந்த விஷயத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பவுமா வெற்றி பெற்றார்.

இந்தப் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு டி காக் மீண்டும் அணிக்குத் திரும்பினார். டி காக் அதன்பின்பு பவுமா குறித்து பாராட்டியே பேசினார்.

டி காக் கூறுகையில், “பவுமா ஒரு மிகச்சிறந்த கேப்டன். மற்றவர்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அதன்பின்பு பவுமாவிற்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதிலிருந்து, பவுமா தென்னாப்பிரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். மேலும் அணியை பல சிக்கல்களில் இருந்தும் வெளியே கொண்டுவந்திருக்கிறார்.

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2021ம் ஆண்டு நடந்த வெ.இக்கு எதிரான போட்டியில் முட்டியிட்டு நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்த பவுமா

குறிவைக்கப்படுகிறாரா டெம்பா பவுமா?

முன்னதாக உலகக் கோப்பையில் கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தியுள்ளனர்.

இந்த வீரர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான வீரர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் தென்னாப்பிரிக்காவை வழிநடத்திய போதுதான் தென்னாப்பிரிக்காவிற்கு ‘சோக்கர்ஸ்’ என்ற பட்டமும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணி பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குறிவைக்கப்படுகிறாரா டெம்பா பவுமா?

கோல்பேக் ஒப்பந்தம் காரணமாக பல வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர். எனவே, புதிய ஒரு அணியை உருவாக்கும் சவால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் முன்பு இருந்தது.

இப்போது சிறப்பாக செயல்படும் இந்த அணியை கட்டமைத்ததில் கேப்டனாக பவுமாவின் பங்களிப்பு அதிகம். புதிய தென்னாப்பிரிக்க அணியை உருவாக்கி, உலகப் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியதில் பெரும் பங்கு வகித்துள்ளார் பவுமா.

இந்திய ஆடுகளத்தில் சிறப்பாக ஆடக்கூடிய ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்காவிடம் உள்ளனர். குயின்டன் டி காக் ரன்களை குவித்து வருகிறார். பந்து வீச்சாளர்களும் அவருக்கு சமமாக ஆதரவு அளித்து வருகின்றனர்.

அதனால்தான் நெதர்லாந்திடம் தோற்ற தென்னாப்பிரிக்கா அடுத்த போட்டியில் இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது . பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

அதற்கு முன், இலங்கைக்கு எதிரான போட்டியில் ரன் மழை பொழிந்து இமாலய வெற்றியை பதிவு செய்தது.

இருப்பினும், பவுமா அவரது சராசரி பேட்டிங்கிற்காகவும் அணி தேர்வில் உள்ள ஒதுக்கீட்டு முறைக்காகவும் அவரது உடல் உயரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி ட்ரோல் செய்யப்படுகிறார்.

தென்னாப்பிரிக்க அணி எனும் மூழ்கும் கப்பலை நிலை நிறுத்திய பவுமா, தனது அணியை உலக பட்டத்தை நோக்கி அழைத்துச் செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *