அண்ணாமலையை கைவிட பா.ஜ.க தேசியத் தலைமை ஏன் தயாராக இல்லை?

அண்ணாமலையை கைவிட பா.ஜ.க தேசியத் தலைமை ஏன் தயாராக இல்லை?

அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க, மோதி, எடப்பாடி கே பழனிச்சாமி, மு. க. ஸ்டாலின்

பட மூலாதாரம், அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க, மோதி, எடப்பாடி கே பழனிச்சாமி, மு. க. ஸ்டாலின்

படக்குறிப்பு,

‘ஜெயலலிதா ஊழல்வாதி என்றார் அண்ணாமலை. பிறகு அதற்கு அவர் மன்னிப்புக் கேட்டதாக ஜெயக்குமார் சொன்னார். ஆனால், அண்ணாமலை தன் கருத்தில் உறுதியாக இருப்பதாகச் சொன்னார்’

அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்திருக்கும் நிலையில், தமிழக அரசியலிலும் தேசிய அரசியலும் அதன் தாக்கம் குறித்தும் தி.மு.க. கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்தும், அடுத்து பா.ஜ.க. என்ன செய்யும் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணனிடம் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

பேட்டியிலிருந்து…

‘பா.ஜ.க. தலைமையில் மூன்றாவது அணி அமையும்’

கே: பா.ஜ.கவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. அறிவித்திருக்கிறது. மாநில அரசியலில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

ப: அ.தி.மு.க. இதே முடிவில் உறுதியாக இருந்தால், மூன்றாவது அணி ஒன்று பா.ஜ.க. தலைமையில் அமையும். சிறிய, சிறிய கட்சிகள் அதில் இணையும். அ.தி.மு.க. அவர்களை நம்பி வருகிற கட்சிகளோடு இணையலாம். இன்றுவரை உறுதியாக இருக்கிற தி.மு.க. கூட்டணியிலும் ஒரு தாக்கத்தை இது ஏற்படுத்தலாம். மதவாத கட்சியோடு இணைந்திருக்கிறது என்பதற்காகவே அ.தி.மு.கவை நாடாத கட்சிகள், குறிப்பாக தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுக்கு வேறு ஒரு வாய்ப்பிருக்கிறது என்று சொல்ல வாசல் திறந்திருக்கிறது. ஆகவே அந்தக் கட்சிகளின் பேர வலிமை அதிகரித்திருக்கிறது. இதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இருக்கிறது.

அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க, மோதி, எடப்பாடி கே பழனிச்சாமி, மு. க. ஸ்டாலின்

கே: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.கவுக்கு அடுத்த பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறது. இது தேசிய அளவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த முறிவு கருத்து ரீதியாக ஒரு பலவீனத்தை தே.ஜ.கவுக்கு ஏற்படுத்தும் என்ற பார்வை இருக்கிறது. அது சரியா?

ப. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை நீண்ட நாட்களுக்கு முன்பே கூட்டணியைவிட்டு விலகிவிட்டன. இந்த நிலையில், அ.தி.மு.கவும் கூட்டணியைவிட்டு விலகியிருப்பது தேசிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, பெரும் பேசுபொருளாக ஆகும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்க இது பயன்படும்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் நிலையில், அதனை எப்படிப் பலவீனப்படுத்துவது என பா.ஜ.க. சிந்தித்துவரும் நிலையில், அவர்களிடம் உள்ள ஒரு பெரிய கட்சி வெளியேறியிருப்பது தர்மசங்கடம் கலந்த ஒரு பலவீனத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்படுத்தும்.

கே: பா.ஜ.கவுடனான கூட்டணியிலிருந்து விலகுவது தொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில், அந்த விலகலுக்கு பா.ஜ.கவின் மாநிலத் தலைமையே காரணம் என கூறப்பட்டிருந்தது. அப்படியானால், பா.ஜ.கவின் மாநிலத் தலைமை மாறும் பட்சத்தில், மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

ப: நிச்சயமாக. அ.தி.மு.கவுக்கு பிரச்சனை கொள்கை அல்ல. அ.தி.மு.கவை, அதன் தலைவர்களை பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சகட்டுமேனிக்கு விமர்சித்து வந்ததுதான் அ.தி.மு.கவின் முடிவுக்கு முக்கியமான காரணம்.

ஒரு வாரத்திற்கு முன்பாக, அண்ணாமலையின் செயல்பாடுகளால் இனிமேல் பா.ஜ.கவுடன் கூட்டணியில்லை, இது என் கருத்தல்ல, கட்சியின் கருத்து என்று ஜெயக்குமார் சொன்னார். இதற்கு ஒரு வாரம் கழித்தும் அந்த ஒரு வாரத்திற்குள்ளும் பா.ஜ.கவின் தேசியத் தலைவர்களிடமிருந்து எந்த சலனமும் வரவில்லை. எந்தப் பதற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

அதனால்தான் ஒரு வித குழப்பத்திலும் பயத்திலும் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆறு முன்னாள் அமைச்சர்களை, முக்கியப் பிரமுகர்களை தில்லிக்கு அனுப்பி, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்திக்க வைத்தார். ஆனால், இந்த சந்திப்பு நடந்ததை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சொல்லப்போனால் இந்தச் சந்திப்பு ரகசியமாகவே இருந்தது. அ.தி.மு.க. தலைவர்கள் புறப்பட்டுச் சென்றதுகூட, தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லாமல் கொச்சியிலிருந்தும் பெங்களூரில் இருந்தும் புறப்பட்டுச் சென்றனர். அ.தி.மு.க. பேசாமல் இருந்திருந்தால், இந்தப் பிரச்னையை பா.ஜ.கவின் தேசியத் தலைமை எப்படி அணுகுகிறார்கள் என்று பார்த்திருக்கலாம்.

கூட்டணி முறிந்தது என்று சொல்லி ஒரு வாரமாகியும் தேசியத் தலைமை எந்த முடிவையும் எடுக்காத போது, அண்ணாமலையை இந்த நிமிடம் வரை அவர்கள் கைவிடத் தயாரில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, இப்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியிருப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருக்கும் நிலையில், “உங்களுக்குப் பிரச்சனை அண்ணாமலைதான் என்றால், அவரை நீக்கிவிட்டோம்” என்று ஓரிரு மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.க. சமாதானப்படுத்தலாம். அப்படி நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், அது அந்தக் கூட்டணிக்கு முழுப் பலனைத் தருமா என்றால், அது சந்தேகம்தான். இரண்டு கட்சியின் தொண்டர்களும் இந்த முடிவை வெடிவெடித்து கொண்டாடுகிறார்கள். அவ்வளவு கசப்புணர்வு இந்த இரண்டு கட்சியின் தொண்டர்களிடம் மேலோங்கி இருக்கிறது. மீண்டும் ஒற்றுமை ஏற்பட்டால், முழு பலனைத் தராது.

‘அண்ணாமலையிடம் குறைந்தபட்ச நாகரீகம்கூட இல்லை’

கே: அ.தி.மு.க. பா.ஜ.கவுடனான கூட்டணியில் இருந்தபோது தி.மு.க.விடமிருந்து கடுமையான கேலியைச் சந்தித்து. தி.மு.க. தொடர்ந்து அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் அடிமை என கேலி செய்தது. அ.தி.மு.க. தொண்டர்களிடமும் எதிர்ப்பு இருந்தது. இருந்தபோதும், பா.ஜ.க. ஏன் அ.தி.மு.கவை இப்படி நடத்தியது?

ப: பா.ஜ.க. இப்படி நடத்தியதாகப் பார்க்கவில்லை. அண்ணாமலைதான் அப்படி நடத்தினார். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஜெயலலிதா ஊழல்வாதி என்றார் அண்ணாமலை. பிறகு அதற்கு அவர் மன்னிப்புக் கேட்டதாக ஜெயக்குமார் சொன்னார். ஆனால், அண்ணாமலை தன் கருத்தில் உறுதியாக இருப்பதாகச் சொன்னார். ஊழல் எதிர்ப்பில் இதுதான் என் பாணி என்றார். அடுத்ததாக, அண்ணாவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அண்ணா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால், அண்ணாமலை, நடக்காத ஒன்றைச் சொன்னார். ‘அண்ணா மன்னிப்புக் கேட்டார், மதுரை மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்’ என்றெல்லாம் சொன்னார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அந்தத் தலைவரின் பெயரால் இயங்குகிற கட்சியோடு தோழமையில் இருந்துகோண்டே அந்தக் கருத்தைச் சொன்னதை எந்த அண்ணா தி.மு.க. தொண்டனும் ஏற்க மாட்டான்.

அ.தி.மு.கவினர் தெய்வமாக மதிக்கிற ஜெயலலிதாவைவிட என் மனைவி பத்து மடங்கு வலிமையானவர், என் தாய் நூறு மடங்கு வலிமையானவர் என சொல்கிறார். அவர் மனைவியையோ, தாயையோ அவர் கௌரவப்படுத்துவதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அந்த இடத்தில் சம்பந்தமே இல்லாமல் சில்மிஷத்தோடு, ஜெயலலிதாவை வைத்து ஒப்பீடு செய்வதை எந்த அ.தி.மு.க. தொண்டரும் ஏற்க மாட்டார். நாகரீகமுள்ள எந்த தலைவரும் அந்தக் காரியத்தை செய்ய மாட்டார்.

இதுபோல திட்டமிட்டு அவர் செய்யும்போது அந்த செயலை தேசியத் தலைமை வேடிக்கை பார்த்தால், நேற்று எடுத்த முடிவைத் தவிர வேறு வழி எடப்பாடி கே. பழனிச்சாமிக்குக் கிடையாது. அந்த முடிவில் தேர்தல் முடியும்வரை அவர் உறுதியாக இருந்தால், அவருடைய அரசியல் செல்வாக்கு உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கே: ஜெயலலிதாவை விமர்சித்த பிறகு, அண்ணாவை விமர்சித்த பிறகு கூட்டணியைவிட்டு விலகுவதாக கடந்த வாரம் ஜெயக்குமார் அறிவித்தார். இப்போது ஒரு வாரம் கழித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கிறார்கள். இடையில் என்ன நடந்தது?

ப: இதற்கு நடுவில் ஒரு விஷயம் நடந்தது. மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டை அண்ணாமலை கொச்சைப்படுத்தி பேசினார். எடப்பாடி கே. பழனிச்சாமி பதவி வாங்கிய விதத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால், தோழமைக் கட்சியாக இருந்துகொண்டு அதை விமர்சிக்கலாமா என்ற கேள்வி வருகிறது. ‘நீங்கள் அடிமை’ என்று தி.மு.க. சொல்லலாம். அண்ணாமலை சொல்லலாமா? இந்த குறைந்தபட்ச நாகரீகம்கூட அண்ணாமலையிடம் இல்லை.

இரட்டைத் தலைமையாக இருந்ததால், என்னால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை என்றுகூறி, கட்சியினரை ஒருங்கிணைத்து ஒற்றைத் தலைமையாக மாறியிருக்கிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி. அதற்குப் பிறகும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இழிவுபடுத்தினால், கே. பழனிச்சாமி அமைதி காப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு அ.தி.மு.கவினர் வந்திருப்பார்கள். கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை இருந்தால், அது இப்போது வெடிப்பதற்கு இதுதான் காரணம். எடப்பாடி கே. பழனிச்சாமி மீது வைக்கப்பட்ட விமர்சனம்தான் இந்த மோதலுக்குக் காரணம். சுயமரியாதையுள்ள எந்த தனி மனிதனும் அந்த விமர்சனங்களை ஏற்க மாட்டான்.

கே: இருந்தபோதும் சில தலைவர்களை டெல்லிக்கு அனுப்பி, தேசியத் தலைமையிடம் பேச எடப்பாடி முயன்றதாகக் கூறுகிறீர்கள். ஏன் அதை அவர் செய்ய வேண்டும்?

ப: ஏனென்றால், முழுமையான ஆளுமை மிக்க தலைவராக எடப்பாடி ஆகவில்லையென ஒரு பார்வை பார்க்கலாம். தன் மீது வழக்குகள் பாயலாம் என்ற பயமும் ஒரு காரணமாக இருக்கலாம். திங்கட்கிழமையன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியபோது, எதையும் எதிர்கொள்ள நான் துணிந்துவிட்டேன் என எடப்பாடி சொன்னதாக ஒரு தகவல் இருக்கிறது. அதனை அவர் அங்கிருந்தவர்களை திருப்திப்படுத்தக்கூட சொல்லியிருக்கலாம். ஆனால், அந்த வார்த்தைகளை அவர் உண்மையாகச் சொல்லியிருந்தால், நிஜமாகவே அவர் ஒரு அரசியல் ஆளுமையாக உயர்வார்.

அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க, மோதி, எடப்பாடி கே பழனிச்சாமி, மு. க. ஸ்டாலின்

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு,

‘தி.மு.கவிற்கு சில சவால்கள் காத்திருக்கின்றன என அதைத்தான் சொல்கிறேன். அதைச் சமாளிப்பது மு.க. ஸ்டாலினுக்கு தலைவலியாகத்தான் இருக்கும்’

‘கூட்டணியை தக்கவைப்பது தி.மு.கவிற்கு சவாலாக இருக்கும்’

கே: முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி தற்போதைய அரசு அனுப்பிய கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இப்போது கூட்டணியைவிட்டு விலகியது குறித்து அண்ணாமலையும் எதுவும் சொல்லவில்லை, தேசியத் தலைமையும் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என்ன கருத்தில் இருக்கக்கூடும்?

ப: அ.தி.மு.க. இந்த முடிவை இப்போதுதான் எடுத்திருக்கிறது. ஆகவே, பா,ஜ.க. தனது வியூகத்தை உடனே சொல்லவிட வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. பா.ஜ.க. பல ஆயுதங்களை தன் கையில் வைத்திருக்கும். புதிய அணியை அமைக்கலாம், இப்போதுள்ள அ.தி.மு.கவை சிதைக்கலாம், இரட்டை இலையை முடக்க வேறு வாய்ப்புகளைத் தேடலாம், எடப்பாடி கே. பழனிச்சாமியை மிரட்ட வேறு யுத்திகளை யோசிக்கலாம்.

அல்லது அண்ணாமலையை மாற்றிவிட்டு, இப்போதைக்கு சமாதானமாகப் போகலாம் என்ற எண்ணத்திற்குக்கூட வரலாம். அவர்களுக்கு காலம் இருக்கிறது. ஆகவே, உடனே அவர்கள் எதிர்வினையை எதிர்பார்க்க முடியாது.

கே: தி.மு.கவைப் பொறுத்தவரை, இந்த கூட்டணி முறிவு பலனளிக்குமா, பாதகமாக இருக்குமா?

ப: பாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், இப்போதுள்ள கூட்டணியை தக்கவைப்பது சவாலாக இருக்கும். இப்படி மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலில் நின்றால், அது அதிகாரமும் பண பலமும் கொண்டுள்ள தி.மு.க. கூட்டணிக்குத்தான் மிகப் பெரிய சாதகமாக அமையும் என நினைக்கிறேன்.

கே: கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தி.மு.க. கடுமை காட்டினால், அது அவர்களது கூட்டணியில் உள்ள சில கட்சிகளை அ.தி.மு.க. கூட்டணிக்கு தள்ளக்கூடும் என ஒரு பார்வை இருக்கிறது. அது சரியா…

ப: தி.மு.கவிற்கு சில சவால்கள் காத்திருக்கின்றன என அதைத்தான் சொல்கிறேன். அதைச் சமாளிப்பது மு.க. ஸ்டாலினுக்கு தலைவலியாகத்தான் இருக்கும். தி.மு.க. ஆட்சியின் மீதே விமர்சனங்கள் எழுந்துள்ள காலகட்டம் இது. இந்தப் பின்னணியில் கூட்டணி சிதையாமல் பார்த்துக்கொள்வது மு.க. ஸ்டாலினுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய சவால்தான்.

கே: தே.ஜ.கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. கொள்கை சார்ந்து பிரியாமல், மாநிலத் தலைமையோடு முரண்பட்டு பிரிந்திருக்கிறது. ஆகவே, தி.மு.க. கூட்டணியில் இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது சரியா?

ப: மேடைக்காக அப்படிப் பேசலாம். கொள்கைக்காகத்தான் தி.முக. கூட்டணியில் இருப்பதாகச் சொல்பவர்கள், கொடுக்கும் இடத்தை வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போடுவார்களா? அங்கேயும் சண்டைகள் வரக்கூடும். இந்தக் கட்சிகள் தங்கள் உரிமைகளை வலுவாக முன்வைக்கும் காட்சிகளை நாமும் பார்க்கத்தான் போகிறோம்.

மதவாத சக்திகளுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி அமைந்தது என வைத்துக் கொள்வோம். அந்த மதவாத சக்தி அ.தி.மு.கவைவிட்டு விலகிய பிறகு, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இன்னொரு வாய்ப்பும் வாசலும் திறந்திருக்கிறது. அதைத் தடுப்பதுதான் மு.க. ஸ்டாலினுக்கு இருக்கக்கூடிய சவால் என்கிறேன்.

கே: இந்த அரசியல் சூழலில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரின் வாய்ப்புகள் மேம்பட்டிருக்கிறதா?

ப: அவர்களது வாய்ப்பு மேம்பட்டிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு, அவர்களிடம் வேறு ஏதும் வாய்ப்பு அவர்களிடம் இல்லை. டிடிவி தினகரனைப் பொறுத்தவரை தனக்கு இருப்பது காங்கிரஸ் கூட்டணி அல்லது பா.ஜ.க. கூட்டணி என தொடர்ந்து சொல்லிவருகிறார். தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி உடையாத வரை அந்தக் கூட்டணியில் அவர் இடம்பெற முடியாது. பா.ஜ.க. கூட்டணியைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. அந்தக் கூட்டணியில் இருந்தவரை நிலைமை வேறு. தற்போது, அந்தக் கட்சி தன் தலைமையில் ஒரு அணியை அமைக்க வாய்ப்புள்ளது.

அப்போது ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. தங்கள் கூட்டணிக்கு அழைக்கலாம். அதனை அவர்கள் ஏற்கும் வாய்ப்பும் இருக்கிறது.

அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க, மோதி, எடப்பாடி கே பழனிச்சாமி, மு. க. ஸ்டாலின்

பட மூலாதாரம், ARUN KARTHICK

படக்குறிப்பு,

‘கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை தீர்மானமாகப் போட்டது துணிச்சலான நடவடிக்கைதான்’

கே: அப்படி அவர்கள் செல்லும்பட்சத்தில், தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய முக்குலத்தோர் வாக்குகள் பிரியும் என்ற பார்வை இருக்கிறது. ஆனால், பாரம்பரியமாக அ.தி.மு.கவுக்கு வாக்களிப்பார்கள் மாற்ற வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் இருக்கிறது…

ப: ஓ. பன்னீர்செல்வத்திற்கும் டி.டி.வி. தினகரனுக்கும் செல்வாக்குள்ள பகுதிகள் என்று பார்த்தால், தென் மாவட்டங்களும் டெல்டாவும்தான். மற்ற இடங்களோடு ஒப்பிடும்போது அவர்களுக்கு அங்குதான் கூடுதல் செல்வாக்கு இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டித்தான், அவர்களை அ.தி.மு.க. அணியில் இணைக்க வேண்டும் என பா.ஜ.க. கூறிவந்தது.

ஆனால், இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது எடப்பாடிதான். அ.தி.மு.க. வாக்குகள் சிதறக்கூடாது என அவர்தான் கவலைப்பட வேண்டும். இதனால், ஏற்படும் சாதக பாதங்களுக்கு எடப்பாடியும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கே: பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறியிருக்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமியின் இமேஜ் உயர்ந்திருப்பதாகச் சொல்ல முடியுமா?

ப: கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை தீர்மானமாகப் போட்டது துணிச்சலான நடவடிக்கைதான். அரசியல் ஆளுமை என்றுகூடச் சொல்லலாம். இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்தால் அப்படிச் சொல்லலாம். ஆனால், இன்னும் எட்டு மாதங்கள் இருக்கின்றது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அண்ணாமலையை நீக்கிவிட்டார்கள், திரும்பச் சேர்கிறோம் என்றால், அவரது செல்வாக்கு எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதைப்போல இரண்டு மடங்கு கீழே செல்லும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *