வேளச்சேரி: கட்டுமான பள்ளத்தில் இருவர் சிக்க யார் காரணம்? மீட்புப் பணி தாமதம் ஆனது ஏன்?

வேளச்சேரி: கட்டுமான பள்ளத்தில் இருவர் சிக்க யார் காரணம்? மீட்புப் பணி தாமதம் ஆனது ஏன்?

வேளச்சேரி கட்டுமான விபத்து - மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், NDRF

சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய பள்ளத்திற்கு அருகே நிலம் சரிந்த விபத்தில் ஐந்து பேர் பள்ளத்தில் விழுந்து சிக்கினர். அவர்களில் மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், இருவர் வெள்ளிக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

ஐந்து பேர் சிக்கிய விபத்தில், இருவரை மட்டும் மீட்க தாமதமானது ஏன்? மீட்புப் பணியில் இருந்த சவால்கள் என்ன? இறந்த இருவர் பள்ளத்தில் சிக்கியது எப்படி?

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை மிக்ஜாம் புயல் தமிழகத்தின் கடலோரப் பகுதியைக் கடக்கும்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகனமழை பெய்து கொண்டிருந்தது.

பள்ளத்தில் ஐந்து பேரும் சிக்கியது எப்படி?

மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், Getty Images

அப்போது, வேளச்சேரியில் உள்ள கிண்டி ஐந்து பர்லாங் – வேளச்சேரி சாலை இணைப்புச் சந்திப்பில் இருந்த பெட்ரோல் பங்க்கின் அருகில் தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தது. அங்கு கட்டப்படும் அடுக்குமாடி கட்டடத்தின் மூன்று அடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்காக சுமார் 50 முதல் 60 அடிக்கு பள்ளம் தோண்டியிருந்தனர்.

மழை பெய்த அன்று காலை, அந்தக் கட்டுமான தளத்தில் இருந்த கன்டெய்னர், ஜெனரேட்டர் அறை மற்றும் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கின் தற்காலிக கழிவறை ஆகியவை அந்தப் பள்ளத்தில் சரிந்தது. அப்போது, கழிவறை, ஜெனரேட்டர் அறை மற்றும் கன்டெய்னர் மீதிருந்த ஐந்து பேர் அந்தப் பள்ளத்தில் சிக்கினர்.

இதை நேரில் பார்த்த அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள், பள்ளத்தின் மேல் பகுதியில் சிக்கியிருந்த மூன்று பேரை அப்போதே மீட்டனர். பிறகு, அந்த பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிய வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த 24 வயதான நரேஷ் மற்றும் கட்டுமான தளத்தில் பணியாற்றிய 29 வயதான கள பொறியாளர் (சைட் இன்ஜினியர்) ஜெயசீலன் ஆகியோரை பள்ளத்தில் காணவில்லை.

அவர்கள் பள்ளத்திற்கு அடியில் சிக்கியிருப்பார்கள் என அஞ்சிய நிலையில், அவர்களை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினரும், ஆவடியில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் பணியினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

திங்கள்கிழமை தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், இருவரையும் கண்டுபிடிக்க முடியாமல், மீட்புப் படையினர் திணறினர். ஐந்து நாட்கள் கடும் முயற்சிக்குப் பின்னர், நேற்று (வெள்ளிக்கிழமை) இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இருவர் உடல்கள் மீட்கப்பட்டது எப்படி?

வேளச்சேரி கட்டுமான விபத்து - மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், NDRF

சுமார் 60 அடி பள்ளத்தில் தற்காலிக கழிவறையும், கன்டெய்னரும் விழுந்தது. இதற்குக் கீழே இருவரும் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சிய நிலையில், பள்ளத்தில் தொடர்ந்து மழைநீர் வடிந்து வந்ததால், மழைநீரை அகற்றினால் மட்டுமே, அவர்களை மீட்க முடியும் என்ற சூழல் உருவானது.

ஏற்கெனவே நிலம் சரிந்து விபத்து ஏற்பட்டதால், அருகில் அதிக எடைகொண்ட இயந்திரங்கள் மற்றும் வாகனங்களைக் கொண்டு வந்து, தண்ணீரையோ, மண் சரிவையே வெளியேற்றுவதில் நடைமுறைச் சிக்கல் இருந்ததாக மீட்புப் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில், புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று, 60 அடி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக என்.எல்.சி, நிறுவனத்திடம் இருந்து அதிநவீன குழாய் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் உள்ள நீரை வெளியேற்றினர்.

பள்ளத்தில் உள்ள நீரை வெளியேற்றினாலும், தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டுக் கொண்டிருந்ததால், மனிதர்களை பள்ளத்தில் இறக்கி மீட்புப் பணியைத் தொடர முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், தொடர்ந்து சரிந்து வரும் மண்ணை அகற்ற எல்&டி நிறுவனத்தின் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு, சரிந்திருந்த மண்னை அகற்றினர். இதனால், மீட்புப்பணி வியாழக்கிழமை இரவு சற்று வேகம் எடுத்தது. அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 4.30 மணியளவில், நரேஷ் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து, ஜெயசீலனையும் மீட்கும் பணி நடைபெற்று வந்தது. காலை 11 மணியளில் மீட்புப்பணியை பார்வையிட வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், விரைவில் மீட்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

“அவர் உயிருடன் இருக்கிறார் என்று பொய் கூற விரும்பவில்லை. துர்நாற்றம் வீசும் பகுதியில் தேடுகிறோம். அதிகபட்சம் அடுத்த மூன்று மணிநேரத்தில் மீட்டுவிடுவோம்,” எனத் தெரிவித்தார்.

மதியம் 1.30 மணியளவில், ஜெயசீலனும் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட இருவரது சடலமும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மீட்புப் பணியில் தாமதம் ஏன்?

வேளச்சேரி கட்டுமான விபத்து - மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், NDRF

மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பேரிடர் மீட்புப்பணியைச் சேர்ந்த முத்துக்குமார் பிபிசியிடம் பேசுகையில், தண்ணீர் மற்றும் மண் சரிவு என இரண்டையும் ஒரே நேரத்தில் சந்தித்ததால், மீட்பில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறினார்.

“முதல் நாளே நாங்கள் உள்ளே இறங்கிப் பார்த்தோம். அப்போதுதான் இது 60 அடி ஆழம் எனத் தெரிந்தது. மேலும், அந்தப் பள்ளத்தில் தண்ணீர் அதிகம் தேங்கியிருந்தது. மழை காரணமாக அருகில் இருந்த நிலமும் சரிந்துகொண்டே இருந்தது. இவைபோக, அவர்கள் கட்டுமானத்திற்காக 60 அடி ஆழத்திற்குத் தோண்டியிருந்ததால், உள்ளே கான்கிரீட்டுக்காக போட்டிருந்த கம்பிகளும் இருந்தன,” என்றார் முத்துக்குமார்.

இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மீட்புப்படையினர் மேற்கொண்ட மீட்புப் பணிகளில், பெரும்பாலும் அது பள்ளத்தில் நிலச்சரிவு மீட்பாகவும், அல்லது ஆறு, வெள்ளத்தில் இருந்து மீட்டதாக இருந்ததாகவும், இந்த மீட்புப் பணியில் இரண்டு சவால்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் முத்துக்குமார் கூறினார்.

மேலும், அதில் வேறு யாரேனும் சிக்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டபோது, இருவரை மட்டும்தான் காணவில்லை என புகார் தெரிவித்திருந்ததாகவும், இருவரின் சடலத்தையும் மீட்டுள்ளதாகவும் முத்துக்குமார் கூறினார்.

அதிகனமழையில் அதிகாலை வரவழைக்கப்பட்ட ஜெயசீலன்

வேளச்சேரி கட்டுமான விபத்து - மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், NDRF

திருமணமாகி 11 மாதங்களே ஆன ஜெயசீலன், தனது மனைவியுடன் வேளச்சேரி பகுதியில் வசித்து வருகிறார். ஜெயசீலன் பள்ளத்தில் சிக்கிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி மஞ்சு, அவர் உடல் மீட்கப்படும் வரையில் ஐந்து நாட்களாக சாலையின் ஓரத்திலேயே அமர்ந்திருந்தார்.

சம்பவம் குறித்துப் பேசிய மஞ்சு, மழைநீரை வெளியேற்றுவதற்காக ஜெயசீலனை அழைத்ததன்பேரில், அவர் சென்றதாகக் கூறினார்.

“திங்கள் கிழமை அதிகாலை கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது காலை சுமார் 4 மணியளவில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் உடனே கட்டுமான தளத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கிளம்பினார். நான் அவரை அப்போதே தடுத்தேன்.

அவர், ‘நான் இப்போது சென்று தண்ணீரை ஜெனரேட்டர் போட்டு வெளியேற்றாவிட்டால் ரூ 2.5 கோடி நஷ்டமாகிவிடும்’ எனக் கூறிவிட்டு சென்றார். அதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள்,” என்றார் மஞ்சு.

நான்கு பேர் மீது வழக்கு; இருவர் கைது

தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார், கட்டுமானத் தள மேற்பார்வையாளர்கள் எழில், சந்தோஷ், மேலாளர் மணிகண்டன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304(ii) (உயிரிழப்பு ஏற்படும் எனத் தெரிந்து அஜாக்கரதையாக பணியில் அமர்த்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்து, எழில் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்திருந்தும் பணிக்கு வரவழைத்த நிறுவனத்தின் மீது வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி சார்பாகவும் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

“காவல்துறையின் நடவடிக்கை ஒருபுறம் நடக்கிறது. அதேபோல, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாகவும் தனியாக இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது. கட்டுமானத்தில் ஏதேனும் விதிமீறல் இருக்கிறதா என்பதையும் விசாரித்து வருகிறோம்,” என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *