
பட மூலாதாரம், Getty Images
ரோகித் சர்மாவின் தலைமையில் ஆடிய இந்திய அணியின் ஒருநாள் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.
ஆஸ்திரேலியாவிடம் தோற்றபிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 23) நடைபெறும் போட்டியுடன் தொடங்குகிறது.
உலகக் கோப்பையில் பங்கேற்ற அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர். ஹர்திக் பாண்டியா இல்லாததால், அணியின் தலைமை பொறுப்பு சூர்ய குமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தொடர் தொடங்கும் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி: இந்தியக் கிரிக்கெட்டின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களின் கதி என்ன?
இந்தக் கேள்வி இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியே உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களிலும் எழுகிறது.
உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன என்பதுதான் கேள்வி.

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கேள்விக்கு எளிதான ஒரு பதில் இல்லை. ஆனால், இருவருக்கும் சில நாட்கள் ஓய்வு தேவை என்பதும், அதன்பிறகு இந்தக் கேள்வியை அவர்களே தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் மட்டும் நிச்சயம்.
36 வயதான ரோகித் சர்மாவும், 35 வயதான விராட் கோலியும் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அற்புதமாக பேட்டிங் செய்தனர்.
விராட் கோலி உலகக் கோப்பைத் தொடரிலேயே அதிக ரன்கள் எடுத்து சாதனையையும் படைத்தார். ஆனால் வயது அடிப்படையில் இருவரும் ஆட்டத்திற்குச் சாதகமான நிலையில் இல்லை.
இருப்பினும், இரண்டு பேட்ஸ்மேன்களின் ரசிகர்களும் அவர்கள் குறைந்தது இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு நல்ல கிரிக்கெட்டை விளையாடும் திறன் கொண்டவர்கள் என்று கூறுகின்றனர்.
இனிவரும் நாட்களில், இந்திய அணி மூன்று ஐ.சி.சி போட்டிகளில் பங்கேற்க வேண்டும், ஆனால் ரோகித், கோலி இருவரும் மூன்று போட்டிகளிலும் விளையாடுவது சத்தியமற்றது.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த 2 ஆண்டுகளில் என்ன சவால்கள் உள்ளன?
இந்தியா 2024-இல் டி-20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். 2025-இல் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி ஏற்பாடு செய்யப்படும். இந்திய அணி தகுதி பெற்றால், 2025-இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியிலும் விளையாட முடியும்.
இந்த மூன்று முக்கியப் போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இருப்பு என்ன என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் இருவரும் வரும் நாட்களில் அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதைக் காண்ப்து கடினம்தான்.
இருப்பினும் அடுத்த ஓராண்டில் இந்திய அணி எட்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
எனவே, ரோகித் மற்றும் கோலிக்கு அதிக போட்டிகள் விளையாடும் அழுத்தம் இருக்காது.
ஆனால் இந்த இருவரின் கிரிக்கெட் எதிர்காலம் என்னவாகும் என்பது ஆறு மாதங்களுக்குள் நமக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
வயதான வீரர்களின் நிலைமை என்னவாகும்?
ஆறு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு.
இந்தப் போட்டிகளுக்கு, தேர்வாளர்கள் ரோகித்-விராட் மீது நம்பிக்கை வைத்து அவர்களைத் தேர்வு செய்தாலும், அல்லது இளம் வீரர்களை களமிறக்கினாலும், அனைவரின் பார்வையும் டி20 உலகக் கோப்பையை வெல்வதில்தான் இருக்கும்.
கடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் தோல்வியடையும் வரை டி20 அணியில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இருந்தனர். ஆனால், தற்போது இளம் முகங்களுக்கு வாய்ப்பு அளித்து வரும் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இரண்டு முக்கியமான ஐ.சி.சி போட்டிகளைக் கருத்தில் கொண்டு, அணி நிர்வாகம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றிய தனது எண்ணத்தையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
ஆனால் 37 வயதான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒருநாள் அல்லது டி-20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.
அதே நேரத்தில், 34 வயதான ரவீந்திர ஜடேஜா, மற்றும் 33 வயதான முகமது ஷமி ஆகியோரும் பணிச்சுமை விதிகளின் கீழ் தாம் விளையாடவிருக்கும் கிரிக்கெட்டின் வடிவமைப்பைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி ஆறு வாரங்களுக்கும் மேலாக சாம்பியன் போல் விளையாடியது. ஒவ்வொரு போட்டியிலும் அபார வெற்றிகளைப் பதிவு செய்தது
இன்றைய கிரிக்கெட்டில் வீரர்களுக்கான வாய்ப்புகள்
மற்றொருபுறம், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றபிறகு, எதிர்காலத்தைப் பற்றி யாரும் சிந்திக்க மாட்டார்கள் என்ற பார்வையும் உள்ளது.
ஆனால் இந்நாட்களில் சர்வதேசக் கிரிக்கெட் காலண்டர் மிகவும் பிஸியாக உள்ளது. பொறுமையாக அமர்ந்து புதிய வழிமுறைகளைச் சித்திப்பதற்கும், தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கும் யாருக்கும் நேரம் இருக்காது.
தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் வெற்றி அல்லது தோல்விக்குப் பிறகு முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு வீரரின் வாழ்க்கையிலும் ‘அடுத்து என்ன?’ என்று சிந்திக்கவேண்டிய ஒரு நேரம் வரும்.
தற்காலக் கிரிக்கெட்டில் வீரர்கள் ஓய்வு பெற்றதாக அறிவிக்கும் நிர்பந்தமும் இல்லை. ஏனெனில் இப்போது விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலோ, டி20-யிலோ தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி, தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டித்துக்கொள்ள முடியும்.
இவையனைத்தும் தவிர, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் வீரர்கள் தொடர்ந்து விளையாடலாம்.
ஆனால், அதேசமயம் சச்சின் டெண்டுல்கரைப் போல 23-24 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட எல்லோராலும் முடியாது என்பதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை பேட்ஸ்மேன்களிலேயே அதிகபட்சமாக 765 ரன்களை விராட் கோலி எடுத்திருக்கிறார், ரோகித் சர்மா 597 ரன்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்
கோலி, ரோகித்தின் எதிர்காலம் என்ன?
இதற்கு விராட் கோலியின் உடற்தகுதி ஒரு உதாரணம். அவர் தற்போதைய ஃபார்மைத் தக்கவைத்துக் கொண்டால், 2025-க்குப் பிறகும் அவரால் விளையாட முடியும்.
விராட் கோலி எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவர் தன்னை ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மட்டும் தக்கவைத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
மறுபுறம், ஐ.பி.எல் போட்டிகளை வைத்துப் பார்த்தால், ரோகித் சர்மா ஒப்பிடமுடியாத வீரர்.
இந்த இரண்டு ஜாம்பவான்களின் எதிர்காலத்தைப் பற்றி இப்போதே யூகிப்பது சரியாக இருக்காது.
ஆனால், இருவரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க வேண்டுமெனில், மிக விரைவில் 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
உலகக் கோப்பை பேட்ஸ்மேன்களிலேயே அதிகபட்சமாக 765 ரன்களை விராட் கோலி எடுத்திருந்தாலும், ரோகித் சர்மா 597 ரன்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தாலும் இதுதான் நிதர்சனம்.

பட மூலாதாரம், Getty Images
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது
இந்திய அணியின் எதிர்காலம் என்ன?
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றாலும், இந்திய அணியின் வீரர்களோ, அணி நிர்வாகமோ விமர்சனங்களை எதிர்கொள்ளவில்லை. ஏனென்றால், உலகக் கோப்பைத் தொடரிலேயே அடுத்தடுத்து பத்துப் போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி ஆறு வாரங்களுக்கும் மேலாக சாம்பியன் போல் விளையாடியது. ஒவ்வொரு போட்டியிலும் அபார வெற்றிகளைப் பதிவு செய்தது.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் உலகம் முழுவதும் உள்ள பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக இருந்தபோது, கேப்டன் ரோகித் சர்மாவின் பேட் சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைச் சிதறடித்தது. அதேசமயம் விராட் கோலி எப்போதும் மூன்றாம் நம்பர் பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்தார்.
இதனால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே இந்த அணி இந்தியாவின் சிறந்த ஒருநாள் அணியாகக் கருதப்பட்டது.
வரும் நாட்களிலும் இந்திய அணி இதே ஆட்டத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்தில் இருந்து திரும்பிய ஹர்திக் பாண்டியா ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உள்ளது. ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி உருவாக்கிய பாரம்பரியத்தை அவர் முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா எந்த வகையான ஆக்ரோஷத்துடன் இந்திய அணியை உருவாக்கினாரோ, அதே ஆக்ரோஷம் ஹர்திக் பாண்டியாவிடமும் தெரிகிறது. இருப்பினும், அவர் தனது சொந்த பாணியைக் கொண்டுள்ளார். மேலும் அவர் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துகிறார்.
இனி ரோகித் சர்மாவோ, விராட் கோலியோ யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பதை ஹர்திக் பாண்டியா உணர்ந்து கொள்வார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது.
நல்ல விஷயம் என்னவென்றால், 24 வயதான சுப்மான் கில், 25 வயதான இஷான் கிஷான், 26 வயதான ரிதுராஜ் கெய்க்வாட், 28 வயதான ஷ்ரேயாஸ் ஐயர், 21 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் 26 வயதான ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் இந்த அணியை முன்னெடுத்துச் செல்லத் தயாராக உள்ளார்கள்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்