விரைவில் நாட்டின் அந்த 90 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பார்கள். இந்தத் தேர்தல் பெரும்பாலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நிகழ்வு என வர்ணிக்கப்படுகிறது. நரேந்திர மோதி தனது வலதுசாரி தேசியவாத பாரதிய ஜனதா கட்சியை முந்தைய இரண்டு தேர்தல்களிலும் தீர்க்கமான வெற்றிகளுக்கு இட்டுச் சென்றுள்ளார். அவர் தனது கட்சியின் முகமாக முன்னிறுத்தப்படுகிறார். மேலும் வரவிருக்கும் தேர்தல்களிலும் வெற்றி பெறுவார் எனப் பரவலாக நம்பப்படுகிறது. அவரது அரசியல் இந்தியாவை மதரீதியான பிரச்னைகளின் ஊடாக பிளவுபடுத்திய போதிலும், அவரை தொடர்ந்து வெற்றிக்கு இட்டுச் செல்வது எது?
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் நான்கு நாள் அரசுமுறைப் பயணத்தின்போது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை மாளிகையில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அது அவரது வாழ்வின் பெருமையான தருணங்களில் ஒன்று என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் தனது உரையின்போது எழுந்த பலத்த ஆரவாரங்கள் மற்றும் எதிர்முழக்கங்களுடன், ஓவல் அலுவலகத்தில் நிகழ்ந்த அரவணைப்புகள், கைகுலுக்கல்களுக்குப் பிறகு மோதி மகிழ்ச்சியில் மூழ்கினார்.
ஒரு காலத்தில் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி, நரேந்திர மோதி தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதித்த அதே நாடுதான் இப்போது அவருக்கு மரியாதை அளித்துள்ளது. இதை அவர் தனது தனிப்பட்ட வெற்றியாக உணர்ந்திருக்க வேண்டும்.
அமெரிக்க தலைநகரில் அவருக்குக் கிடைத்த வரவேற்பு, அவர் முன்பு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கடந்து இப்போது பரவலாக மதிக்கப்படுகிறார் என்பதை உலகுக்குக் காட்டியதாக மோதியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
