அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் பன்னீர்செல்வம். ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர், தனது தரப்பை பலப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுக்க மாவட்ட கழகங்களை அமைத்து, அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து இருந்தார்.

அதன்படி, நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் 18-ம் தேதி ‘அதிமுக கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற ஆலோசனை நடத்தினார் பன்னீர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களும் எம்.எல்.ஏ.க்களுமான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் மற்றும் பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பன்னீர் தரப்பின் அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் மிஸ்ஸிங்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நடந்தவை பற்றி பன்னீரின் ஆதரவு வட்டத்தில் விசாரித்தோம்.
” ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னால், ஓ.பி.எஸ் தொட்ட காரியமெல்லாம் சரியான முடிவை தரவில்லை. இதனால் அவரின் பின்னால் இருக்கும் எங்களை போன்ற தொண்டர்கள் சோர்வடைந்து இருக்கிறோம். இதை சரிசெய்து எங்கள் தரப்பை பலப்படுத்தும் நோக்கத்தில்தான், 18-ம் தேதி சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால், இக்கூட்டத்தில் பண்ருட்டி ராமசந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படிதான், வருவாய் மாவட்டம் வாரியாக வரும் 26-ம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவாகி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இருந்து இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. ஆரம்பத்தில் கோவையில் மாநாடு நடத்திருப்பதாக அறிவித்தார் ஓ.பி.எஸ். ஆனால், இன்று மாவட்ட அளவில் கூட்டம் நடத்துவது என்பது எங்களுக்கு ஏமாற்றம்தான். ஆனாலும், இதையாவது செய்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஜனவரி 24-ம் தேதி வரை இந்த ஆலோசனை கூட்டங்கள் நடக்கிறது. ஆனால், எல்லா மாவட்டங்களிலும் ஓ.பி.எஸ் கலந்து கொள்வாரா என்பது சந்தேகம்தான்.” என்றனர் விரக்தியுடன்.
தொடர்ந்து பேசியவர்கள், ‘நிறைவாக ஓ.பி.எஸ் பேசியது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. அதாவது, ” அ.தி.மு.க-வில் ஒரு தொண்டனாக இணைந்து, அவைத் தலைவர், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் என்ற எல்லா உயரிய பதவிகளிலும் இருந்துவிட்டேன். பேரூராட்சி தலைவர், எம்.எல்.ஏ-வாக பல ஆண்டுகள் இருக்கிறேன். நிதி அமைச்சராக 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறேன். மூன்று முறை முதல்வராக ஆட்சி செய்துவிட்டேன். இப்படி எல்லா உட்சபட்ச பதவிகளிலும் இருந்து இருக்கிறேன். இவையெல்லாம் எனக்கு அ.தி.மு.க என்ற பேரியக்கமும் அம்மாவும் கொடுத்ததுதான். இப்போதுக்கூட தனிக்கட்சி தொடங்க உள்ளேன்… வேறு கட்சியில் இணையபோகிறேன்… என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி நான் செய்தால் அது அம்மாவுக்கும் கழகத்துக்கும் நான் செய்யும் துரோகமில்லையா? இந்த கட்சிதான் எனக்கு எல்லாமே… அதை துரோகிகள் கையில் இருந்து மீட்கும் வரை ஓயமாட்டேன்’ என்று பேசினார்” என்றார்கள். குறிப்பாக முக்கிய நிர்வாகிகளிடம் பன்னீர் ஆலோசனை நடத்தும்போதெல்லாம் ‘எனக்கு மூன்று நம்பிக்கை இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறாராம்.

இதுகுறித்து பன்னீருக்கு நெருக்கமான சிலரிடம் பேசும்போது, “அண்ணன் மூன்று விஷயத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார். அதாவது, அவரின் ஜாதக பலனின்படி, அவரை எதிர்ப்பவர்கள், வீழ்ச்சி அடைவது உறுதியாம். அதேபோல, பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணி மீண்டும் மலராது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை என்று அண்னன் ஓ.பி.எஸ் திடமாக நம்புகிறார். அதன்படி, ஓ.பி.எஸ், தினகரன், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பச்சமுத்து, சரத்குமார் ஆகியோரை பா.ஜ.க இணைத்து கூட்டணி அமைக்கும் என்று நம்புகிறார். ஒருவேளை இந்த கூட்டணி அமையவில்லையென்றாலும், பா.ஜ.க-வுக்கு உறுதுணையாக இருந்தால், அவர்கள் நம்மை கைவிடமாட்டர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு இல்லையென்றாலும், வாரிசுக்கு ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார். எல்லாத்தையும் பா.ஜ.க சரிசெய்துவிடும் என்பதுதான் அவரது திடமான நம்பிக்கையாக இருக்கிறது” என்கிறார்கள்.
பன்னீர் செல்வத்தின் கனவு பலிக்குமா?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com