தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் `Speaking for India’ என்ற பாட்காஸ்ட் மூலம் ஆடியோ வடிவில் மக்களிடம் பேசி வருகிறார். அதன் மூன்றாவது தொடர் இன்று காலை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், “கடந்த மாதம் வெளியான 2வது தொடரில் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பா.ஜ.க-வின் 7 மெகா ஊழல் குறித்துப் பேசியிருந்தேன். அதெல்லாம் உண்மை என ஒப்புக்கொள்ளும்படியான நடவடிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியிருக்கிறது. இந்த மாதத்தின் இரண்டாவது வாரம் பா.ஜ.க அரசின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்த சிஏஜி அதிகாரிகள், செப்டம்பர் 12-ம் தேதி கூண்டோடு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளியானது.
தி.மு.க தனக்கென தனித்துவமான கொள்கையுடன் 75-ம் ஆண்டை கொண்டாடிய கட்சி மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடும் கட்சியாகவும் செயல்படுகிறது.
அப்படியான தி.மு.க-வின் கொள்கைகளில் முக்கியமானது மாநில சுயாட்சி. இந்தியா என்பதே கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு மொழிகள், பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடு. ஏராளமான சமய நம்பிக்கை, வழிபாட்டு முறைகள், அந்தந்த சமூக மக்களுக்கான அரசியல் சட்ட உரிமைகள் என இருந்தும், எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம். அதனால்தான் நமது நாட்டை உருவாக்கிய தலைவர்கள் ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சித் தன்மைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள். பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறையப் பேசினார்.

ஆனால், அவர் பிரதமராகி டெல்லிக்கு வந்ததும், அரசியல் சாசன சட்டத்தின் முதல் வரியே அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அதுதான் India, that is, Bharat, shall be a Union of States”. குஜராத் முதல்வராக மாநில உரிமை பேசியவர், பிரதமராகி மாநில உரிமைகளைப் பறிக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆட்சி, மாநிலங்களை ஒழிக்க வேண்டும். அல்லது முனிசிபால்டிகளாக மாற்றிவிடவேண்டும் என நினைக்கிறது. குஜராத் முதல்வர் – இந்தியப் பிரதமர் எனப் பிரதமர் மோடி இரண்டுக்குமான சில எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் புரியும்.
டெல்லியை மையப்படுத்தாமல் மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையுடன் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் எனக் கூறியவர், மாநில முதல்வர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, சத்தே இல்லாத நிதி அயோக் அமைப்பை உருவாக்கினார். மாற்று அரசியல் கட்சிகளைப் பழிவாங்க மாட்டேன் எனக் கூறினார். ஆனால், எங்கெல்லாம் பா.ஜ.க ஆட்சிக்கு வரமுடியவில்லையோ அங்கெல்லாம், கட்சிகளை 2 – 3-ஆக உடைத்து, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறது பா.ஜ.க. கூட்டாட்சி கருத்தியலை ஆதரிக்கும் நான் டெல்லிக்குக் காவடி தூக்கும் நிலையை மாற்றுவேன் எனக் கூறினார்.

ஆனால், இன்று மாநில அரசின் திட்டங்களைக்கூட நிறைவேற்ற ஒன்றிய அரசின் வாசலில் காத்துநிற்க வேண்டியிருக்கிறது. மறைமுக வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்ய எல்லா மாநில அரசுகளுடனும் ஆலோசிப்போம் என அவர்களின் தேர்தல் அறிக்கையில் கூறியவர்கள், பிரதமர் மோடியும், மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்களை வழங்குவோம் எனக் கூறினார். ஆனால், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என மறுத்தார். மாநிலங்களின் பங்குகளையும் சரியாகக் கொடுப்பதில்லை. சுருக்கமாகக் கூறுவதானால், ஜி.எஸ்.டி வந்ததிலிருந்து மாநிலங்களின் நிதி நிலை ICU -ல் இருக்கிறது.
12-வது நிதிக் கமிஷனிலிருந்து நிதி ஒதுக்கீடு குறைந்ததால், கடந்த 19 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு சுமார் 85,000 கோடி இழப்பு. இனி ஒவ்வொரு வருடமும். 10,000 கோடி இழப்பு ஏற்படும். அதேபோல, கிராமப்புற ஏழை தாய்மார்களின் வாழ்வாதாரத்துக்கு உயிர்மூச்சாக இருக்கும் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதியைக் குறைத்தது மட்டுமல்லாமல், வேலை செய்யும் தாய்மார்களுக்குச் சம்பளம் கூட சரியாக வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். இந்த நிலை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலத்துக்கும் நீடிக்கிறது. சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் ஒருவர், “மாநிலத் திட்டங்களுக்குப் பிரதமர் மோடியின் படம் போடவில்லையென்றால் தரும் நிதியை நிறுத்துவோம்’’ எனக் கூறுகிறார்.

இதுதான் மாநிலத்துக்கு அதிக நிதி தருவோம் என மோடி கொடுத்த வாக்குறுதியின் உண்மை முகம். இருமாநிலங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு கவுன்சில் அமைத்துத் தீர்வு காணப்படும் எனக் கூறினார்கள். ஆனால், அதையும் முடக்கிவிட்டார். மாநில அரசின் கருத்தைக் கேட்கவும் மனமில்லை. அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கிய அதிகாரங்களில் செயல்படவும் விடுவதில்லை. ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில அரசுகளை முடக்குவதை ஒரு திட்டமாக வைத்துச் செயல்படுகிறது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 19 சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்க பா.ஜ.க ஆளுநரைப் பயன்படுத்துகிறது.
மாநிலங்களின் உரிமையையும், சட்டமன்ற மாண்பையும் தொடர்ந்து சிறுமைப்படுத்துகிறது. இப்படி படிப்படியாக ஒற்றைத் தலைமை, ஒன்றைக் கட்சி, ஒற்றை பிரதமர் என நாட்டை நகர்த்துகிறார்கள் என்று சொல்வதை விட உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் மாநில அரசுகளின் உரிமைகள் நசுக்கப்பட்டு, அரசியல் சாசனம் தந்த கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகம் என எல்லாம் பா.ஜ.க ஆட்சியில் மக்களுடன் சேர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது.

இதில் மோசமானது மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிட்டு, மாணவர்களின் கல்வி உரிமையைச் சிதைப்பதுதான். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனிப் பண்பு, கலாசாரம், சிந்தனை இருக்கிறது. இதையெல்லாம் அழிப்பதற்கான திட்டம் தான் தேசியக் கல்விக் கொள்கை. இப்படி ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
இது எல்லாவற்றுக்கும் தீர்வுதான் மாநில சுயாட்சி. அதனால்தான், அண்ணாவும், கலைஞரும், நானும் மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகிறோம்.1974-ம் ஆண்டு ராஜமன்னார்குழுவை கலைஞர் அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரையைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என முழங்கினார். எனவே, மாநில உரிமைகளைக் காப்பாற்ற வேண்டுமானால், இந்தியா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com