திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான 4 பேரில் மோகன் ராஜ் என்பவர் பாஜகவின் மாதப்பூர் ஊராட்சி கிளையின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை பாஜக தலைவர் சகோதரர் மோகன்ராஜ் அவர்கள் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
மோகன் ராஜ் அவரது தம்பி, அம்மா, சித்தி என 4 வெட்டிக் கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை திமுக அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்? தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.
பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே!? குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com