கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய அரசு அதிகாரபூர்வமாக ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதுமுதல், `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற வாசகத்தை பா.ஜ.க அரசு விளம்பரம் செய்து வந்தது. இந்த விளம்பரத்தில்கூட, இந்தியா நடத்தும் ஜி 20 மாநாட்டின் லோகோவில் தங்களின் தேர்தல் சின்னமான தாமரையை பா.ஜ.க அரசு இடம்பெறச் செய்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

அதற்கெல்லாம், அசராமல் சமாளித்த பா.ஜ.க, இந்த வார தொடக்கத்தில் ஜி 20 மாநாட்டின் சிறப்பு விருந்து அழைப்பிதழில், திரௌபதி முர்முவை, `பாரத குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிட்டு பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளும், நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து `பாரத்’ என பா.ஜ.க மாற்ற முயல்வதாகக் குற்றம்சாட்டியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசியலமைப்பில், இந்தியா, பாரத் என்ற இரண்டு பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன என்று பா.ஜ.க கூறிவந்தது. பின்னர் எதிர்ப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கவே, நாட்டின் பெயரை `பாரத்’ என்று மாற்றுவதாக வெளிவந்த செய்திகள் வதந்தி என அரசு தெரிவித்தது. இருப்பினும், பிரதமர் மோடி கடந்த வியாழனன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியன் (ASEAN) – இந்தியா உச்சி மாநாட்டில், “நமது வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை பாரதத்தையும், ஆசியாவையும் இணைக்கின்றன” என்று கூறினார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் பாரத் சர்ச்சையைக் கிளப்பும் விதமாக, டெல்லியில் நடைபெற்றுவரும் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் மேசையில் அவர் முன் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக `பாரத்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com