சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நேற்று முதல் நடைபெற்றது. கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த இந்த இசை கச்சேரி மழையால் ரத்து செய்யப்பட்டு நேற்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஈசிஆர், ஓஎம்ஆர் சாலை வெறிச்சோடி காணப்படும். ஈசிஆர் சாலையில் ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி நடைபெற்றதால், அவ்வழியாக தேவையற்ற வேலைகளுக்காக பயணிக்க வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று ECR சாலையில் சென்ற வாகனங்களை OMR சாலை வழியாக திருப்பிவிடப்பட்டதால் ECR சாலை, சோழிங்கநல்லூரில் பல மணி நேரமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகரக்கூட முடியாமல் சிலை போல் காட்சியளிக்கும் சூழல் நிலவியது. நேற்று மாலையில் இந்த போக்குவரத்து நெரிசல் பல மணிநேரமாக நீடித்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினனர்.
போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருக்க ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரி ஏற்பாடுகள் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளும், புகார்களும் குவிந்து வருகிறது. இதுவரை சென்னையில் நடைபெற்ற இசை கச்சேரிகளிலேயே மோசமான ஏற்பாடுகளை கொண்ட நிகழ்ச்சி இதுதான் என்றே பலரும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது. குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் ரூ. 50,000 வரை இந்த இசை நிகழ்ச்சிக்கு அதிகாரப்பூர்வமாக டிக்கெட் விற்பனை நடைபெற்றது.
இசை கச்சேரி நிகழ்ச்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் மதியம் 2 மணியளவிலேயே தங்கள் இருக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வயதான பெண்கள் முதல் பல்வேறு தரப்பினர் ஆயிரக்கணக்கில் குவிந்தும் கதவை திறக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். இது பலரையும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, இருக்கைக்கு அனுமதிக்கப்படாமல் உச்சி வெயிலில், கதவு திறப்பதற்காக காத்திருந்த வயதான பெண் ஒருவர் அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு மதியம் வெயிலில் ரசிகர்கள் வாடி வதங்கி போயுள்ளனர்.
இதுமட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் நடந்ததாக ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கூட்டத்தை சாதகமாக வைத்து ஆண்கள் சிலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். நாங்கள் சுவாசிக்கக் கூட சிரமப்பட்டோம். மேலும், அவர்கள் பாலியல் ரீதியில் சீண்டப்பட்டோம்” என குறிப்பிட்டு, ‘என்னுள் இருந்த ரசிகர் இன்று இறந்துவிட்டார், அதற்கு ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி’ எனவும் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com
