தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும் கடுமையாகச் சாடிவருகிறது காங்கிரஸ். குறிப்பாக, `பா.ஜ.க-வின் பி டீம் பி.ஆர்.எஸ், முதல்வர் சந்திரசேகர ராவும், அவருடைய கூட்டணிக் கட்சித் தலைவர் ஒவைசியும் பா.ஜ.க-வுடன் தொடர்பிலிருக்கின்றனர்’ எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.

இதன் காரணமாக ஒவைசியும், முஸ்லிம்களின் வாக்குகளால்தான் வயநாட்டில் ராகுல் காந்தி வென்றதாகவும், தற்போது முஸ்லிம்களை அவர் வெறுப்பதாகவும் ராகுல் காந்தியை தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார்.
இப்படியான சூழலில், தெலங்கானாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, “மோடிக்கு இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் ஒவைசி, மற்றொருவர் சந்திரசேகர ராவ். என்மீது 24 வழக்குகள் இருக்கின்றன. என்னுடைய எம்.பி பதவி முன்பு பறிக்கப்பட்டது. ஆனால், சந்திரசேகர ராவ் மீது எந்த வழக்கும் இல்லை. சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எந்த நடவடிக்கையும் இல்லை.
மோடி பிரதமராக வேண்டும் என்று சந்திரசேகர ராவ் நினைக்கிறார், சந்திரசேகர ராவ் முதல்வராக வேண்டும் என்று மோடி நினைக்கிறார். மாநிலத்தில் பி.ஆர்.எஸ், மத்தியில் பா.ஜ.க என இரண்டையும் தோற்கடிப்பதுதான் காங்கிரஸின் இலக்கு” என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், 50 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக துணையில்லாமல் இருப்பதால்தான், நண்பர்கள் என முட்டாள்தனமாகப் பேசுவதாக ராகுல் காந்தியை ஒவைசி சாடியிருக்கிறார்.

ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியைத் தாக்கிய ஒவைசி, “ராகுல் காந்திக்கு இரண்டின்மீது அன்பு அதிகம். ஒன்று இத்தாலி, காரணம் அவருடைய தாயார் இத்தாலியைச் சேர்ந்தவர். மற்றொன்று மோடி, காரணம் இவர் அவருக்கு அதிகாரம் கொடுப்பதால். உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன் ராகுல் காந்தி, உங்களுக்கு 50 வயதாகிவிட்டது, இனியும் தனியாக இருக்கவேண்டாம்… துணை இல்லாததால்தான், அவர் (ராகுல் காந்தி) எப்போதும் நண்பர்களைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், என்ன இப்போது சரியான வயதும் இல்லை. இனி இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்” என்று சாடினார்.
நன்றி
Publisher: www.vikatan.com