அயோத்தியில் வரும் 22 – ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக, ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்ய திட்டமிட்டார். அதோடு, ராமேஸ்வரம் கோயிலுக்கும் விசிட் அடிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவை தொடங்கி வைக்கவும் அவர் வருகை தந்தார். நேற்று மாலை நடந்த அந்த விழாவில் கலந்துகொண்டவர், இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பயணித்து கொள்ளிட்டம் ஆற்றுக்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் தரையிறங்கி, கார் மூலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை புரிந்தார்.

இருபுறமும் இருந்த மக்களிடம் கையசைத்தபடியே சென்றார் பிரதமர். காலை 11 மணி போல் கோயிலுக்கு வந்த அவருக்கு சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதைக் கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு, பெருமாள் சந்நிதி, தாயார் சந்நிதி, சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட சந்நிதிகளுக்குச் சென்று பிரதமர் மனமுருகி வேண்டினார். அங்கு அர்ச்சகர்கள் வழங்கிய தீர்த்தத்தை பெற்று அருந்தினார். பின்பு, ஸ்ரீரங்கம் கோயில் யானையான ஆண்டாள் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார்.
பிரதமர் வருகையொட்டி ஆண்டாள் யானையை சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். அப்போது அந்த யானையின் பாகன் ஒரு தட்டில் வைத்திந்த மவுத் ஆர்கன் கருவியை எடுத்து, ஆண்டாள் யானையிடம் வழங்கினார். அந்த மவுத் ஆர்கனை யானை வாசிக்க, அந்த இசையை பிரதமர் மோடி ரசித்தார். அதைத்தொடர்ந்து, ஆண்டாள் யானையை தடவிக்கொடுத்த பிரதமர், அந்த யானையிடம் ஆசி பெற்றார். பிறகு, கம்பராமாண பாராயணம் நடைபெறும் இடத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு தனி இருக்கை வைக்கப்பட்டிருந்தது. அதில் அமர்ந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் உள்ள மண்டபத்தில் தான் கி.பி.13 – ஆம் நூற்றாண்டில் கவி சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார்.

அந்த வரலாற்று சிறப்புமிக்க மண்டபத்தில் இந்திய பிரதமர் கம்பராமாயண பாடல்களை பாட கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், பேராசிரியர் ஞானசுந்தரம், குழந்தை மருத்துவத்தில் நிபுணரும், கம்பராமாயணத்தின் மீது மாறா பற்று கொண்டவருமான டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கர்நாடக இசை கலைஞரான சிக்கில் குருச்சரண் கம்பராமாயணத்தை பாடினார்.
அதன்பிறகு கார் மூலம் பயணித்த பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பாக, பிரதமரின் ஸ்ரீரங்கம் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர். அதோடு, கோயிலில் நேற்று மாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதோடு, ஸ்ரீரங்கத்தைச் சுற்றியிருந்த 12 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் மாற்றப்பட்டிருந்தது.

அதேநேரம், நிகழ்ச்சி ஏற்பாட்டில் குளறுபடிகளும், சர்ச்சைகளும் கச்சைக்கட்ட தவறவில்லை. பிரதமர் வருகையை ஒட்டி, கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த, துப்புரவு தொழிலாளிகளுக்கான உண்ணும் உணவைக் குப்பை வண்டியில், ஏற்றி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸாருக்கு கெட்டுப்போன உணவை வழங்கியதாக அதிர்ச்சிக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2 – ம் தேதி பிரதமர் திருச்சி பங்கெடுத்த நிகழ்ச்சியின்போதும் தங்களுக்கு கெட்டுப்போன உணவை வழங்கியதாக, போலீஸார் மத்தியில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
