அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 38 கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் 26 கட்சிகளும் இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கின்றன. இவையில்லாமல், இந்த இரு கூட்டணிகளை எதிர்க்கும் வகையில், தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் “எங்களுக்கு பா.ஜ.க-வும் வேண்டாம், காங்கிரஸும் வேண்டாம். எங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்” என மூன்றாவது அணியைத் திரட்டும் தொனியில் பேசிவருகிறார்.

அதற்கேற்றாற்போல, கடந்த சில தினங்களுக்கு முன்பு அசாதுதீன் ஒவைசியும், “நாட்டுக்கு மூன்றாவது அரசுதான் தேவை. கே.சி.ஆர், மாயாவதி போன்றோர் அந்த இரு கூட்டணியிலும் சேரவில்லை” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மூன்றாவது அணிக்குத் தலைமையேற்குமாறு கே.சி.ஆரிடம் கூறிவருவதாக ஒவைசி தெரிவித்திருக்கிறார்.
2024 தேர்தல் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மூன்றாவது அணிக்கான வாய்ப்பு குறித்து எழுந்த கேள்விக்குப் பதிலளித்த ஒவைசி, “மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு தலைமையேற்குமாறு முதல்வர் கே.சி.ஆரிடம் கூறிவருகிறேன். ஒவ்வொரு மாநிலத்திலுமே பல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் இதற்குத் தயாராக இருக்கின்றனர். இதில் முதல்வர் கே.சி.ஆர் தலைமை ஏற்றால், நிறைய வேலைகளைச் செய்ய முடியும்” என்று கூறினார்.

மேலும் பா.ஜ.க-வை தாக்கிய ஒவைசி, “விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பே பா.ஜ.க-வின் பலம், பலவீனம். ஹரியானாவில் வன்முறையைத் தொடர்ந்து முஸ்லிம்களின் கட்டடங்கள், சொத்துக்களை இடிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது. இவையனைத்தையும் நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு அமைப்பு அரசை மிரட்டும்போது நீங்கள் அதைக் கும்பிடுவீர்களா?” என்று சாடினார்.
நன்றி
Publisher: www.vikatan.com