அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த மறுநாளே சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய இடங்களில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை முழுமையாக குறி வைத்துள்ள மத்திய அமலாக்கத்துறை, பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலில் தலையிட்ட அமலாக்கத்துறை, அவர் தொடர்பாக பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து சோதனைகளை நடத்தி ஆவணங்கள் பறிமுதல் செய்து வருகிறது. அரசியல் ரீதியாக பழிவாங்க அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், மணல் குவாரிகள், அதை இயக்குபவர்கள் வீடுகள் ஆகியவற்றை குறி வைத்து சோதனைகளை நடத்தியது. அதிலும், ஏராளமான ஆவணங்கள், சொத்து விவரங்கள் சிக்கின. அதைத்தொடர்ந்து தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்து இன்றைய சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.
தஞ்சை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகம் என்பவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை தி.நகரில் உள்ள விஜய் அபார்ட்மென்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் சரவணா தெரு, கிழக்கு தெரு ஆகிய தெருக்களில் உள்ள சில வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. பலத்தப் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த சோதனைகளின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விவரங்களை அமலாக்கத் துறையினர் இன்று மாலையில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக, அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக அரசியல் நடுநிலையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நன்றி
Publisher: 1newsnation.com