முறிந்த கூட்டணி: `இலையா… தாமரையா?' – குழப்பத்தில்

பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியை குறிவைத்து, கடந்த ஒரு மாதத்துக்குமேலாக தேர்தல் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். ‘பெரிய கூட்டணி… வெற்றி உறுதி’ என்ற நம்பிக்கையுடன் வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். அதனால், அவரின் நலம் விரும்பிகள் சிலர், ‘வருங்கால வேலூர் பாராளுமன்றமே… மத்திய இணை அமைச்சரே!’ என்றெல்லாம் வசனங்களை தெறிக்கவிட்டு, போஸ்டர் அடித்து ஒட்டினர்.

இந்த நிலையில், ஏ.சி.சண்முகத்தின் நம்பிக்கையில் இடியை இறக்கியது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி பிளவு. “அண்ணே… தேர்தல் நேரத்தில் சூழலைப் பார்த்துவிட்டு மேற்கொண்டு வேலைகளைப் பார்க்கலாம்” என ஆலோசனை சொன்னார்களாம் அவரின் நலம் விரும்பிகள். ஆனால், அவரோ ‘‘ஹாட்ரிக் தோல்வியோ… அனுதாப வெற்றியோ… எதுவாக இருந்தாலும், தாமரைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன்’’ என்று முதலில் பிடிவாதம் காட்டியதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் ஏ.சி.சண்முகம் இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகி, வேலூரில் பரபரத்துக் கொண்டிருக்கிறது.

போஸ்டர்

இது பற்றி பேசுகிற ஏ.சி.சண்முகத்தின் நலம் விரும்பிகள் சிலர், ‘‘ஏ.சி.எஸ்-ஸின் ‘மத்திய மந்திரி’ கனவு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே தகர்க்கப்பட்டுவிட்டது. அதனால், வேலூர் பக்கமும் அடிக்கடி வராமல் இருந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டச் சூழலில், மீண்டும் வேலூரை எட்டிப்பார்த்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி தன்னுடைய சமூக பிரமுகர்களை அழைத்து, வேலூரில் சாதி சங்கக் கூட்டத்தையும் நடத்தினார். ஆனால், அதே சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும், ஏ.சி.சண்முகத்தின் அழைப்பை அப்போதே புறக்கணித்தனர்.

காரணம், கடந்த ஜூன் மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஏ.சி.சண்முகம், ‘கடந்த 2 தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சியினரின் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன்’ எனக் கூறியிருந்தார். அவரின் குற்றச்சாட்டு, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘வேலூரில் தன்னால் வெல்ல முடியுமா, தாமரை மலருமா?’ என பல்ஸ் பார்க்க ஆரம்பித்தார். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை மனதில் வைத்துக்கொண்டு, பல்ஸ் ரிப்போர்ட் ‘பாசிட்டிவ்’ என அவரே முடிவு செய்துகொண்டார்.

முதலில் வெளியிடப்பட்ட போஸ்டர்

இந்த நிலையில், தனது பிறந்த நாளையொட்டி, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக தனது ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்தும் ஆட்களை இறக்கினார். தொடக்கத்தில், இலவச மருத்துவ முகாம்களுக்கான அறிவிப்பு போஸ்டரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் படங்களுடன் தனது புகைப்படத்தையும் இணைத்து, வெளியிட்டிருந்தார். அதேபோல, மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனர்களிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி பிளவுப்பட்டதால், வேதனைக்குள்ளானார் ஏ.சி.சண்முகம். இடைப்பட்ட கடந்த 10 நாள்களில், அவர் பிறந்தநாளையொட்டி நடைபெற்றுவந்த இலவச மருத்துவ முகாம்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. கூட்டணி பிளவினால், அதிருப்தியடைந்த அவர், ‘பா.ஜ.க கூட்டணியும் வேண்டாம்; தாமரைச் சின்னமும் வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதை உறுதிப்படும்விதமாக, மீண்டும் வேலூரை எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் ஏ.சி.சண்முகம். நிறுத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்களையும் தொடங்கி வைக்கிறார்.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்

இந்த முறை மருத்துவ முகாம் அறிவிப்பு போஸ்டர்களில், அறிஞர் அண்ணா, பிரதமர் மோடி, டாக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி என யாருடைய புகைப்படங்களையும் அவர் போடவில்லை. அவர் ஒருவரின் படம் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தியிருக்கிறார்கள். அந்தத் திட்டத்துடன்தான் ஏ.சி.சண்முகம் 10 நாள்கள் இடைவெளியில் மீண்டும் தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறார். வேலூர் அ.தி.மு.க-வில் தேர்தலைச் சந்திக்கும் அளவுக்கு இப்போதைக்கு ஆள் கிடையாது. முக்கியமான ஒருசிலரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கியே காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், பா.ஜ.க-வைக் காட்டிலும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்குத்தான் பல மடங்கு வாக்கு சதவிகிதம் அதிகம். இலைக்கு இருக்கும் மவுசு தாமரைக்குக் கிடையாது. இதையெல்லாம் கணித்த பிறகே ஏ.சி.சண்முகம் அந்த முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார்’’ என்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *