Neet Signature Campaign: `ரூ.1 லட்சம் கட்டுங்க!'-

நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தை, தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி, பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாகக் கூறி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி, பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், `நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது. இந்த நிலையில், அந்தச் சட்டத்துக்கு எதிராக மாநில அமைச்சர், போராட்டம் அறிவிக்க முடியாது.

உதயநிதி

கையெழுத்து இயக்கம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாகக் கருத முடியாது. இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையும், மாறா பற்றும் கொண்டிருப்பதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர், சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியாது. பள்ளிகளில் இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, மாணவர்கள் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்தக் கையெழுத்து இயக்கத்தை அமைச்சரே தொடங்கியிருப்பதால், ஆசிரியர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம்

பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகளால், நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். படிப்பிலிருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். எனவே, பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்கக் கூடாது, என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்… கையெழுத்து இயக்கத்துக்குப் பிறகு நீட் தேர்வு  விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால், அப்போது பொதுநல வழக்கு தொடரலாம்.

வழக்கறிஞர் எம்.எல்.ரவி

அரசியல் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இருக்கிறது என்றாலும், இது போன்ற பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய ஒரு வரம்பு இருக்கிறது. எனவே, உண்மைத்தன்மையை நிரூபிக்க மனுதாரர் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால், வழக்கை விசாரிக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *