இதனை அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உடனடியாக மறுத்தார். இதையடுத்து தன் வாதங்களைத் தொடர்ந்த கபில் சிபல், “ஒருவர்மீது வழக்கு பதிவுசெயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா… இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில், எங்களால் சாட்சிகளை கலைக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக தாம் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி எங்கும் தப்பிச் செல்ல இயலாது. செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல்நிலைபடி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாது.
எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்வார். 3,000, 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல, இவை… அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டுள்ளதால் கலைக்க முடியாது” என்றார்.


செந்தில் பாலாஜி சார்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “செந்தில் பாலாஜிமீது கூறப்படும் முறைகேடு, அவர் அ.தி.மு.க-வில் இருந்தபோது நடைபெற்றது. ஆனால் அவர் தி.மு.க-வில் சேர்ந்த பிறகே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் பொருள்களை 6 நாள்கள் சட்டவிரோதமாக அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. செந்தில் பாலாஜி குற்றம் செய்தாரா… இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி எங்கும் தப்பிச் செல்லமாட்டார். வேண்டுமென்றால் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம்” என்றார்.


அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துள்ளது. இந்த முறைகேடு இடைத்தரகர்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு வேலை கிடைக்கவில்லை. `வருமான வரி கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாலேயே அது சட்டபூர்வமான பணம் ஆகாது’ என்ற தீர்ப்புகள் உள்ளன. வருமான வரி கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை என்பதை ஏற்க முடியாது. விசாரணையில்தான் அது தெரியவரும். குற்றச்சாட்டுக்குள்ளான நபர்தான், தன்மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி, தாம் தவறு செய்யவில்லை என நிரூபிக்க வேண்டும்.
நன்றி
Publisher: www.vikatan.com