“தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது சமதர்ம கூட்டணி, இல்லாதபோது சனாதனமா?” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தி.மு.க-வை விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மதுரை மாநகர் அ.தி.மு.க சார்பில் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயாராக உள்ளது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தி.மு.க ஆட்சியின் தில்லுமுல்லுகளை மறைக்கவே சனாதனம் குறித்து உதயநிதி பேசி வருகிறார். 1999-ல் தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது சனாதனம் எங்கே போனது?
தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது சமதர்ம கூட்டணி, இல்லாதபோது சனாதனமா? இந்தியாவில் சாதி, மத பிரச்னை இல்லை, மக்களை திசை திருப்பவே உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசி வருகிறார்” என்றவரிடம்,

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தது குறித்து, செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“எடப்பாடி பழனிசாமி காலில் நான் விழுந்து வணங்கியதில் எந்தவொரு தவறுமில்லை” என்றவர், ‘பாரத் பெயர் சர்ச்சை’ குறித்த கேள்விக்கு,

“பாரதப் பிரதமரே பாரத் விவகாரத்தைப் பேச வேண்டாம் எனச் சொல்லிவிட்டார், ஆகவே நோ கமென்ட்ஸ்” என்றவர்,
“1971-ல் கருணாநிதியே ஒரே நாடு, ஒரே தேர்தலை வரவேற்றுப் பேசியுள்ளார். கருணாநிதி வழியில் ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்களும் வரவேற்கிறோம்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com