அண்ணாதுரை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் விரிசலுக்கு வித்திட்டிருக்கிறது. அண்மையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறிப் பேசுகிற எந்த ஒரு செயலையும் கருத்தையும் தன்மானமுள்ள அ.தி.மு.க தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை. கூட்டணி குறித்துத் தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். பா.ஜ.க எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ்” எனக் கூறி, பரபரப்பை பற்ற வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க மீதும், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களையும், அ.தி.மு.க-வின் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறது.
இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அ.தி.மு.க பா.ஜ.க-வின் கூட்டணியிலிருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகிக் கொள்கிறது” என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளித்து அ.இ.அ.தி.மு.க இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. #நன்றி_மீண்டும்வராதீர்கள்” எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.
தற்போது அ.தி.மு.க-வினர், ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டேகை, ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com
