“பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது..!” – கருணாஸ்

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது, எந்த கூட்டணியில் உங்களை எதிர்பார்க்கலாம்?”

“நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். தேர்தல் வருகிறது என்றால் உடனே எந்த கூட்டணிக்கு போவது, எத்தனை சீட்டு வாங்குவது என்ற மனநிலையே எனக்கு இல்லை. எனக்குத் தேவைப்பட்டால் நான் நிற்பேன். அதற்கு கூட்டணி வேண்டுமென்ற அவசியமும் இல்லை.”

கருணாஸ்

“ஒவ்வொரு தேர்தலில் நிற்கும் எண்ணமே இல்லை என்றால் உங்கள் அரசியல் கட்சி எதற்காகத்தான்?”

“வி.சி.க, பா.ம.க, கொ.ம.தே.க, புதிய தமிழகம், த.ம.மு.க, சிறுபான்மை கட்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எங்களுக்கு இல்லை. அதை எங்கள் இளைஞர்களிடம் உணர்த்தி, உரிமைகளுக்கான குரல் கொடுப்போம்.”

“நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று உங்கள் ஆதரவாளர்களுக்கு நீங்கள் சொல்லித்தானே ஆக வேண்டும்?”

“கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க-வால் ஏற்பட்ட அவல நிலைகளை எல்லோரையும் போல நானும் உணர்ந்திருக்கிறேன். எதிர்கால தலைமுறையிடம் ஒரு பாதுகாப்பான இந்தியாவை கொடுக்க வேண்டும். அதானியிடமோ, அம்பானியிடமோ கொடுத்துவிட்டு போக முடியாது. எனவே அந்த சூழலை மனதில் வைத்து நல்ல முடிவு எடுப்பேன். ”

இந்தியா கூட்டணி

“அப்படியானால் இந்தியா கூட்டணிக்குத்தான் ஆதரவு என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“அதை இப்போது சொல்ல முடியாது. பா.ஜ.க-வுக்கு எதிராக தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் காக்க வேண்டும். அதற்காக தி.மு.க அணிக்கு வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டால் கூட, அவர்கள் மீதான தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தேர்தல் நெருங்கி இந்திய அளவில் உறுதியான ஒரு நிலைப்பாடு உருவாகும்போது, எங்கள் முடிவையும் எடுப்போம்.”

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டசபையில் இணைந்து செயல்பட்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மூவருமே எந்த கூட்டணிக்கும் போக முடியாததன் பின்னணியில் வேறு காரணங்கள் எதாவது இருக்கிறதா?”

“மானங்கெட்டுப்போன அரசியல் மாண்புமிகு ஆக வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது. வன்னியர் இடஒதுக்கீடு முறையாக கணக்கெடுத்து கொடுக்காமல், அந்த மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நேரடியாக குற்றம்சாட்டிவிட்டுத்தான் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறினேன். யாரும் என்னை கழட்டிவிடவில்லை, நானாகத்தான் முடிவெடுத்து வெளியேறினேன். பிறகு தி.மு.க கூட்டணியில் சீட் கேட்டேன், கொடுக்கவில்லை. அதற்காக நான் கவலைப்படும் ஆள் இல்லை.”

முதல்வர் ஸ்டாலின் – உதயநிதி

“சரி, தி.மு.க ஆட்சி இரண்டரை ஆண்டுகளை நிறைவுசெய்யப்போகிறது. உங்கள் மதிப்பீடு என்ன?”

“என்னைப் பொறுத்தவரையில் தி.மு.க ஆட்சி அவர்கள் குடும்பத்திற்கான ஆட்சி. இது மக்களுக்கான ஆட்சியா இல்லையா என்பதை நீங்கள் மக்களிடம்தான் கேட்க வேண்டும்.”

“மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், கட்டணமில்லா பயணம் போன்றவை மக்களுக்கானது இல்லையா?”

“ஆயிரம் ரூபாய்க்கு ஆயிரெத்தெட்டு கண்டிஷன். இது ஒரு புரட்சிகர திட்டமா? 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தினால் அது புரட்சிகரமான திட்டம். மக்களுக்கு கொடுப்பது 1,000 ரூபாய்தான். அதில் என்ன மக்களின் மக்களின் வாழ்வாதாரம் மாறிவிடுமா? ஒவ்வொரு துறையிலும் 25% கமிசன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாக இருக்கும் கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்டுவதை எல்லாம் பார்க்க முடிகிறது. ஏன் கமிஷன் வாங்கத்தானே இதெல்லாம்?”

“சினிமா துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் பெருகிவிட்டது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறாரே?”

“தமிழ் சினிமா கார்ப்பரேட் கைகளுக்கு போய்விட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தயாரிப்பாளர்கள்தான் தன்னிச்சையாக இருக்கிறார்கள். தியேட்டர்களும் சிண்டிகேட் போல மாறிவிட்டன. எனவே தனிப்பட்ட ஒருவரை குறைசொல்ல முடியாது.”

ரெட் ஜெயண்ட்

“ரெட் ஜெயிண்ட் மூவீஸ் அதிக திரைப்படங்களை வாங்குவதை வைத்து ஜெயக்குமார் இந்த விமர்சனத்தை வைக்கிறாரே?”

“அதிகாரம் அவர்கள் கையில் இருக்கும்போது இது சாதாரணமானதுதானே! முதல்வரின் மகன், அமைச்சரின் நிறுவனம் என்றால் திரையரங்க உரிமையாளர்கள் அவருக்குத்தானே முன்னுரிமை கொடுத்து செல்வார்கள்? மனித இயல்பே அதுதானே! ஆனால் அடித்து, மிரட்டிப் பிடுங்குகிறார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்ப்பிரசாரம். திரையரங்க உரிமையாளர்களுக்கு உரிய பங்கீட்டை கொடுத்துவிடுகிறார்கள், யாரையும் ஏமாற்றுவதில்லை.”

“ஒரு சில பெரு நிறுவனங்களே அதிக படங்களை வெளியிட்டால், சிறு தயாரிப்பு நிறுவனங்கள் என்ன ஆவது?”

“சிறிய நிறுவனங்கள் நாசமாகப் போகட்டும், யாருக்கு என்ன கவலை? அவரவர்கள் பிழைக்க வேண்டுமென்றுதான் எல்லோரும் பார்ப்பார்கள். தியாகராய நகரில் நீங்கள் ஒரு பெரிய துணிக்கடை வைத்தால், அங்கிருக்கும் 4 சிறிய கடைகளை பற்றி நீங்கள் கவலைப்படுவீர்களா? 4 சிறிய கடைகள் அழிந்தால்தான் ஒரு பெரிய கடை செழிக்கும். அப்படித்தான் எல்லா தொழிலும் இருக்கிறது.”

அண்ணாமலை

“சரி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?”

“எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி எந்த கருத்தையும் சொல்வதற்கு நான் தயாராக இல்லை”

“பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர் என பல மறைந்த தலைவர்களை பற்றி எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறாரே?”

“படித்தவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை. ஹீரோ ஆங்கிலத்தில் 4 வரிகளைப் பேசிவிட்டால் தியேட்டரில் என்னவென்றே புரியாமல் கூட கை தட்டுவார்கள், அதுபோலத்தான் இருக்கிறது. யாராக இருந்தாலும் கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலக அளவு.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *