இந்த வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்திய வனப்பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோரே குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்களின் முதன்மையானவர்களாவர். முக்கியக் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட இன்னொரு ஐ.எப்.எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கெனவே இறந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர் என்பது கவனத்துக்குரியது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அதிகாரிகள், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி கிராமத்தில் நேரடி ஆய்வில் இறங்கினார்.


திட்டமிட்டபடி மார்ச் மாதம் 4-ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை, நீதிபதி வேல்முருகன் தலைமையில், நீதிபதிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர், வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வுசெய்தனர். கிராமத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆலமரம் பகுதி, வீடுகள், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பகுதி, மலைப்பகுதி என 10-க்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வுசெய்தார் நீதிபதி வேல்முருகன். ஒவ்வொரு வீதியாகச் சென்று வீடுகள், அந்தச் சூழலைப் பார்வையிட்டு, வழக்கில் சி.பி.ஐ குறிப்பிட்ட இடங்களை ஒப்பிட்டுப் பார்த்தார். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களிடம், விசாரணை மேற்கொண்டார். அந்தப் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, அங்குள்ள மக்களிடம் ஆறுதலாகப் பேசினார்.
நீதிபதி வேல்முருகன் அங்குள்ள மக்களிடம், ‘‘அனைவருக்கும் கஷ்டமான சூழல் நிலவுகிறது. வாச்சாத்தி கிராமத்தில் தற்போதுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்ற வேண்டும். அதற்கு அனைவரும் முயல வேண்டும். அனைவருக்கும் கல்வி வாய்ப்பை உருவாக்கி, குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும், அவர்களை அடுத்த நிலைக்கு முன்னேற்ற வேண்டும். கிராமத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுங்கள். உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். வசதிகள் மேம்படுத்தப்படும்’’ எனக் கூறி, வாச்சாத்தி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அங்கிருந்து விசாரணையை முடித்துக்கொண்டு விடைபெற்றார்.
களத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் (அப்போது 13 வயது சிறுமி) உள்ளிட்ட பெண்கள், முதியவர்களிடம் பேசினோம். ‘உரிய நீதி வேண்டும்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே, கண்களில் கண்ணீருடனும், கனத்த இதயத்துடனும் நம்மிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான், குற்றவாளிகளின் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com