விருதுநகர் மாவட்டத்தில், திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணியில் ரூ.4 லட்சம் இழப்பீட்டிற்கு பதிலாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்ட சம்பவம், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளறுபடியில் இரு தாசில்தார்கள் உட்பட 10 அலுவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணிக்காக வத்திராயிருப்பு, நத்தம்பட்டி கிராம புல எண்களில் 57 ஆயிரத்து 667 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3,50,33,111 ரூபாய் வழங்க, 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி நில எடுப்பு தாசில்தார் மாரிமுத்து தனது அறிக்கையை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பித்தார். இதை உறுதிசெய்து வருவாய் அலுவலரும் உத்தரவிட்டார்.

அதன்படி, நத்தம்பட்டியில் குறிப்பிட்ட புல எண்ணில் உள்ள கட்டடங்களுக்கு இழப்பீடாக, 4,09,171 ரூபாய் மதிப்பீடு செய்து, பொறியாளர் அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், அந்த நிலத்தின் உரிமையாளர் முனியம்மாளுக்கு 80,78,890 ரூபாய் வழங்கலாம் என முன்மொழிந்து, 2022 நவம்பர் 2-ம் தேதி நில எடுப்பு தனி தாசில்தார் அரசுக்கு அறிக்கை சமர்பித்தார். அதன்படி தேசிய நெடுஞ்சாலைத் திட்ட இயக்குநரால் 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி முனியம்மாள் வங்கிக் கணக்கிற்கு 80,78,890 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. நிலத்திற்கான இழப்பீடு அதிகமாக உள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தனி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் இது குறித்து மறு ஆய்வு செய்தார்.
தனி ஆய்வாளர் ராமகிருஷ்ணனின் ஆய்வின்படி, “முனியம்மாளுக்கு சொந்தமான இடத்தில் இரு வீடுகள் உள்ளன. இதில் முதல் வீடு சிறியது. இரண்டாவது வீடு பெரியது. இதில் சிறிய வீடு மட்டுமே நில எடுப்பு வரம்பிற்குள் வருகிறது. பெரியக் கட்டடம் நிலஎடுப்பில் வரவில்லை’ என 2023-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தனது ஆய்வறிக்கை சமர்ப்பித்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com
