சென்னை: இந்திய கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான எஸ்.பத்ரிநாத் கூறியதாவது:
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது முறையாக பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கிறேன். எப்போதுமே அவர்களுடைய முதல் இலக்குலீக் சுற்றில் முதல் 4 இடங்களுக்குள் நிறைவு செய்வதாகவே இருக்கும். பின்னர் அங்கிருந்து முன்னேறுவார்கள்.
கடந்த முறை அனுபவமே இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு தோனி பட்டம் வென்றுகொடுத்தார். இம்முறை ஷர்துல் தாக்குர் அணிக்கு திரும்பி உள்ளார்.முஸ்டாபிஸுர் ரஹ்மானும் இணைந்துள்ளார். மதிஷா பதிரனா காயம் அடைந்திருந்தாலும் நிச்சயம் அணியுடன் இணைவார். எந்தமாதிரியான வீரர்களாக இருந்தாலும் சிஎஸ்கே அவர்களை தங்களது பாணிக்கு மாற்றிக் கொள்வார்கள்.
இந்த சீசனில் தோனி முழுமையாக கேப்டனாகவே செயல்படுவார் என கருதுகிறேன். தோனியிடம் உள்ள தனிச்சிறப்புகளில் ஒன்று அனைத்தையும் எளிதாக கடந்து செல்வார்.
பந்து வீச்சாளர் ஒருவர் 4 சிக்ஸர்களை கொடுத்தாலும் அடுத்த 2 பந்துகளையும் அவர், எப்படி வீசவேண்டும், எப்படி வீசுவார் என்பதில்தான் தோனியின் கவனம் இருக்கும். ஏனெனில் அடிக்கப்பட்ட 4 சிக்ஸர்களை மாற்ற முடியாது. ஆனால் அடுத்த 2 பந்துகளை கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணமே தோனியிடம் காணப்படும்.இவ்வாறு பத்ரிநாத் கூறினார்.