கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குமார் குஷக்ராவை வாங்கி இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 19 வயதான அவரை சென்னை உட்பட சில அணிகள் வாங்க ஆர்வம் காட்டின. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனர் கங்குலி மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் கவனத்தை ஈர்த்த வீரர்.
டெல்லி கேபிடல்ஸ்: கடந்த சீசன் டெல்லி அணிக்கு மோசமானதாக அமைந்தது. 9-வது இடத்தில் தொடரை முடித்தது. அதற்கு முடிவு காணும் வகையில் இந்த சீசனில் டெல்லி மீண்டெழுமா?, முதல் முறை ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரிஷப் பந்த், இந்த சீசனில் கம்பேக் கொடுக்க உள்ளார். அவரது வருகை அணியில் மிடல் ஆர்டருக்கு வலு சேர்க்கிறது.
கடந்த சீசனில் டெல்லி அணிக்கு ஆறுதல் கொடுத்தது டேவிட் வார்னரின் ஆட்டம். இருந்தும் அவரது ஸ்ட்ரைக் ரேட் அதற்கு முந்தைய சீசனை காட்டிலும் சரிந்து இருந்தது. இந்த சீசனில் அதனை அவர் ஈடு செய்ய வேண்டும். முக்கியமாக இந்த சீசனில் சில போட்டிகளை விசாகப்பட்டினத்தில் விளையாட உள்ளது டெல்லி. நிச்சயம் இந்த மாற்றம் டெல்லி அணிக்கு பலன் தரலாம். ஏனெனில், டெல்லி மைதானத்தில் டிசி-யின் சக்சஸ் ரேட் பாதகமாக உள்ளது.
பேட்டிங்கில் பந்த், வார்னர், பிரித்வி ஷா, ஹாரி ப்ரூக், ஸ்டெப்ஸ், ஷாய் ஹோப் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். அக்சர் படேல், மிட்செல் மார்ஷ் உள்ளனர். நார்க்கியா, குல்தீப், ரிச்சர்ட்சன், முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.
குமார் குஷக்ரா: கடந்த சீசனில் டிசி-யின் விக்கெட் கீப்பர் ரன் சேர்க்க தவறினார். அந்த ரன் வறட்சியை போக்கு வகையில் குமார் குஷக்ரா செயல்படுவார் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. பந்த், விக்கெட் கீப்பராக செயல்படாத சூழலில் இவரது இருப்பு அணிக்கு பலம்.
கடந்த 2020 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணியில் அங்கம் வகித்தவர். அந்த அணியில் இள வயது வீரராக திகழ்ந்தார். ஜெய்ஸ்வால், திலக் வர்மா, துருவ் ஜுரல், ரவி பிஷ்னோய் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்று இருந்தனர்.
கடந்த 2022-ல் நாகாலாந்து அணிக்கு எதிராக 250 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்தார். அப்போது அவருக்கு வயது 17. அந்த சீசனில் 7 இன்னிங்ஸ் ஆடி 439 ரன்கள் குவித்திருந்தார்.
கடந்த தியோதர் டிராபி தொடரில் 5 இன்னிங்ஸ் ஆடி 227 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இறுதிப் போட்டியில் அரை சதம் கடந்தார். விஜய் ஹசாரே (2023) தொடரில் 37 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதற்கு முந்தைய சீசனில் 275 ரன்கள் எடுத்திருந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் டிரையலுக்கு 3 முறை அழைக்கப்பட்டார். அவருக்கு ஏலத்தில் ரூ.10 கோடி வரை செலவு செய்ய தயாராக இருந்ததாகவும் கங்குலி தெரிவித்ததாக தகவல்.
தோனியின் ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். அவரது தந்தை சசிகாந்த், பாப் உல்மரின் தி ஆர்ட் அண்ட் சயின்ஸ் ஆஃப் கிரிக்கெட் மேனுவல் புத்தகத்தில் இருந்து குறிப்பு எடுத்து உள்ளூர் பயிற்சியாளர் துணையுடன் மகனுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.
“பந்தை ஹிட் செய்ய வேண்டுமென நினைத்தால் நான் அதை செய்வேன்’ என தோனி சொல்வார். அதுதான் நான் அவரிடம் கொண்ட ஈர்ப்பு. நான் விக்கெட் கீப்பராக இயங்கவும் அவர்தான் காரணம். சிறிய மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்த அவர் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தவர். அவரை சந்திப்பது மகத்தான தருணம். (இதுவரை தோனியை குஷக்ரா சந்தித்தது இல்லை).
எங்கள் மாநில அணியில் சீனியரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான இஷான் கிஷன், எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். விக்கெட் கீப்பர்கள் கூடுதல் நேரம் பயிற்சி செய்தால் தான் பேட்டிங்கில் ஜொலிக்க முடியும் என தெரிவித்தார். அதை நான் செய்து வருகிறேன். டெல்லி அணியுடனான டிரையலில் ரிஷப் பந்த் அண்ணாவை சந்தித்தேன். அவர் கிளவ் மற்றும் ஃபூட் வொர்க் சார்ந்த சில ஆலோசனைகளை வழங்கினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டை பார்த்து வளர்ந்தவன் நான். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதில் பங்கேற்க வேண்டும் என விரும்புவார்கள். டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான இந்த பயணத்தை கிரிக்கெட் சார்ந்து கற்றுக் கொள்ளவும், எனது ஆட்டத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் பார்க்கிறேன். பவர் ஹிட்டிங் மற்றும் யார்க்கர்களை பவுண்டரிக்கு விரட்டும் நோக்கில் தயாராகி வருகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தினாலும் டி20 கிரிக்கெட்டில் அவர் முத்திரை பதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு டெல்லி அணி அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.
முந்தையப் பகுதி: ஐபிஎல் 2024 வல்லவர்கள் | வைஷாக் விஜய்குமார் – ஆர்சிபியில் ஒரு ‘விக்கெட் வேட்டையன்’!