மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்ததை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷமி, “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தவர் ஷமி. 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். இதில் 3 போட்டிகளில் 5+ விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி இருந்தார் ஷமி. அதன்பின் இடது கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஜனவரி கடைசி வாரத்தில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகவும் அதன்பின் அவரால் சிறிது ஓட முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவரது காயம் கவலைக்குரிய வகையில் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் சமீபத்தில் தகவல் தெரிவித்த நிலையில், ஷமிக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.