கோவை: நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது தமிழ்நாடு அணி. இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்களில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது தமிழ்நாடு.
கோவையில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான சவுராஷ்டிரா அணி, டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் சாய் கிஷோர், 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு, முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்த நிலையில் சவுராஷ்டிரா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்களில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் சாய் கிஷோர் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்கள் மற்றும் 60 ரன்கள் எடுத்திருந்த அவரே ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.