4-வது டெஸ்ட் | சதம் விளாசி ஃபார்மை மீட்ட ஜோ ரூட் – முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 302/7

ராஞ்சி: இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அணியை மீட்டெடுக்கும் விதமாக சதம் விளாசி அசத்தி தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளார் ஜோ ரூட்.

ராஞ்சியில் இன்று தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பென் டக்கெட் – ஜாக் கிராவ்லி ஓப்பனிங் செய்தனர்.

9 ஓவர்களில் 47 ரன்கள் என்று எடுத்திருந்த இக்கூட்டணியை அறிமுக பவுலர் ஆகாஷ் தீப் பிரித்தார். 11 ரன்கள் எடுத்திருந்த பென் டக்கெட் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். அதே ஓவரில் இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தினார் ஆகாஷ் தீப். அதே ஓவரிலேயே 4வது பந்தில் ஆலி போப் பூஜ்ஜியத்தில் எல்பி மூலம் அவுட்டாக்கினார்.

இதன்பின் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 42 பந்துகளில் 42 ரன்கள் என்று நன்றாக ஆடிக் கொண்டிருந்த ஜாக் கிராவ்லி ஆகாஷ் தீப்பின் அடுத்த ஓவரில் அட்டகாசமான இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். ஆகாஷ் தீப்புக்கு அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட். அதுவும் முதல் 3 விக்கெட்.

ஜானி பேர்ஸ்டோ 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்களை அதிரடியாக எடுத்து அஸ்வினின் பந்துவீச்சில் எல்பி ஆனார். இதன்மூலம் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்கள் 100 விக்கெட் என்ற டபுள் சாதனையை நிகழ்த்திய 4வது வீரர் ஆனார்.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களுக்கு ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டானார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், சீனியர் வீரர் ஜோ ரூட் நிதானம் காண்பித்தார். அவருக்கு பக்க பலமாக பென் போக்ஸ் இருந்தார்.

போக்ஸ் 47 ரன்கள், டாம் ஹார்ட்லி 13 ரன்கள் என சிராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தாலும், ராபின்சன் உடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 106 ரன்கள், ராபின்சன் 31 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.