மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா பிப்.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 6-ம் நாள் சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை, 7-ம் நாள் (பிப்.21) பிச்சாடணர் புறப்பாடு நடந்தது.
அதனையொட்டி 8-ம் நாளான நேற்று முக்கிய விழாவான திருக்கல்யாணம் இன்று காலையில் 11.19 முதல் 12 மணிக்குள் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் இம்மையிலும் நன்மை தருவார், நடுவூர் நாயகி அம்மன் அருள்பாலித்தனர்.
அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் தீபாராதனை செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்று இரவு யானை வாகனம், புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடு நான்கு மாசி வீதிகளில் நடந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.23) காலை 8.29 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். நாளை 10-ம் நாள் (பிப்.24) காலையில் தீர்த்தவாரி பூஜையும், அன்றிரவு 9 மணியளவில் கொடி இறக்குதல் நடைபெறும். 11-ம் நாள் (பிப்.25) காலை 10.30 மணிக்கு உற்சவ சாந்தியும், நண்பகல் 12 மணிக்கு பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.