“என் அடுத்த பட ஷூட்டிங்கை தொடங்கிவிட்டேன்” – ஆமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

பெங்களூரு: பாலிவுட் நடிகர் ஆமீர்கான் நடிப்பிலிருந்து ஓராண்டு விலகியிருந்த நிலையில், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருதாக தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியானது ஆமீர்கானின் ‘லால் சிங் சத்தா’. ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் தழுவலாக உருவான இப்படம் வெற்று பிரசாரத்தால் பெரிய அளவில் மக்களிடையே சென்று சேரவில்லை. இதையடுத்து தான் நடிப்பிலிருந்து ஓராண்டு விலகியிருப்பதாக நடிகர் ஆமீர்கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாபடா லேடீஸ்’ (Laapataa Ladies) படத்தின் சிறப்பு திரையிடல் பெங்களூருவில் நடைபெற்றது.

இந்தப் படத்தை ஆமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆமீர்கானிடம் அவரது அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கடந்த வாரமே என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டேன். ‘சிதாரே ஜமீன் பர்’ என படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இது ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் அடுத்த கட்டம்.

இரண்டு படங்களின் கதையும் கதாபாத்திரங்களும் வெவ்வேறானவை. ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படம் உங்களை கண்ணீர் சிந்த வைத்திருக்கும். ஆனால் இப்படம் உங்களை சிரிக்க வைக்கும். பிரசன்னா இயக்கி வரும் இப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.